Wednesday, July 30, 2014

Tuesday, July 29, 2014

சிவஞான தேசிகம் Sivagnana Dheshigam

                                            திவோதய ஷடக்ஷரோப தேசம் என்னும்
                                                சிவஞான தேசிகம் 
                                                                        ஓம் 
                                                                ஸ்ரீமத் குமரகுருதாச குருப்யோ நம:


பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச முனிந்திரர் தம்முடைய அனைத்துப் படைப்புகளிலும் குறிப்பிட்டவாறு, அவர்களின் அருளாற்றல் அனைத்தும் ஸ்ரீ  குமாரபரமேஸ்வரனது திருவருள் நோக்கே ஆகும்.

           தங்கள் 13ஆம் வயதினில் சுவாமிகள் அருளிய " கங்கையைச் சடையிற் பரித்து " எனும் முதல் திருப்பாடலை எவர் நோக்கினும், இவ்வுலகில் பிறந்த ஒருவர் படித்து புலமைப்    பெற்று எழுதிய தாக அதைக் கணிக்க முடியாது.      சைவ   உலகத்தவர்   யாவர்க்கும்   எளிதில்      உபயோகமாகும் பொருட்டு,பல நூல்களின்  சாரத்தை  எல்லாம்  ஒன்றாய்  திரட்டி  உள்ள  மாபெரும்  அருள் நூலே 32 வியாசங்களை உள்ளடக்கிய சிவ ஞானதேசிகம். 1000 வினாவு தரங்களாய் 10 படங்களுடன் 32 வியாசமாக உள்ளதாகும் இந்நூல்.

           சுவாமிகள் இயற்றியருளிய 32 வியாசங்களில் 24 வியாசங்கள் காணாமல் போயிற்று. 8 வியா சங்கள்  இப்போது இருக்கின்றன. 1893 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் வியாசத்தின்  முன்னு ரையை நோக்கும்போது அனைத்து வியாசங்களும் அச்சிடப்பட்டு, இரண்டு பெரிய புத்தகங்களாக பைண்டு செய்யப்பட்டுள்ளன எனும் குறிப்பு தெரிகின்றது.

          இப்போது முற்றிலும் கிடைக்கப் பெறாதவை அடியில் காணும் 24 வியாசங்கள் ஆகும்.

1. நான்காவது : பிரம்மாவின் சிருஷ்டியைக் குறித்த வியாசம்.

2. ஐந்தாவது : சுவர்க்கத்தையும் நரகத்தையும் குறித்த வியாசம்.

3. எட்டாவது : சத்தியின் பூர்வத்தைக் குறித்த வியாசம்.

4. ஒன்பதாவது : தேவர் ஆராதனையைக் குறித்த வியாசம்.

5. பத்தாவது : திரு லீலைகளைக் குறித்த வியாசம்.

6. பதினொன்றாவது : மாயையைக் குறித்த வியாசம்.

7. பன்னிரெண்டாவது : கடவுள் காருண்யத்தைக் குறித்த வியாசம்.

8. பதிமூன்றாவது : கடவுள் வல்லமையைக் குறித்த வியாசம்.

9. பதிநான்காவது : மதி விதிகளைக் குறித்த வியாசம்.

10. பதினைந்தாவது : பிறவியைக் குறித்த வியாசம்.

11. பதினாறாவது : சூதைக் குறித்த வியாசம்.

12. பதினேழாவது : லாகிரியைக் குறித்த வியாசம்.

13. பதினெட்டாவது : வலக்காரத்தைக் குறித்த வியாசம்.

14. பத்தொன்பதாவது : கள்ளத்தைக் குறித்த வியாசம்.

15. இருபதாவது : வியபிசாரம் முதலியவற்றைக் குறித்த வியாசம்.

16. இருபத்துரெண்டாவது : அறத்தைக் குறித்த வியாசம்.

17. இருபத்துமூன்றாவது : சிற்றின்பம் பேரின்பங்களைக் குறித்த வியாசம்.

18. இருபத்து நான்காவது : மோக்ஷத்தையுஞ் சுவர்க்கத்தையும் குறித்த வியாசம்.

19. இருபத்தைந்தாவது : சரியையாதி நான்கு பாதங்களைக் குறித்த வியாசம்.

20. இருபத்தாறாவது : கல்வியைக் குறித்த வியாசம்.

21. இருபத்துஏழாவது : பெரியாரைக் குறித்த வியாசம்.

22. இருபத்து எட்டாவது : குருவைக் குறித்த வியாசம்.
23. இருபத்தொன்பதாவது : சீடரைக் குறித்த வியாசம்.
24. முப்பதாவது : ஐம்பொறியடக்கத்தைக் குறித்த வியாசம்.
          மேலே குறிப்பிட்டபடி ஸ்ரீமத் சுவாமிகள் காலத்திலேயே அனைத்து வியாசங்களும் அச்சிடப்பட்டுள்ளன எனும் விவரம் இருப்பதால் ஒரு சில பிரதிகளாவது எங்கேனும் எவரிடமேனும் இருக்கக்கூடும்.
          மேற்கண்ட வியாசங்களில் ஏதாவது, மெய்யன்பர்களிடம் இருக்குமாயின் எங்களுக்குத் தெரிவித்தால் உடனே நகல் எடுத்துக் கொண்டு, கொடுத்து விடுவோம். அனைத்து வியாசங்களும் அடியார்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.

*********************************************************************************

                                                      பாயிரம்
                                                       காப்பு
                                               
                                         கலிவிருத்தம்

ஆதி யாயு மனாதியு மாய்ப்பரஞ்                                       
சோதி யாயுந் துலங்கு சர்வேசுர


பூதி யாமெய்ப் பொருள் புகழ்ஷண்முக 

சோத ரன்கய துண்டனைப் போற்றுவாம்.

                                     வழிபடு கடவுள் வணக்கம்         


                                    எழுசீரடியாசிரிய விருத்தம்.

சொல்லும் வேத சொரூப மாகி சொரூப மும்ம தீதமாய்                                           எல்லை யற்ற வியோம மாகி யெங்கு மான பராபரம்                                                 இல்லை யென்று மிருப்ப தென்று மிசைக்கொ ணாதொரு சூக்கும                     வல்ல பப்பொரு ளென்னு ளத்துறை மாகு கன்றனை வாழ்த்துவாம். 

                                
                                 அறுசீரடி யாசிரிய விருத்தம்  

அருமறை பெருக வாண்ட வகத்தியர்க் குபதே சித்த                                                    குரவனைக் கீரற் கன்று குணவடி கொடுத்திட் டானை                                                அருணிறை யருணை யானை யடிமைகொண் டானை யெந்தன்                         இருதய முறையா சானை யேத்தியே போற்றி செய்வாம்.       

                                        
                                                   நூற்பயன்
                                  
                                             கலி விருத்தம்  


கற்ற வற்குங்கல் லாதவர்க் கும்மிது                                                                                   உற்ற செத்தை யொழிக்கு  மறைநெறி                                                                                 பற்றும் பன்பு பயிற்று மிருவகைப்                                                                                         பற்று நீத்துப் பரத்தி லிருத்துமே.      
                                              
                                                 இதுவுமது

வான நாயகன் மான்மியஞ் சொல்சிவ                                                                               ஞான தேசிக மென்னுநன் னூலிதைத்                                                                                 தானஞ் செய்பவர் சாற்றுவர் கேட்பவர்                                                                               ஈன மற்று விகபரத் துய்குவர்.      

                                        
                                               நூற்பொருள்                                                      
                       
                              அறுசீரடியாசிரிய விருத்தம்

சதுர்மறை சாத்தி ரங்கள் சாற்றிய புராண மற்றும்                                                       விதியியல் கலைக ளுண்மை விளக்கியுட் சமய நாட்டிப்                                         பதிபசு பாசங் காட்டிப் பரஞ்சுட ராறெ ழுத்தைக்                                                             கதிபெற வுபதே சிக்குங் கணக்கிது காட்டு மாமால்.

                         
                      நூலியற்றிய காரணமும் அவையடக்கமும்
                                     
                                எழுசீரடியாசிரிய விருத்தம்

ஆதார தேவ வருள் வந்து கூடி யாநந்த வாழ்வு றுகுரு                                             ஆதார மான முந்நூலி லுள்ள வதிகார முறைபி றழ்வுறா                                     ஆதார மாக வாதாடு சீட ரறியவறி வித்த திதனை                                                       ஆதான மாக மாபேணு மறிஞ ராள்வினை பரிந்து கொள்வார்.

                              
                           ஆக்கியோன் பெயர் முதலியன
                               
                 எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

பொய்யாத சீராமன் பூசை கொண்ட                                                                                              புநித சிவம் வளரும்ரா மேச்சுரத்தி                                                                                 னையணவு பாம்பனெனும் பதி யுடையா                                                                           

       னலநிகழு மகம்படிய மரபில் வந்தோன்                                                                     ஐயேறு மைமுகவ னருளா லேசாத்                                                                                              தப்பனுத வப்பாவு வெனுநா மத்தோன்                                                                         ஐயாறு ளோனடிக்கு மரகு ருதா                                                                                                      சன்னென்ற பெயர்வாய்ந்தி தளிக்க லானான்.
                                
                                   பாயிர முற்றிற்று.
                               
                            குமரகுரு கோமான் திருவடி வாழ்க.
                                                 -xxxxxxx-xxxxx-xxxxxx-
                                     
                                  நூல் வரலாறு


உபராக சராங்கனுக்கு உண்மைப் போதகன்  போதிக்க வெளியாதல்.
       அனுமான தேச வாசியான உபராக சராங்க னென்பவன்  தனுகரண புவனபோகங்களைத் தனதென நேசித் தனுபவித்து வந்ததாலெய்திய பவப்பிணிகள் அவனினெவ்வித முயற்சியானுந் தொலையாமை கண்டு இனி யாஞ்செய்வ தொன்றுங் காணோம் ஆனால் கடவுள் வத்சலமுளார் களெனு மகான்கண்மூலம்  இது  தீர்ந்தா    லொருவாறு      தீருமென்றெண்ணி   தன்பதி     விட்டு   ஸ்ரீ பகவானை நோக்கித் தவமியற்றற் குரித்தாகிய சிரத்தை மாநகரில் வந்திருக்குங்கால் ஆங்குள்ள உண்மைப்போதகன் என்னும் விற்பனன் தானே வெளிப்பட்டான். அவனை உபராக சராங்கனுற்று நோக்கி இவர் புண்ணியமுள கண்ணியவானாயிருக்கலாம். இவரிடத்து நந்துயரை நவில்வது தகுதியென்றுள்கி ஓ! உத்தம புருஷரே! எமக்குற்ற துன்பு தீர்ந்தருளுமென்று தண்டாகாரமாய் வீழ்ந்து வணங்கி வாழ்த்தினான். அதுகண்ட உண்மைப் போதகன் அவனின் பெயரூரெல்லாந் தீர்க்க விசாரித்து நீ அஞ்சேலென்றாதரவு கூறி ஏ! ஆர்வமுடையாய்! நின்பதி துறந்து விஷேசமுள்ள விப்ப தியை நீ மிதித்த போழ்தே, நின் கம்பலைகளனைத்துங் கால்கூட்டியோட்டம் பிடிக்கத் தலைப் பட்டுவிட்டன. ஆயின், கடவுளை நன்றாய்த் திரிகரணமொத்து விசுவாசித்து அன்பு பாராட்டி யடிமைத்தரம் பூண்பாயேல், உற்ற பவப்பிணி யொல்லையி லொழியுமென்றான். அஞ்ஞான்று அவன், ஓ! ஐயா! கடவுள் என்றவோர் மொழியை யான் கேட்டதும் எழுதப் பார்த்ததுமே யொழிய அவரை யான் கண்டிலேன். அவரித்தன்மை யுடையாரென்று மறிந்திலேன். ஆகலால் சுவாமிகள் தானே அது நன்கு புலப்படத் துலக்கமாய்ச் சொல்லி யருளவேண்டு மென்றனன். அஃதோர்ந்த போதகன்: அப்படியாயின் திராவிட வசனரூபமாய் குரு சிஷிய சம்வாதமாயுள்ள திவோதய சடக்ஷரோபதேச மென்னும் சிவஞான தேசிகமாம் நூலைச் சம்பூரணமாய்க் கேட்பாயேல் பிறவும் விசாரிக்கவேண்டிய தொன்றுமிராது. நின் பழம் பவநோயுஞ் சிதைந்துபோம் என்றது கேட்ட உபகார சராங்கன் --------- அங்ஙனம் மிகவும் வயாவுற்று  ஓ! மெய்யுடையையா! அப்படிப்பட்ட குரு சிஷிய சம்வாதம் எப்போது நிகழ்ந்ததென்றும், அஃதெப்படி யுண்டாயிற்றென்றும், அக்குரு சிஷிய ரெங்குளாரென்றும் அவரபிதான மின்னதென்றும், அவர்கதி யென்னவென்றும் பிரசாதித் தருளவேண்டு மெனலும்; அவ்வுண்மை போதிப்போன், வழிபடு கடவுளை வந்தித்து வழங்கத் தொடங்கினான்.
                                                    
                                                        கடவுட் பிரதாபம்
              
              அநந்தரம் ஜ்ஞானாந ந்தைகஸ்வரூபம் ஜ்ஞான சக்தி யாதி கலியாணகுண கணநிலயம், சர்வஜகத் ஸர்க்கஸ்திதி ஸம்ஹார கர்த்தவ்யம், தர்மார்த்த காமமோக்ஷாக்ய சதுர்வித பலப்பிரதர விலக்ஷண குருமூர்த்தம், நித்யம், நின்மலம், நிராமயம், நிரம்பரம், நிரந்தரம், சச்சிதாநந்தம், சுத்த சித்த முக்த பரமான்ம பாபநிவாரண காருண்ய சர்வ ஜீவதயாபர விராட் பரப்பிர்ம்மமென விளங்கா நின்ற  ஸ்ரீகுமாரஸ்வாமியின்  பதாம்  புஜங்கட்கு     ஏகாங்க   துவிதாங்க   திரிவிதாங்க   பஞ்சாங்க சாஷ்டாங்க, அஷ்டாங்கமாக வந்தித்து வழிபடு வார்கட்குச் சிந்தித்த பொருள் கைகூடும்.
                                                                 ஓம் தத்ஸத்.

#################################################################################

                                                    
                        குரு சிஷிய சரித்திர சூசகம்

ஏ! உபராகசராங்கா! கேள். கலியுகாதி வருஷம் 4990-ன் மேற் செல்லா நின்ற சாலிவாகன சகாப்தம் 1811 - ல் நிகழும் சர்வதாரி வருஷத்தில் அந்த சம்வாதம் தாராளமாய் நடந்ததாகும். விவரம் - பஞ்ச பூத பிரவிருத்தியால்  நல்வள  மோங்கிய  அங்க  தேசத்திலுள்ள  ஹிருதயபுரி  வாசியாகிய  விவேக பூரண  னென்னும் வித்யாரண்ய ஸ்வாமிகளென்ற ஓர் சத்புருஷனிடம் என்று மிடைவிடாப் பணி விடைக் கெதிர்பார்த்திருந்த  விஷயப்  பிரியனாகிய  குதர்க்கியென்னும்  ஓர்  சிஷியன்  அதிச்சிறிய பிராயம் தொட்டு அவரண்டையிலிருந்தனன். அப்பாலவனுக்குக் கௌமார திசை சமீபிக்கும் போழ்து அக்குருவுக்குரிய பணிவிடைகளை மறந்து, விஷய சுகங்களை வியந்து எக்காலிவரைக் கடந்தேகுவோமென் றெண்ணுற்று, அவ்வாசிரியர் பராமுகங்கண்டு, திருஷ்டிக்குத் தென்படாது விரைவில் விரைந்து வேற்றுழி புக்கனன்.
          
            அவ்வாறு புக்கிய விஷயப்பிரியன், பல்லிடங்களுஞ் சென்று பல் பொருள்களையு மிச்சித்துத் திரியா நிற்கையில், தனக்குத் தெரிந்த சுவல்ப வித்தையைக் கொண்டே தன் கருத்திற் கிணங்கலான சிற்றின்பக் கதைகளையும்  கட்டுக்  கவிகளையும்  சங்கீதப் பாடல்களையு  மிக விரும்பிச் சிரவணஞ் செய்தும், அப்புத்தகங்களை  அகோராத்ரம்  வாசித்தும் மனனம் பண்ணியும், அதின் சங்கதிகட்காகச் சித்த சன்னதை கொண்டும்  வரும் போழ்து,        தனக்குள்ள  நுண்ணிய  மனதைத்  துணை கொண்டு வேதாகம புராணப் பிரசங்கிகளிடம் பலமான விபரீத குதர்க்கங்களைச் செய்யவுந் தொடங்கினான். அப்படி அவன் செய்யும்   விவாதங்கட்   கனேகர்களாற்றாது மதி மருண்டேகினார்கள். இவ்வண்ண மாய்க் குதர்க்கங்கட்குரிய  விர்த்தாங்தங்களை  வெளியிடுவதற்காக  உட்சமய  புறச்சமயங்களினூல் களையும் கற்றுக்  கொள்ளவுமானான்.   கற்றதினும்   தன்னுடைய   யுக்தியாகிய   சாமார்த்தியத்தால் அளவறு நாவன்மை கொண்டு ஆதியு மந்தமு மற்றென்றுமுள  சர்வேசுவரனையு மில்லை யெனவே மனப்பூரணமாய்ச்  சாதித்து  நிரீச்சுரவாதியாய்,  தன்னுட்டானே  இந்த  ஜீவேஸ்வர  ஜகத்தையும் ஓர் வகையாய்த் தீர்மானித்திதனை யெண்ணலுற்றான்.
          
             ஆதியில் நாம் பணிவிடை புரிந்த குருவானவர், ஏதோ தேவனொருவனுண் டென்றது போற் பிதற்றும்  வீண்   கதைகளை நம்பி  அநேகமாய்த்  தன்னுடைய  இஷ்ட  காம்யார்த்த  நோக்கத்தை யெல்லாங் குறைத்து இலவு காத்த கிள்ளை போலல்லவா இன்னுமிருக்க வேண்டும். ஐயோ என்ன துன்பம்!  அவருக்கு  நாம்  இது  காரியத்தைச்  செவ்வென  வெடுத்துரைத்து  அவரவலப்  பிடிப்பை விட்டு நீக்குவது நன்றென வுள்கியும்,  நம் வழியிலவரைத்       திருப்புவது தான் தகுதியெனவுமாகச் சிந்தித்து அவ்வாசிரிய ரிருப்பை நோக்கினான் குதர்க்கி.
            
            அங்ஙனமவனேகிய தெவ்வண மிருந்த தென்னில்,    உவர் சம்பந்தமாயுள்ள ஓராறானது, பல வாவி கூவங்களையுந் தன் சார்புறப் பரவியெழுந்து,      நன்னீர்ச் சாகரத்தையுங் தன்னின மாக்குவே னென, அடர்ந்து பாய்ந்தது போற் காண்டலாம்.
            
           இவ்விதமாயெய்திய அவ்விஷயப் பிரியன், ஆசாரியராகிய வித்யாரண்ய ஸ்வாமிகளைத் தரிசித்து அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, ஓ! ஐயன்மீர்! யான் தங்கள் சிஷியனாகிய விஷயப் பிரியனாகும்; இதன் முன்னந் தேவரீர் செலவின்றிச் சென்ற  தொன்றே தமியேன் பேரிற்றாழ்வு; அதை க்ஷமித்துக்கொண்டென்னை  யாசீர்வதிக்கப்  பிரார்த்திக்கின்றே னென்றனன். அம்மொழி கேட்டகுரவர் ஓ! விஷயப் பிரியா! நீ இயற்றிய தவறெத்தனையாயினும் அவைகளை யாஞ்சிந்திக் கத்தக்க தெட்டுணையேனுமில்லை. நீ விவேகியாயி யங்கவேண்டுமென்ற தொன்றே சிந்திக்கத் தக்கதாயிருக்கும். ஆதலால் நீ இதுவரை எந்நிலைமையுற்றாய்? இஞ்ஞான்றிவண் வந்ததேதுக்கு? இயம்புதியென்றனர் ஈதுரையோர்ந்த குதர்க்கி குயிலலுற்றான். ஓ! எனது நற்புருஷோத்தம சாமீ ! யானென்னுணர்வுக்கியன்ற  மட்டும்  நல்ல  தீர்மானத்திலேயே  இருக்கின்றேன். அதில் தங்களு டைய தீர்மானமுஞ் சாதிப்பு மெத்தன்மைத்துள? அதை எனக் கறிவிக்க வேண்டுமென்றும் அப்படி யறிவிக்குங் காரியங்கட்கு முதற் காரணமெது வென்றும் முதலிற் சுருக்கி யுரைக்கக் கோருகின்றே னென்றனன். அதற்கு வித்யாரண்ய சுவாமிகள் விளம்பலுற்றார்; கேளா யன்புடையாய்! எக்காரிங் கட்கு முதற்காரணம் ஈஸ்வரனாகிய கடவுள் இதையலாது வேறு காரணம் யாதொன்று மில்லவே யில்லையென்றனர். அதைச் செவிக்கெடுத்த சிஷியன் தன்னுடைய அபிப்பிராயத்தை யதிஷ்டித் திடற் கிதுதான் றருணமென்றெண்ணி குருவுடன் குதர்க்கங்கள் செய்ய முயன்றான்.
                                                
                                      குரு சிஷிய சரித்திர சூசகம் முற்றிற்று.




                                                                    1-வது
                                             கடவுளைக் குறித்த வியாசம்
                                                              சம்வாதம்
                                                                      (1)
சிஷியன் : கடவுளென்பது என்ன?

குரு: என்றும் நித்திய வஸ்துவாய், எங்குஞ் சர்வ வியாபகமாய், என்றுஞ் சர்வ காரணமாய், அருவாய், உருவாய்  சர்வ வல்லபமாய்த் தானதுவா யிருப்பதெதுவோ அதுவே கடவுளாம். அக்கடவுளே சர்வ நியாயமுள்ள சத்திய பரிசுத்த தேவனாவார்.
                                                                      (2)
சிஷி: இப்படிப்பட்ட வாக்கியங்க ளாகச் சொல்லியதைத் தவிர அந்தக் கடவுளென்றொருவர் எவற்றுளுந் தலையாயிருக்கிறாரென்பதை நான் அடியிற் சொல்லுங் காரணங்களால் இல்லை யென்றே மெய்ப்பிக் கின்றேன்.    தாங்கள் ஞாபகமாய்க்  கேட்கவேண்டும்.     சாதாரணத்தில் மனிதர்களிலனேகர்கள் தங்கட்குச் சங்கடஞ் சம்பவித்தபோழ்து, கண்கெட்டவனே! சண்டாளா! பாழுந் தெய்வமே யென்று நினைந்த வண்ணம் ஏசுவதையும், அநியாயமாய்க் கொலைகள்  செய்வ தையும், சத்திய விரோதமாய் மனதாரப் பாவங்கள் செய்வதையும் பெரும்பாலும் நாம் கண்ணாற் பார்த்து வருகிறோம். இவைகளெல்லாம் கடவுளானவர்க்குப் பிரியமில்லாது போற் காட்டுந் தங்கள் சம்மத நியாயப் படிக்கு அக்கடவுள் அப்போதைக்கப்போது அப்பாவங்கட்குரிய ஜீவர் களைத் தண்டிக்கப் படாமல் இவ்வுலக விராஜாங்கத்தாரால் ருஜுவறிந்து ஏதோ நியாயம் புலப் பட்டமட்டும் செய்வதிலும் அனேகமாய்த் தப்பியும் விடுகிறது. அனேக குற்றங்கள் மறைவாகியும் விடுகிறது. இது நிச்சயமே. இவைகளையெல்லாந் தெரியுங் கடவுளிருப்ப துண்மையாயின், அவர் சத்தியத்தின் பொருட்டு வெளிப்பட்டு அக்காரியங்களை யெப்போதாவது செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்யவுமில்லை.        ஏதோ முன்னமே  சிலதுகள்  அப்படி நடந்திருப்பதாகச் சொல்கிற வார்த்தைகளும்  புத்தக வாக்கியங்களுமே தவிர நாம் நம்பற்குரிய தொன்றுமில்லை. அன்றி, தாங்க ணவின்றபடி கடவுளரூபி யெனினும் இப்படிப்பட்ட சமயங்களில் நியாயத்தினிமித்தம் அவரு டைய சர்வ வல்லமை போய்விடத்தக்க தல்ல. மேலும், நீதி பரிபாலனத்தினிமித்தம் ஒருவனைய வரே தண்டிக்கும் பக்ஷத்தில்,              மற்றவனும்  அநியாயஞ்  செய்யத் தக்க தன்று.  அது  விடயம்  மிக வேண்டியதில்லை. ஆகாயத்திலிருந்து ஒரு கல்லை அவன்றலையில் விழும்படி செய்தாலே போதும். இப்படிக்கெல்லாம்  ஒன்றுங்  காணப்படாததால்,  யாவு  மனிதர்களுடைய  சுபாவத்திற்குத்  தக்க செயலாகவே யிருந்து கொண்டிருக்கிறதென்பதுண்மையே இதனால் கடவுளென் றொன்றி ல்லை யென்றும் அது வலியவரை எளியவர் காரியங் கொள்வதற்காக வேற்படுத்திய வற்புறுத்து வாக்கிய மென்றும் நிச்சயமாயறியலாமே.

குரு: நீ, யிப்பொழுது சொன்ன யுக்தி சமாசாரங்களெல்லாம் கடவுளை யில்லையென்று காட்டியா போகும் காட்டாது ஆதியந்த மற்றவனான பராபரன் நீதி பரிபாலனமானது மிகவும் பரிஷ்காரமாக வேயிருக்கிறது. கடவுள்,  ஒருவன்  செய்த  அநியாயத்தைக்  கண்டு  தண்டிக்க  உலகத்தி லரசர்களையு நியமித்து அந்தப்படி குற்றத்திற்கான தண்டனையையும் விதித்து வருகிறார். நியாயாதிபதி நியாய த்தைக் கொடாவிடில்  அவன்  செய்யும்  அநியாயத்திற்கு அவன் வேறு தண்டனையை யடைவான். தகுந்த ருஜுவேற்படாமற் குற்றத்திலிருந்து ஒருவன் விடுதலை யாவானே யாகில் அந்த ருஜுவை எவனாற் கெடுக்கப்பட்டிருந்ததோ அவனையும் அதற்குடன் பட்டவனையும் தேவ நியாயத்திற் றெண்டிக்கப்படும்.இப்படிக்கெல்லாம் வல்லவனாகிய  கடவுள்  எவ்விடத்து  மிருந்து  நியாயங் கொடுக்கிறாரே  யலாமற்  கொடாமல்  விடத்தக்கதன்று.  இவ்வாறு  அவருடைய  நீதி  பெருகிக் கொண்டிருக்கும் பொழுது அவர் ஒருவன் றலையில் ஆகாயத்திலிருந்து கல்லைத் தூக்கிப் போட வேண்டிய தவசியமன்று. நிற்க, ஒருவன்  குற்றஞ்செய்த காலமானது தீவினை யென்னும் விதையை விதைத்த காலமாகும். அவ்விதை முளைத்துத் தழைத்துப் பூத்துக் காய்த்துப் பழுக்கும் போது பலனா ய்வருகும். ஆதலால், தேவ நிந்தை முதலியவைகளுக்காக, அவரப்பொழுது கோபப்பட வேண்டிய துமில்லை. அவர் மிகவுஞ் சாந்தமுடையவரே.
         நீ, எல்லாம்  மனிதருடைய சுபாவத்  தன்மையென்று காட்டுகிறாய். அந்தப்படி  மனிதருடைய சுபாவ காரியங்களுமுண்டு அதிலற்பத்தொழில்க  ளெல்லாஞ் ஜீவர்களையே குறிக்கும். பஞ்ச  பூதங் களாகிய ஆகாயம்  வாயு  அக்கினி  ஜலம்  மண் முதலானவைகளை மனுஷன் சிருஷ்டிக்கவறியான். அவைகளைக் கெடுக்கவு மறியான். ஆதலால்: மலரகிதனாகிய சருவேசுரன் ஒருவ னுண்டென்றும், அவைக ளவனாற்கூடு மென்றும், அவைகள்  பிரமணாதீதமான பெரிய காரியங்களென்றுந் தெளிவா கவே யிருக்கின்றன.
                                                                           (3)
   சிஷி: பஞ்சபூதங்களை மனிதனுண்டு பண்ண மாட்டா னென்றும், அவைகளை யிரக்ஷிக்கவுங் கெடு க்கவு மறியானென்றுந் திருஷ்டாந்தஞ்செப்புவது  சரியன்று.  ஏனெனில்,  நீராவி  எந்திரத்திலிருந்து ஜலத்தையும்,  வாயுவில்லாத  விடத்தில்  ஊதும்  அல்லது  அசையும்  எந்திரத்தால்  வாயுவையும், அக்கினியில்லாத வமயம் கந்தக மருந்து அல்லது கடினக்கடைசலிலிருந்து அக்கினியையும், சில ஓஷதிகளின் சேர்க்கை சிகிச்சையின் மூலம் மண்ணையும், ஆகாயந் தோன்றா விருட்டறைக்குள் பிரகாசத்தைக் கொடுக்கும்படிக்கான தீபமேற்றி அவ்வுழி நல்ல ஆகாயத்தையும், சகஜமாய் மனிதர்க ளிப்பொழுது முண்டுசெயத் தாங்களும் வீக்ஷணித்திருப்பீர்கள். அவைகளை இரக்ஷித்து நசிப்பிக்குந் தன்மையும் அப்படியே கூடும். அதுபோற் பெருக்க வனையுந் திரமுடை மனிதருமுண்டென்று நிச்சயிக்கலாமே - தாங்களிதன் மேலும் வலத்திடத் துணிவது யாதோ?

குரு: மனிதன், அப்படிக்கெலாங் காரியப்படுத்தி எந்த வானத்தையும், எந்த பூமியையும் சிருஷ்டி த்தானோ  வறியேம்! மேலும் மனிதன் அவைகளைச் செய்வது எந்தப் பொருள்களைக் கைக்கொண்  டென்பதை நீ யுய்த்துணரா துரைத்த தறிவீனம்! கேள், ஒவ்வொரு பொருளின் உதவியால் ஒவ்வொ ன்றை மனிதன் விருத்தி புரிவதுண்மையே. ஆதலால், அந்தப் பொருள்களை யுண்டு பண்ணியது முதலாவது யார்? அவைகளைப் பின்னுதவிகொண்டு காரியஞ் செய்யுமனிதனுக்கு ஆதியான பிதா மாதாக் கடான் யார்? என நன்கோரில் அவ்வுண்மை வெளியாமே.
                                                                                     (4)
சிஷி: ஆரம்ப காலத்தில் இயல்பாய்த் தோன்றிய அசர சரங்களிலிருந்து எப்பொருளும் ஜனித்ததா யிருக்கும். அவைகளில் ஒரு மனிதனும் ஒரு மனுஷியும் விசேஷமாய் அப்பொழு திருந்திருக்கலாம். அவர்களிலிருந்து மகமகவாய் இரங்கி வந்தவர்களா யிருக்கவேண்டியது சர்வ மனிதர்களும் அந்த ஆதி பிதா மாதாக்கள் மரித்தவர்களாயிருக்கலாம். அவர்களின் புத்திர பௌத்திராதிகளான நாம் முதலான ஜீவர்களைக் கடவுள்  படைத்தார்.  படைத்தாரென்று கதைப்பது அல்பமு மொவ்வா தொழியும். மேலும் அப்படிக் கொருவனிருந்து படைத்துக் கொண்டிருப்பதென்னில் அந்தரமாய் ஒரேயிடத்திலிருந்து ஒவ்வொன்றாய் வந்துகொண்டே  யிருக்கவேண்டும். அப்படி வரவுமில்லை. தவிர, அனங்காகமம் ஆயுள் வேத முதலானவைகளில் சொல்கிறபடி ஸ்திரீ புருஷா ளிடத்தில் குன்மரோக முதலிய மலடுகளிருந்தால் கருப்பந் தரிக்காதென்றும், ரஜஸ்வலையான 16 தினத்திற் குட்டான் கருப்பம் ஜனிக்குமென்றும், அதில் ஒற்றைப்பட்ட நாட்களில் பெண்ணென்றும், இரட்டை ப்பட்ட நாட்களில் ஆணென்றும், கலவிக்குக் குறிக்கப்பட்ட காலத்தைத் தவிர கலந்த கருப்பத்திற் கருத்தரித்தால் அது அற்பாயு ளென்றுமுள்ள பலிஷ்ட பிரமாணங்களாலும் மனுடர்களின் செயலி லேயே ஆண்,பெண் ஆயுள்பாக முதலானவைகளெல்லாம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அன்றி, ஆணும் பெண்ணுந் தேக சம்பந்த மில்லாவிடில் கடவுள் ஜீவனையெப்படிப் படைப்பரோ! இப்படிக்காய முகாந்தரங்களால், கடவுள் படைப்பும் அவரிருப்பும் நிஜமன்று.

குரு: இயல்பாய் தோன்றிய அசர சரங்களிலிருந்து எப்பொருளும் ஜனித்ததாயிருக்குமென்று மதித்து நொடித்த வாதீ! ஒரு பொருளாவது இக் காலத்திற்றானே தோற்றிட நீ கண்ணுற்றிருப்பதுண்டா? எழுவகைத் தோற்றமும் நாலு யோனியினுற்பனமென்பதை அறியாததிர்க்கலாமோ? யாவும் ஒன்றி லிருந் தொன்றுண்டாவ துண்மையே. அன்றிலாத காரியம் இன்றுண்டாவதுமன்று. விருக்கத்தை வெளியிடற்கு வித்திருந்த தொப்ப பிரதமத்தி லனைத்திற்கும் ஈஸ்வரனே ஒரு வித்தாக விருந்திரு க்கிறார்.
           நாம் முதலான வெல்லா ஜீவர்களையுங் கடவுள் படைத்தாரென்று கதைப்பதொவ்வா  தொழியுமென்றும், கடவுளிருந்து படைப்பதென்னில் அந்தரமாய் ஒரேயிடத்திலேயே யிருந்து ஒவ்வொன்றாய்ச்  சிருஷ்டித்  தனுப்பிக்கொண்டே யிருக்கவேண்டுமென்ற விதமாயும்  உதாகாரம் வைத்துரைத்தனை - தேவனானவர் யாவற்றுக்கும் ஆதி விரையாயிருந் திருப்பதிலிருந்து தோற்றம் பகிர்முகப்பட முளைதோன்றித் தழைத்து அவைகள் காய்த்து அக்காய்க்குண் முந்தவிருந்த தோற்ற மடங்க வித்தாகச் சமைந்து அவ்வித்திலிருந்தே அவன் கருணையால் அது முளைத்து அப்படிப் பல் வித்துக்களா யுருப்பட்டு அனேக தோற்றங்களா யிருந்து கொண்டிருப்பதில், எல்லோரையுங் கடவுள்  படைத்தா ரென்றேன் சொல்லக்கூடாது. இவ்வாறவரரு டோற்றும்படி செய்வதிலிருந்து அந்தரமாய் ஒரேயிடத்திலிருந்து ஒவ்வொன்றாய்ச் சிருஷ்டித் தனுப்பவேண்டிய தென்பதவருக் காவசியகமன்று.
          அனங்காகம முதலிய ஆயுள் வேதங்களையும், உதாரணங் கணித்துக் காட்டி மனித  ஜனன மானது மனிதருடைய செயலிலேயே ஏற்பட்டிருக்கிறதாகவும், ஸ்திரீ புருஷாள் தேக சம்பந்தமில்லா விடில் எப்படிப்படைப்பா ரென்றதாகவும் காரணங் காட்டிக் கடவுள் படைப்பும், அவரிருப்பும் நிஜமல்ல வென்கிறாய் - எல்லாம் வல்ல கடவுள் ஜீவகாருண்ய வித்துக்குள் வித்தாயிருந்து கொண்டி ருப்பதால், ஜீவனுள் ஜீவனாகவுமிருக்கிறாரென்றும் பரிஷ்காரமாய் வெளியாகும். இதனால் அந்த ஆயுள்வேத முதலானதுகளிற் கூறிய நியாயங்களும் தலைமையான கடவுளுடைய சர்வ வியாபக மேயாகும்.
                                                                                       (5)
சிஷி: இப்போழ்து தாங்கள் விவரித்த காரணங்க ளனைத்தும் தேவனாகிய வித்திலிருந்து யாவும் வந்திருக்கிறதாகவும், வித்தில்லாமற் றான்றோன்றியா யொன்றுந் தோற்றாவா மென்றும், அப்படித் தோற்றுமென்ற ருஜுவுக்கு எடுத்துக் காட்ட இப்போழ் தொன்று மின்றென்றும், ஜீவனுள்  ஜீவனாய்க் கடவுள் சர்வ வியாபகமா யிருக்கிறாரென்றும் உள்ள நியாயங்களையே காட்டுகின்றன. அப்படியேல், எல்லாச் செயலிலும் எல்லாவுயிரிலும் கடவுளிருப்பதாய் முடிகின்றபடி ஜீவர்களியற்றும் அக்கிரம ங்களும் சராமரண  முதலியவும்  கெட்ட  ஆபாசவாசனைகளும்  கடவுளாலே  யாமே?      ஈண்டும் அவரைக் கனஞ் சொல்வ தியாதோ?
             
       வித்தில்லாமல் யாதொன்று மிக்காற் றோற்றுவதின்றென்றும் தாங்கள் சொல்வது கூடாத காரியம். ஏனெனில், யாதொரு புற்பூண்டு மில்லா திருந்த ஓர் பூமியின் கண்ணே மழைத் தண்ணீர் தங்கி அது வறண்டபின் அனேக நீர்க்கரைப் பூண்டுக ளுற்பன மாகவும், யாதொரு மீனுள்ள ஏரி முதலிய நீர்ப் பாய்ச்சலில்லாத மழைத் தண்ணீர் நூதனமாய்த் தங்கிய பள்ளத்தில் அனேக மச்சங்க ளுற்பனமாகவும் தாங்களும் பார்த்திருப்பீர்கள் - இவைகளை எந்த விதையும், எந்த மச்சங்களு மீன்றன? இவைக டான்றோன்றிகளல்லவா? ஈதெல்லாமோராதுரைப்ப தென்னை?


குரு: இங்ஙனம், நீ முதலின் மொழிந்ததற்குரிய முகாந்தரங் கேள். ஜீவர்கள் செய்த நன்மைக்குத்    தக்க நல்ல தேகங்களையும், தீமைக்குத் தக்க தீய தேகங்களையும், தேவனுடைய நியாயத்திலேற் பட்ட படிக்குச் சிருஷ்டிக்கப்படுவதாயிருக்கிறது. அந்தப்படிக்கவைக ளனுபவிக்க நல்லதையுங் கெட்டதையு   நீதி வழுவாமலுதவியதாகும். அதிலும் மனிதனென்கிற உயர் ஜென்மத்திற்கு மட்டும்  
ஆதியிலேயே  பகுத்தறிவைப்  பிரகாசிக்கும்படியாக நன்று தீதறிந்து கொள்ளுமாறு செய்தவாறே, இப்போதும் ஒவ்வொருவ ரிதயத்திலும் அவ்வறிவு விளங்கிக் கொண்டிருக்கிறது. சுத்தப் பாமரனா னாலும், கொடும் பாவங்களையே செய்பவனானாலும், அவன் செய்த தீமையை அவனிருதயம் தீமையென்றே காட்டிக் கொண்டிருக்கிறது. இது சத்தியம். இப்படிக்கென்றும் ஈஸ்வரன் அறிவா கவே யிருந்து கொண்டிருக்கிறார். இதனால் அவர் சர்வ வியாபியாகும். இதை நீ துர் அர்த்தம் பண்ணியது சுத்தப் பிசகு.
         
              நீ, இரண்டாவ துரைத்ததற்குரிய நியாயம் யாதெனில், ஆகாயத்திலிருந்து மேகங்கள் வருஷி த்த நீரானது பிருதிவியாகிய பூமியிற் றங்கினால் நீர்க்கரைப் புற் பூடுகளும் மச்சங்களும் உண்டாவ தற்கு அப்பிருதிவியும் நீருமே கருவாகவிருந்து கொண்டிருக்கின்றன. இதனால், அவைகள் வித்தில்லாத தோற்றமென்றாய்விடுமா? அவைகளின் சம்பந்த மில்லாத அந்தரத்தி லுண்டான தென்றான் மட்டும் தான்றோன்றியாகும். "வித்தில்லாத சம்பிரதாய மேலுமில்லை கீழுமில்லை" என்ற வாக்கியத்தையேனு நீ யறிந்த தில்லையோ? ஐயோ! என்ன விபரீதம்!!
                                                                                  (6)

சிஷி: பேஷ். இப்பொழுதுதான் என்னபிப்பிராயத்திற் சிக்குண்டவர்க ளானீர்கள். அதாவது பிருதிவி முதலானதிலிருந்து புற்பூண்டு மீன் முதலியவைகளும் எப்படி யுற்பத்தியானதோ, அப்படியே நாலு யோனி தோற்றங்குந் தோற்றியதாய் முடிந்தன. இதனால், கடவுளென் றொருவரிருந்து சிருஷ்டிக்க வேண்டியது ஆவசியக மானதுமல்ல. அவருண்டெனலும் பொய் எனவும் அறியலாமன்றோ? நவிலுக.

குரு: ஆ! அ! "பொரிமாவைக்கண்டு பொக்கை வாய்ச்சி மெச்சிக் கொண்டாளாம் "என்பதுபோல, இந்த நியாயத்தைக் கண்டு சந்தோஷப்படுகிறாய் - அப்படிப்படாதே. அந்தப் பிருதிவி முதலான வைகளைச் சிருஷ்டித்தவன் யாரென்று நீயுணர வேண்டாமா? அதை யுணர்ந்து பார்.
                                                                                  (7)
சிஷி: நல்லது. தாங்கள் சொல்கிற கடவுள் எதிலிருந்து தோன்றினாரென்பதைச் சொல்வீர்களாகில், யான் சொன்னவைகளும் இன்னதிலிருந்து தோன்றியதெனச் சொல்லக்கூடும்? 

குரு: ஆதியாயும், அனாதியாயுமிருக்கிற தலைவனானவர் ஒன்றிலிருந்து தோன்றவும் வேண்டுமா? ஐயோ! இப்படி முரட்டாட்டஞ் செய்பவரை யாங் கண்டது மில்லை கேட்டது மில்லையே!
                                                                                 (8)
சிஷி: முரட்டாட்ட மென்றால், யார் செய்கிறது முரட்டாட்டமென்று தீர்க்க வல்லோ வேண்டும் ஓ!ஐயா! ஆதியாயுமனாதியாயு மிருக்கிற கடவுளென்கிறவர், ஒன்றிலிருந்து தோன்றவில்லை யென் றெப்படிச் சொல்கிறீர்களோ அப்படியே இந்தப் பிருதிவி முதலானவைகளும் ஒன்றிலிருந்து தோன்றியதில்லை யென்று யானுஞ் சொன்னாலொவ்வாதோ?

குரு: ஒருக்காலு மொவ்வாது ஏனெனில், நாம் சொல்கிற நித்ய வஸ்துவைப் போலல்ல நீ சொல்கிற அநித்ய வஸ்துவாகிய பிருதிவி முதலானவைகள். அவைகள் சேதமாவது தானென்று நீயே ஒத்துக் கொள்பவனா யிருக்கிறாய். மேலும் சேதப்படும் பொருளெதுவானாலும் அது ஒன்றிலிருந்து தோன்றியழியுமே தவிர தான்றோன்றியா யிருக்கத் தக்கதன்று. அசேதனப் பொருள்களாகிய ஜட வஸ்துக்களைக் கொண்டு அநேக வலங்காரங்கள் பொருந்திய பெரிய கோபுர மோன்றிருக்கப் பார்ப்போமேயாயின், அதைச் சமைத்தவொருவ னுண்டென்றுப் பூரணமாய்த் தெளிதலனைய.  பல தோற்றங்களாகிய வலங்காரங் கண் மிகவுமுடைய இவ்வகண்ட தோற்றமாம் பிரபஞ்சத்தையும் ஒருவனுண்டு பண்ணியிருக்கிற துறுதி யென்றும், சர்வாங்கங்களுமுள ஒரு பிரதிமையை ஒருவனிருந் தாட்டுவிப்பதுபோல, சர்வப்பிரபஞ்சத்தையுந் தொழில்படுத்தி நிற்பதற்கும் ஒருவனுண்டென்றுங் காண்க.
                                                                                     
                                                                                      (9)

சிஷி: அப்படிக் கொருவனா லிவ்வுலகஞ் சிருஷ்டித்திருப்ப துண்மையாயின், அச்சிருஷ்டிகன்றானோ கடவுள்? 

குரு: ஆம் அப்படிப்பட்ட பெரிய காரியத்தைச் செய்த அவரே கடவுள்.
                                                                                     
                                                                                     (10)

சிஷி: அற்றேல், அக்கடவுளர் வாசஸ்தலமும், நாமமும், கிருத்தியமும், சொரூபமும் யாதென  விளம்ப  வேண்டும்?

குரு: அவ்விறைவற்கு ஸ்வயம்புவில் தேசவாச மொன்றுண்டா - இல்லை. நாம மொன்றுண்டா - இல்லை. கிருத்திய மொன்றுண்டா - இல்லை. சொரூப மொன்றுண்டா - இல்லை. எங்குந்தானாய், தனிப் பழம்பொருளாய், சதுர் மறைகட்கு மடங்காத அத்துவித சைதன்ய சாக்ஷாத்காரமாய் இருக்கின்ற சுத்தப் பிரம்மமேயாம்.
                                                                                   
                                                                                       (11)

சிஷி: இங்ஙனஞ் சொன்ன வண்ணம் யாதொன்றிலுஞ் சம்பந்தப்படாத சுத்தப் பரப்பிரம்மத்திற்குத் தான் செயலொன்று மில்லையென்று செவ்வென வெளிப்படுகின்றதே? அந்தப் பிரம்மம், இப்படி அகண்டாகண்ட மாயிருக்கிற உலகங்களை எப்படிச் சிருஷ்டிக்கத் தொடங்கிற்று?

குரு: இதோ வரைந்துள்ள பிரம்ம நியமப் படத்தை நீ பார்வை யிடுவதனாலேயே, இவ்வுலகத் தோற்றமாகிய ஜட ஜீவேஸ்வர உற்பத்தி, பட்டப்பகற் போற் றெளியலாகும்.
   
                                                                              
                                                                                        (12)

சிஷி: ஆம் பார்த்தேன் - இதைச் செவ்வையாயெற்குப் புலப்படும் பொருட்டு விவரித்துரைக்க வேண்டும்?

குரு: யாதொரு களங்க ரகிதமான சிவ சைதன்ய மாகிய சுத்தப் பிரம்ம மென்னுஞ் சர்வ சாக்ஷியினி டத்தில் அக்கினியிற் சூடு போலவும், ஜலத்திற் சீதளம் போலவும், புஷ்பத்தில் வாசனை போலவும், மனதி னினைப்புப் போலவும், கண்ணாடியிற் பிம்பம் போலவும்,வித்தினுண் முளையைப் போல வும், முளையினு ளுயிரைப் போலவும் அபின்னமாக ஓர் சக்தி யுளது. அந்தச் சக்திக்கு யாதொரு      செயலின்றி அச்சர்வ சாக்ஷியினிடத்தில் அடங்கியிருக்கும் போழ்து அதையே சுத்தப் பிரம்மம் எனச் சொல்லலாகும். அந்தச் சக்தி விஜுரிம்பித்து பிரம்மத்தைச் சூழ வியாபிக்கும் போது அப்பிரம்மம் சக்தி வியாபகத்திற் குள்ளானதால் அதைச் சுத்தப் பிரம்மமெனச் சொல்லாமல் பிரம்மம் எனப் பெயர் பேசலாயிற்று.
            
         இப்படிக்கான பிரம்ம சன்னிதானத்தில் சுரும்பிற்கு அலரிலின்பங் கண்டது போலும், ஸ்திரீ க்குப் புருஷனிடத்தின்பம் பயந்தது போலும், விகிர்த சூன்யமா யிராநின்ற அந்தச் சக்தியினிடத்தில் அவிகிர்த சத்துவம் ரஜசு தமசு என்னுமுக்குணங்கள் ஜெனித்தன. அந்தச் சுத்த சத்துவத்திற்கு ஆநந்த ரூப சக்தி யென்றும், சுத்த ரஜசுக்கு சித் ரூபசக்தி யென்றும், சுத்த தமசுக்கு சத்ரூப சக்தி யென்றும் மூன்றுசக்திகளுண்டாயின. அப்படிக்குண்டான மூன்றுள பிரதமமான ஆநந்தரூப சக்தியை அப் பரப் பிரம்மம் கலந்து ஆநந்தசுழுத்தியைப் பொருந்துங்கால் பரமாநந்தன் என்றும், அப்பரமாநந்தன் மேலே சொன்ன சித்ரூப சத்தியுடனே கூடிச் சர்வப் பிரகாச சொப்பனத்தை யடையுங்கால் பரிபூரணன் என்றும், அந்தப் பரிபூரணன் மேற்கண்ட சத்ரூப சத்தியுடனே சேர்ந்து சர் வியாபக ஜாக்ரத்தை யடையு ங்கால் பரன் என்றும் விளங்கலாகும். இங்ஙனஞ் சொற்றதுக ளெல்லாம் குண பேதகத்தாற் பெயரும் வேறுபட்டன வென்றும், பிரம்மமே பரமாத்மா சத்திய சரீரம் என்றும் அறிதி.
        
       மேலுரைத்த பிரம்மத்தினிடத்தில் இன்னமும் சுத்தியில் இரஜிதந் தோன்றினாற் போலும், தீபத்தி னிடத்தினிழல் தோன்றினாற் போலும் மூலப்பிரகிருதி என்னும் ஓர் சத்தி யுண்டாயிற்று. அதையே பிரம்மத்திலோர் அணுவென்றுஞ் சொலத் தகும்.
        
       அந்த மூலப் பிரகிருதி விகிர்த சத்துவம் ரஜசு தமசு என்னு மூன்று குணங்களுடனே யுள்ளது. அம்முக் குணங்களில் பிரதமமான சத்துவ குணமே சுத்த மாயை யென்று சொல்வதாகும். அம் மாயையினிடத்தில் நிர்மலஜல பிரதி பிம்பம் போல பிரம்மம் சுலக்ஷணமாய்ப் பிரதி                     பிம்பிக்கும். அந்தச் சைதன்னியத்திற்கு சர்வ ஜனனாகிய " ஈஸ்வரன் " என்று பெயர் சாற்றுவது. இவ்வீஸ்வனுர க்கு மேற் சொன்ன சுத்த மாயையே காரண சரீரமாம்.
        
        அந்தச் சத்துவகுண சுத்த மாயையினிடத்தில் சத்துவத்திற் சத்துவம், சத்துவத்தில் ரஜசு, சத்துவ த்தில் தமசு என்னு முக்குணங்களுண்டு. அதில் சத்துவத்தில் சத்துவஞ் சிலாக்கியமாம்போது அதிற் பிரதி பிம்பித்த ஈஸ்வரனுக்கு உருத்திரன் என்று பெயர் சத்துவத்தில் ரஜசு பிரதான மாம்போது அதிற் பிரதி பிம்பித்த ஈஸ்வரனுக்கு விஷ்ணு என்று பெயர். சத்துவத்தில் தமசு சிரேஷ்டமாம்போது அதிற் பிரதி பிம்பித்த ஈஸ்வர னுக்குப் பிரமன் என்று பெயர். இவைகடான் மூலப்பிரகிருதியின் சத்துவ குண கற்பனைகளாகும்.
         
        மூலப் பிரகிருதியின் ரஜோகுணம் அனேக ரூபமாய் தாரதம்யமுள்ளவைகளாய் ஜீவகாரண  சரீரமெனப் பேருடையதாய் விளங்கும். அதையே அசுத்த மாயை என்றும் அவித்தை என்றும் சொலத்தகும். அவ் வவித்தைகடோறும் மலினஜன பிரதி பிம்பம்போல பிரம சைதன்யம் பிரதி பிம்பிக்கும் அவைகட்கு சிதாபாசர் என்றும், கிஞ்சிக்ஞ ரென்றும் பெயராம். அந்த அவித்தையி னிடத்தில் ரஜசில் சத்துவம், ரஜசில் ரஜசு, ரஜசில் தமசு என்ற முக்குணங்களுளது. அவற்றுள் ரஜசில் சத்துவம் சிலாக்யமாம்போது அதிற் பிரதிபிம்பித்த சிதாபாசர் தத்துவஞானி யாவர். ரஜசில் ரஜசு பிரதானமாம் போது அதிற் பிரதி பிம்பித்த சிதாபாசர் காமக் குரோதராவர்.ரஜசில் தமசு சிரேஷ்ட மாம்போது அதிற் பிரதிபிம்பித்த சிதாபாசர் சோம்பு நித்திரை மயக்க முடையராவர். இவைகடான் மூலப் பிரகிருதியின்  ரஜோகுண கற்பனைகளாகும்.
       
         மூலப் பிரகிருதியின் தமோ குணத்தில் அஞ்ஞானம் தோன்றி அவ்வஞ்ஞானத்தில் ஆவரண சத்தி விட்சேப சத்தியென இரண்டு சத்திகளுண்டாயின. ஆவரண சத்தியானது தத்துவ ஞானிகளையும் ஈஸ்வரனையுந்  தவிர  ஜீவர்களுக்கு  சரீரத்திரயம்  சிதாபாசன்  சாக்ஷி  சைதன்ய  மென்பனவற்றுள் ஒன்றற்கொன்று பேதந் தெரிய வொட்டாது மறைக்கத் தக்கதாகும். இதுவே ஆவரண சத்தியின் பிரேரகம்.
விட்சேப சத்தியானது இல்லாததை யுண்டு செய்யத் தக்கது.இதுவே விட்சேப சத்தியின் பிரேரகம் இந்தச் சத்தியினிடத்தில் சப்த தன் மாத்திரையான சூக்கும ஆகாயம் தோன்றிற்று. அவ்வாகாயத்தில் பரிச தன்மாத்திரையான சூக்கும வாயு தோன்றிற்று. அவ்வாயுவில் ரூப தன்மாத்திரையான சூக்கும அக்கினி தோன்றிற்று. அவ்வக்கினியில் ரச தன்மாத்திரையான சூக்கும அப்பு தோன்றிற்று. அவ்வப்பு வில் கந்த தன்மாத்திரையான சூக்கும பிருதிவி தோன்றிற்று. இவ்வாறு தோன்றிய சூக்கும பஞ்ச பூதத்திற்கு உபாதானமா யிருக்கின்ற அவ் விட்சேப சத்தியினிடத்தில் தமசில் சத்துவம், தமசில் ரஜசு, தமசில் தமசு என்ற முக்குணங்களுந் தோன்றி அதன் காரியமாகவே மேற்கண்ட பஞ்சபூதங்களு முண்டாயின. இப்பூதங்களைத் தன்மாத்திரைகளென்றும், அபஞ்சீகிருத பூதங்களென்றும் சொல்ல ப்படும். இந்தச் சூக்கும பூதங்களின் சத்துவாம்சத்தில் ஒவ்வொரு பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை யொன்றாகக் கூடி உள்ளம், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக் கரணங்களைந்தும், மேலுரைத்த சத்வாம்சத்தில் ஒவ்வோர் பூதத்தி னொவ்வோர் மாத்திரை தனித் தனியே சுரோத்ரம், துவக்கு, சட்சு, சிங்குவை, ஆக்ராணம் என்னும் ஞானேந்திரியங்களைந்து முண்டாயிற்று. 
       
       மேற்படி பூதங்களின்  ரஜோம்சத்தில்  ஒவ்வோர்  பூதத்தின்  ஒவ்வோர் மாத்திரை யொன்றாகக்  கலந்து சமானன்,  வியானன்,  உதானன்,  அபானன்,  பிராணன்  என்னும் பிராண வாயுக்களைந்தும், மேற்படி     ரஜோம்சத்தில்   ஒவ்வோர்  பூதத்தின் ஒவ்வோர் மாத்திரை தனித்தனியே  வாக்கு,  பாணி,  பாதம், உபஸ்தம், பாயுரு   என்னுங்  கருமேந்திரியங்களைந்து  முண்டாயிற்று. இப்படிக்கு சூக்கும பஞ்ச பூதங்களின் சத்துவாம்ச ரஜோம்சங்களிலுண்டான இருபது தத்துவங்களுமே ஜீவர்களுக்கு சூக்கும சரீரங்களா  யேற்பட்டிருக்கின்றன.  இன்னமும்  சூக்கும  பஞ்ச  பூதங்களின்  தமோம்சத்தில் ஐந்து பூதங்களும் ஒவ்வொன் றிரண்டிரண்டாகி முதற் பாதியைந்தும் ஒவ்வொன்று நான்கு பிரிவினையான  அரைக்கா லரைக்காலாகப் பகுக்கப்பட்டு மேற்கண்ட விரண்டாம் பாதியின் ஆகாய அம்சத்தோடு அதன் முதற் பாதியில் அரைக்கா லரைக்காலாகப் பகுபட்டதில் ஒன்றுஞ் சேராமல் வாயுவின் முதற் பாதியாகிய அம்சத்தில் முதலாவ தரைக்காலும், தேயுவின் முதற் பாதியாகிய அம்சத்தில் இரண்டா  வதரைக்காலும், அப்புவின் முதற் பாதியாகிய அம்சத்தில் மூன்றாவதரைக்காலும், பிருதிவியின் முதற் பாதியாகிய அம்சத்தில் நான்காவதரைக் காலுமாகவும், மேற் குறித்த இரண்டாம் பாதியின் வாயுவம் சத்தோடு அதன் முதற் பாதியில் அரைக்கா லரைக்காலாகப் பகுபட்டதிலொன்றும் பொருந்தாமல் ஆகாயத்தின் முதற் பாதியாகிய அம்சத்தில் முதலாவதரைக்காலும், தேயுவின் முதற் பாதியாகிய அம்சத்தில் இரண்டாவதரைக்காலும், அப்புவின் முதற் பாதியாகிய வம்சத்தில் மூன்றாவதரைக் காலும், பிருதிவியின் முதற் பாதியாகிய வம்சத்தில் நான்காவதரைக்காலுமாகவும்; மேற் சொன்ன இரண்டாம் பாதியின் தேயுவம்சத்தோடு அதன் முதற் பாதியில் அரைக்கா லரைக்காலாகப் பகுபட்டதிலொன்றுங் கூடாமல் ஆகாயத்தின் முதற் பாதியாகியதில் முதலாவதரைக்காலும், வாயுவின் முதற் பாதியாகியதில் இரண்டாவதரைக்காலும், அப்புவின் முதற் பாதியாகியதில் மூன்றாவதரைக் காலும், பிருதிவியின் முதற் பாதியாகியதில் நான்காவ தரைக்காலுமாகவும், மேல் விளம்பிய இரண்டாம் பாதியின் அப்புவம்சத்தோடு அதன் முதற் பாதியில் அரைக்கா லரைக்காலாகப் பகுபட்ட திலொன்று மமையாமல் ஆகாயத்தின் முதல் பாதியில் முதலாவ தரைக்காலும்,வாயுவின் முதல் பாதியில் இரண்டாவதரைக்காலும், தேயுவின் முதல் பாதியில் மூன்றாவதரைக்காலும், பிருதிவியின் முதல் பாதியில் நான்காவதரைக்காலுமாகவும்; மேற்கூறிய இரண்டாம் பாதியின் பிருதிவி யம்சத் தோடு அதன் முதற் பாதியில்  அரைக்காலரைக்காலாகப் பகுபட்டதில் ஒன்றுஞ் சம்பந்தப்படாமல் ஆகாயத்தின் முதற் பாதியோடு முதலாவதரைக்காலும்,வாயுவின் முதற் பாதியோடு இரண்டாவ தரைக்காலும், தேயுவின் முதற் பாதியோடு மூன்றாவதரைக்காலும், அப்புவின் முதற் பாதியோடு நான்காவதரைக்காலுமாகப் பஞ்சீகரணஞ் செய்யப்படலாயிற்று. இப்படிக்கான ஐந்தும் ஒவ்வொ ன் றுக்கெட்டு மாத்திரையுளதென்பதேதென்னில் - அந்தச் சூக்கும பஞ்ச பூதங்களைந்தும் பகுபடாத பாதிக்கு நான்கு மாத்திரையுஞ் சேர்ந்து ஒவ்வொரு பூதமு முழுத்தன்மை பெற்றதாகும். இவ்வித முழுத் தன்மை பெற்ற வைந்து பூதங்களையுமே ஆகாய மாதி ஸ்தூல பூதங்கள் என்றெண்ணுக.
       
        இப்படிக்  காய  ஸ்தூல  பூதங்களுள்  ஆகாயத்திற்  பரிச,  ரூப,  ரச,  கந்த  மென்னும்  நான்கு குணங்களும் அரைக்காலரைக்கால் மாத்திரை வீதம் வியாப்பிய மானதில் அவை யதிருசியமாய்  நிற்க நிஜகுணமாகிய சப்தம் திருசியமாய்த் தோன்றலாயிற்று.
       
        ஸ்தூல வாயுவில் ரூப ரச கந்த மென்னும் மூன்று குணமும் அரைக்காலரைக்கால் மாத்திரை வீதம் வியாப்பியமானதில் அவை யதிருசியமாய் நிற்க அரைக்காலரைக்கால் மாத்திரையான காரண குணமாகிய சப்தமும்  நிஜகுணமாகிய பரிசமும் திருசியமாய் தோன்றலாயிற்று.
         
      ஸ்தூல தேயுவில் ரசகந்த மென்னும் இரண்டு குணமும் அரைக்காலரைக்கால் மாத்திரை வீதம் வியாப்பியமானதில் அவை யதிருசியமாய் நிற்க அரைக்காலரைக்கால் மாத்திரையான காரண குணங்களாகிய சப்தமும், பரிசமும்,நிஜகுணமாகிய ரூபமும்  திருசியமாய் நிற்கலாயிற்று.
      
      ஸ்தூல அப்புவின் அரைக்காலரைக்கால் மாத்திரையான கந்தகுணம் வியாப்பியமானதில் அது யதிருசி யமாய் நிற்க அரைக்காலரைக்கால் மாத்திரையான காரண குணங் களாகிய சப்தமும், ரூபமும் பரிசமும், நிஜ குணமாகிய ரசமும் திருசியமாய் நிற்கலாயிற்று.
    
      ஸ்தூல பிருதிவியில் அரைக்கால் மாத்திரையான காரண குணங் களாகிய சப்தமும்,பரிசமும், ரூபமும்,ரசமும்,  நிஜ குணமாகிய கந்தமும் திருசியமாய் நிற்கலாயிற்று.
     
        இவ்வாறு பஞ்சீகரித்த ஸ்தூல பூதங்களில் அப்புவின் கூறாய் உதிரமும் மஜ்ஜையும் பிருதிவியின் கூறாய் நரம்பும் சருமமும் மாம்சமும் என்பும் என்ற ஆறு தத்துவங்களு முண்டாயின. இப்படிக் குண்டான தத்துவங்களாறையுமே ஸ்தூல சரீர மென்றுரைக்கப்படும்.
      
       முன்னஞ் சொன்ன சூக்கும தத்துவம் இருபதுடன் இப்போதிசைத்த ஸ்தூல சரீர தத்துவம் ஆறுஞ் சேர்ந்து ஆக இருபத்தாறு தத்துவங்களால் ஏற்பட்டதுதான் ஸ்தூல சூக்கும சரீர மென்னும் காரிய சரீர மென்றறிய வேண்டியது. இக்காரிய சரீரமே உத்தம ஜாதியாகிய மனிதர்கட் கேற்பட்டதென்றும், இன்னும் பசு, பக்ஷி முதலான மத்திம ஜாதிகட்கும் விருக்ஷ முதலான அதம ஜாதிகட்கும் தக்க தக்க தத்துவங்களா லுருவ மேற்பட்ட தென்றும் காணலாம். மேற்குறித்த மனித ஜனனத்திற்கு இகலோக வின்பமும்  பரலோக வின்பமும் பெற வறிவுடைத்து. ஆதலால் அவைகளை உத்தம ஜாதி யென்றும் பசுபக்ஷியாதி ஜெனனத்திற்கு இகலோக வின்பத்திலும் அற்ப விருப்புடைத்து. - ஆதலால் அவை களை மத்திமஜாதி யென்றும், விருக்ஷ முதலானவைகள் இகபரசுக மிரண்டையும் விரும்பச் சக்தியிலது. ஆதலால் அவைகளை அதமஜாதி யென்றும் பகரலாயிற்று.
       
        இம்மூவகை ஜாதிகளுமே நாலுயோனிஎழுவகைத் தோற்றம் எண்பத்து நான்கு நூறாயிரம் ஜீவ பேதங்களாய் பல்புவனங்களாய் எண்ணரிய ஜீவ கோடிகளாயியங்குகின்றனவாம். இப்படிக்கான ஜீவேஸ்வர ஜகத்தைச் சிருஷ்டிக்கக் காரணமாயிருந்தவன் பிரம்ம, சைதன்ய பிரதிபிம்பனான ஈஸ்வரனென் றறியக் கடவாய்.

                                                                          (13)

சிஷி: அறிந்தேன். அதில், துவித மற்ற அத்துவித சைதன்ய சுத்தப் பரப்பிரம்மமே கடவு ளென இதன் முன்ன முரைத்த தாங்கள் இப்போது துவித பாவனையான சங்கற்பங்கட் குட்பட்ட ஈஸ்வரனையே கடவுளாய்ச் சொல்வதென்னை?

குரு: நாமரூபமற்ற சுத்தப் பிரமத்தை யாதொரு சங்கற்பங்கட் குட்படுத்தவாவது இன்ன  தன்மையுள தென் றுரைக்கவாவது நியாயங்காணப்படாமையால் அதனின்றும் பிரதி பிம்பித்த சாக்ஷாத் ஈஸ்வரனையே அனைத்துக்குங் காரணக்கடவுளாய்ப் பகரலாயிற்று. அஃதெப்படியேல்:- ஒரு கருப்பாசயத்துட்  கருத்தோன்று முன்னம், அக்கரு இன்ன நிலைமையுடையது இன்ன வினைக்குரியது என்று சொல்லக் கிஞ்சித்தும் அடையாளந் தோற்றப்படா வரூபமாயிருத்தலனைய அச்சுத்தப்பிரம்மத்தையும் அரூபமாயெண்ண வேண்டும். அக்கரு மாதாவினுடைய கருப்பாசயத்துட் பூந்தபின் சொரூபப்பட்டுத் தோன்றி யதை இன்ன மாதிரிக்குரிய தென்று வீக்ஷணிக்கத் தக்கதாயிருப்ப தனைய சுத்தமாயையே காரண சரீரமாகவுள்ள அவ்வீஸ்வரனையுமெண்ண வேண்டும். தவிர, இந்த ஈஸ்வரனே "ஆதி " எனவும், அந்த பிரம்மமே 'அனாதி 'எனவும், அவ்வனாதியாகிய சத்தே இவ்வாதி யாகிய ஈஸ்வர சொரூபத்தில் அறிவாகாரமாயியங்குகின்ற தெனவும் அவ்வறிவாகிய சித்தே எச்சங்கற்பத்தையும் ஸ்வயம்புவாய் பிரேரிக்கி வல்லமையுடையதெனவும் அவ்வ ண்ணம் பிரேரிப்பதில், சிருஷ்டி, திதி, சம்ஹார, திரௌபவானுக்ரகமென்னும் பஞ்ச கிருத்தியங்களு முளதா மெனவும், இவ்வித கிருத்தியங்கள் புரியுமிடத்து அவருக்குச் சகளேஸ்வரனெனப் பெயர் வருமெனவு மவைகட் கன்னியமா யிருக்கு மிடத்து நிஷ்க   ளேஸ்வர னெனப் பெயர் வருமெனவு மறிக சகள நிஷ்கள மிரண்டினும் நினைப்பும் மறப்புமற்று நித்ய வஸ்துவாய் விளங்கு நின்மல சொரூபனாகிய வொருவனையே ஈஸ்வரனாகிய கடவுளேனக் கருதுவதே யுண்மை.
                                                                 (14)

சிஷி: அந்த ஈஸ்வரனுக்கும் முதற் காரணமாயிரா நின்ற மூலப் பிரகிருதியையாவது அதற்கு முதற் காரணமாயிராநின்ற பிரமத்தையாவது கடவுளெனக் கருதுக வென்றுன்னாமல் மூன்றாங்காரணமாய்த் தோன்றா நின்ற ஈஸ்வரனைமட்டும் கடவுளெனக் கருதுக வென்ற திர்த்த காரணமென்ன?

குரு: ஓர் செடியிற் புஷ்பித்த இதழையும் அதன்மகரந்தத்தையும்  திவ்விய புஷ்பமெனப் புகல்வதல்லாமல் மகரந்தத்தை மட்டும் புஷ்பமென்றாவது இதழை மட்டும் புஷ்பமென்றாவது புகல நியாயந்தோன்றப் படாதது போன்று பிரமமெனவும், பிரகிருதி யெனவுமான இரண்டு மொன்றாய் நின்ற ஈஸ்வரனையே பொருளெனவும் அப்பொ ரு ளைச்  சிருஷ்டிக்க ஈஸ்வரனாயிருந்தவனொருவனுங் காணப்படா மையால் அப்பொரு ளாகிய அவரே கடவுளெனவும் பகர்ந்ததே காரணமாம். இதனால், நீ விளம்பிய வண்ணம் ஈஸ்வரனை மூன்றாங்காரணமென்றெண்ண விடமின்றி முதற்காரண மென்றெண்ணவே யிடமுண்டாயிற்று.
                                                               
                                                                   (15)

சிஷி: இவ்வா றெடுத்துரைத்ததில் எனக்குச்சிறிது சந்தேகமுளது. அதை தீர்த்தருளப் பிரார் த்திக்கின்றேன். ஈஸ்வரனுக் கறிவாயிருந்த சுத்தப் பிரம்மம் அவ்வீஸ்வரனைச் சிருஷ்டிக்க வெண்ணித் தானே அவரை யுண்டு பண்ணினதாகும். அற்றேல், பிரம்மத்தை ஈஸ்வரனுக்கு ஈஸ்வரனாகிய உபாதானக் கடவுளெனச் சாற்றுவதை விட்டுப் பேதித்துப் பேசுவதென்ன? அன்றி ஈஸ்வரனைப் பிரம்மம் படைத்ததால் ஈஸ்வரனுக்குப் பிரம்ம பிரதிபிம்பனெனப் பெயரும் வந்திருக்கிறது. இதை மறுத்தற்கு மேதுவுளதோ?

குரு: யாமுரைத்த நியாயங்களின் தாத்பரியங்களை நீ யுணரா தவலமாயறைகின்றாய்!  அதை யின்னமுந் துலக்கமாகவே சொல்வேம்: கவனித் தாய்ந்து கொள். சுத்த மாயையே காரண சரீர முதலாய தத்துவங்களாகவும், அதனுட் சைதன்னியமாகிய தானே உள்ளமா கவும், விளங்காநின்ற  சாக்ஷாத்  ஈஸ்வரனாய்த்  தோன்றுமுன்னர்   அப்பிரம்மம்  யாவு மடங்க விருந்த மௌனமேயாம். அம்மௌனமாகிய சுத்தப் பிரம்மமும் அதின் பிரகிருதி யாகிய சுத்த மாயா சத்தியும் தனித்தனியே யாதொரு காரியத்தைப் பிரேரிக்கச் செயலற்ற தெனவும், பிரகிருதி மாயா சத்தியுடன் சேர்ந்த பிரம்மம் எக்காரியங்களுஞ் செயவல்ல தெனவும், அவ்வல்லமையுள ஈஸ்வர ஹிருதயமாகவே அறிவதற்கரிதாய் வாக்குக்கு மனதுக்கு மெட்டாஆத அகண்டாகாரமாகிய பரப்பிரம்மம் நின்ற தெனவும் அப்படி நின்ற சுத்தப் பிரம்மத்தையே இரவு பகலற்று இன்ப துன்பம் விட்டு ஆதியு மந்தமுமின்றி, ஆணுமன்றிப் பெண்ணுமன்றி அலியுமன்றி, அருவுமன்றி உருவுமன்றி இறப்புமின்றி பிறப்புமின்றி, விருப்புமின்றி மறப்புமின்றி ஞானமுமின்றி மோனமுமின்றி, நிறமுமின்றிக் குலமுமின்றிச்  சிறிதுமின்றிப் பெரிதுமின்றி ஏகமின்றி யனெகமின்றிப் பாவமின்றி புண்ணியமின்றி நன்றுமன்றித் தீதிமன்றி நானுமன்றி நீயுமன்றி எங்குஞ் சம்பூரணமாய் விளங்குவதெனச் சொல்லலாகும். இதைத் தவிரப் பிரம்மம் பிரத்யேகத் தொன்றுளதென்  றெண்ணொணாது. ஈஸ்வரனைப் பிரம்மப் பிரதிபிம்ப னென்று சொன்னது சொரூப நியாயம் பற்றியே ஆதலால், ஈஸ்வரனாய்த் தீரக்கப்பட்ட வொருவனே காரணக் கடவுளாகிய கர்த்தனாவான்.
                                                            
                                                                      (16)

சிஷி: மௌனப் பிரம்மமே தானாய் விளங்காநின்ற ஈஸ்வரனுக்கு நினைப்புப் பிரம்மமயமே யாமாகில் யாதொன்றை நினைக்கவாவது நிருமிக்கவாவது கூடாமையாய் விடுமல்லவா? ஆயின், அவர் பஞ்ச கிருத்தியங்க ளெவ்வாறியலும்?

குரு: அந்த நிச்சயங்க ளெல்லா முனக்குத் தெளித்துச் சொல்லி யிருக்க வறிந்திலை. ஆதலால், உனக்கிதுவரை யுறுத்திய வனைத்தும் கடலிற் காயங் கரைத்தது போற் காண்டன. இப்படிப் பட்ட மௌட்டிய முனக் குண்மையா யிருக்குமேல், இப்பரம சூட்சுமங்களை யாமெத்தனை கால மிடை விடாதிசைக்கினும் அத்தனையும் பயனிலதேயாகும். ஆகலால், நின் கருத்தெவ் வணமுளதெனக் கிளத்துவா யாயின் பின்னர் நீ கடாவுங் காரியங்கட் காயமொழி யாம் புகலத் தகுமன்றோ.
                                                                  
                                                                         (17)

சிஷி: சுவாமி! என் சற்குரு நாதா! தமியேன்பேரில் வியசனம் வேண்டாம். தங்களை விட்ட கன்றிருந்த பின்னர் என்னுடைய மனதிலோர் தீர்மானத்தைக் கோரி யிவண் வந்தேன்.    அதாவது; தேவனொருவ னுண்டென்றதுபோற் சிந்தித்து நங்குரு வானவர் அந்நிலையி னின்று சாதிப்பதாயிருக்கின்றதே அதைத் தவிர்த்து நம்வழியி லழைத்து விடய சுகங்களில் விடுத்து நன்று செய்ய வென்று குறித்து யான் வந்ததாகும். அப்படி வந்த தமியேற்குள்ள சந்தேகங்களைத் தேவரீரிடந் தர்க்கித்து வாது விளைத்ததில் கடவுளில்லவே யில்லை, கண்டதே காக்ஷி கொண்டதேகொள்கை யென்ற என்னுடைய தீர்மானத்தைத் தங்களுடைய வல்லமையாகிய கல்வியானது பேதித்துக் கடவுளுண்டெனவே சாதித்து வருகிறதாயிருக்கி றதில், இதுவரை பிரம்ம நிச்சயத்தைப் பற்றி யாதொரு சகடுமெனக்கில்லை. அது உறுதியா யிற்று. இதன் மேல் நிரூபிக்கின்ற ஈஸ்வரன் விஷயத்தில் எனக்கின்னுஞ் சகடு நிவர்த்தி யுண்டாகாததால், மறுத்து மறுத்து யான் தங்களை வினாவும்படி நேரிட்டது. ஓ! ஐயனே! இதைத் தவிர வேறு காரணங்க ளென்னிடத்திருக்க வினிக் காண்பதன்று. தாங்கள் கிருபை கூர்ந்து என்னுடைய வினாவுக்கெல்லாம் ஐயமற விடைதரப் பிரார்த்திக்கின்றேன் அருள்  செய்மின். 

குரு: ஓ! விஷயப் பிரியா ! மிகவுஞ் சந்தோஷம். நீ கடாவிய சங்கைக் கருத்தம் அதற்கு முன்னதாயுரைத்த காரணங்கண்மூலம் பரிஷ்காரமாய் வெளிப்பட்டே யிருக்கிறது. அதாவது: மௌனமாகிய பிரம்மத்திற்கு யாதொரு நினைப்புக்குரிய உளமில்லையெனவும், ஈஸ்வரனாய் வந்த பின் சர்வ வல்லமையுமுள அந்நினைப்பாகிய உள்ளம் உண்டாயிற் றெனவும், அதனாற் பஞ்ச கிருத்தியங்களு நடத்தப்படுவ தெனவும் அறிய வேண்டியதே. அதிற் சங்கற்ப விகற்பமு மற்ற சுத்த சைதன்யத்தை ஈஸ்வரர்க் கிருதயமாய்ச் சொல்லப் பட்டதில் அதையே துவிதமாகவும் அத்துவிதமாகவும் இருவகையாய்ச் சொன்னது யாதென ஈண்டு தர்க்கிக்கக் கூடும். அதன் றன்மையையுஞ் சுருக்கமாயிங்ஙனம் பகரக்கேள்; ஈஸ்வரனுக்கு ஸதூல சூக்கும காரணமென மூன்று சரீரங்களுளது. அவற்றுள், ஸ்தூல சரீரமோ, ஸ்தூல பஞ்ச பூதங்களிற் றோன்றிய ஸ்தூலசரீர சமஷ்டியுமான பிரபஞ்ச வடிவம் இதையே விராட்டென்றும் ஈஸ்வரனுக்கு ஜாக்கிர மென்றும் சொல்லலாகும்.சூக்கும சரீரமோ, சூக்கும பஞ்ச பூதங்களிற் றோன்றி சூக்கும சரீர சமஷ்டியுமான வடிவம் இதையே ஹிரண்ய கருப்பமென்றும் ஈஸ்வரனுக்குச் சொப்பன மென்றுஞ்சொலத்தகும். காரண    சரீரமோ, மேற்குறித்த ஸ்தூல சூக்கும மிரண்டிற்குங் காரணமாயிருக்கின்ற மாயை. இதையே, அவ்வியாகிருத மென்றும் ஈஸ்வரனுக்குச் சுழுத்தி யென்றுஞ் சொல்லலாகும். இப்படி மூன்று சரீரமா யிராநின்ற ஸ்தூல பூதம் - 5, ஸ்தூல சமஷ்டி - 6, சூக்கும சமஷ்டி - 20, மாயை - 1, ஆக 32 தத்துவங்களுடனும் பொருந்திச் சகல புவனங்களிலுங் கலந்து நிற்பன் ஈஸ்வரன். அது எப்படி யென்னில்: சிதாபசன் தன் மூன்று சரீரத்திற்குரிய 27 - தத்துவங்க  ளுடனும் பொருந்தித் தன் சரீர ஆத்யந்தமுங் கலந்து நிற்பது போலவாம். இவ்வாறு கலந்து நிற்கும் ஈஸ்வரற்கே ஆத்மாவாகிய உள்ளம் - துவிதமான நினைப்பா யிருந்து கொண்டிரு க்கும். அந்த நினைப்பு, சர்வ ஜீவன்களுடைய பிறப்பு, இறப்பு, பசி, தாகம், சுகம், துக்கங்க ளிலும் வியாபித்துக் கொண்டிருக்கின்றது. அந்தப் பிறப்பிறப்புக் குரிய பிராண வாயுவுக்கும் சுகதுக்கத்திற்குரிய மனதுக்கும் யாதொரு சம்பந்தமுமின்றி, அழிவு படாததாய் அளவில்லாத தாய் பரமாத்ம ஸ்வரூபமாய் ஆகாயத்தைப் போல நிறைந்து நிபீடிகரமாய் எல்லையற்றியங் குவதையே ஈஸ்வரனுக்கு பிரம்மவுள்ள மென்றியற்றலாகும். அவ்வுள்ள மெங்கணு நிறைந் தளவு படாதன வென்பதெப்படி யெனில்: சிதாபாசர்களுடைய நினைப்பிலிருந்து நிமை கொட்டற்குள் இன்ன காரியம் பிறக்கு மென்றாவது அது இவ்வள வென்றாவது அளவிடக் கூடாமையா யிருப்பது போலுமாம். அப்படிக்கான நினைப்பைச்  சுத்தப் பிரம்ம ஞானிகள் வசமாய்க் கண்டிருப்ப தொப்ப ஈஸ்வரனும் பிரபஞ்சாதீதமாயிருந்து அத்துவிதமான பிரம்ம ஹிருதயத்தையும் வசமாய்க் கண்டிருக்கின்றனன். இவ்வண்ணம் பிரபஞ்சாதீதத்தில் பிரபஞ்ச சகிதத்தை மறந்து நினைப்பில்லாமலும் பிரபஞ்ச சகிதத்தில் மறப்பில்லாமலு மிருப்பதால் ஈஸ்வரனை நினைப்பு மறப்பு மற்றவனென லாயிற்று. இன்னமும் அந்த ஹிருதயத்திற்கு உள்ள மென்றும், உள்ளென்றும் பெயருண்டா யிருத்தலால், ஈஸ்வரனைத் திருவுள மென்றும், கடவுளென்றுஞ் சொல்ல வந்தன எப்படியேல்: திரு = மேன்மையாகிய, உள்ளம் = ஞான மென்றருத்தமான பிரகாரம் மேன்மையுள ஞானமென்கிற திருவுளமென் றும், கடம் = சரீரம், உள் = ஞானம் என்றருத்தமான பிரகாரம் சரீரமும் அதில் ஞானமு மென்கிற கடவுளென்றாம். இப்படிக்காய தன்மையை உன்னுள்ளத்திலேயு மறிய நீ பாத்தி யப்படுவாயேல் அறிவ தெளிதாகும்.
                                                                 
                                                                     (18) 

சிஷி: இப்படிக்கான கடவுளர்க்குச் சூக்குமபஞ்ச பூதங்களிற் றோன்றிய சூக்கும சரீர சமஷ்டியும் சூக்கும சரீர மெனவும், ஸ்தூல பஞ்ச பூதங்களிற்றோன்றிய ஸ்தூல சரீர சமஷ்டியும் ஸ்தூல சரீர மெனவு மாயின், அந்த ஸ்தூல சூக்கும பூதங்களைத் தோற்றுவித்த விட்சேப சத்தியின் காரியமே அந்தச் சரீரங்களை யுண்டு செய்ததாய்க் காண்கின்றது. அவ்விதம் உண்டு செய்யுஞ் சத்தியை யன்றி ஈஸ்வரனுக்கு ஸ்வயம்புவாயுண்டு செய்யுங் கருமம் உண்டோ வெனவும், ஸ்தூல பூதத்திற்குக் காரணமாயிருந்தது சூக்கும பூதம்போல சூக்கும பூதத்திற்கு காரணமா யிருந்த பூதமெதுவெனவும் விளம்ப வேண்டும்?

குரு: விட்சேப சக்தி யென்பதே ஈஸ்வர சங்கற்பமா யிருத்தலால், அதின் காரியமும் ஈஸ்வரனுக் கன்னியமல்ல. சூக்கும பூதத்திற்குக் காரணமாயிருந்தது விட்சேபசக்தியி னினைப்பேயாம் பிறவும் மாயா காரணமாகிய காரணபூதமென்பர்.
                                                            
                                                                      (19)

சிஷி: இன்னு மொரு சந்தேகம்; சிதாபாசரை மூன்று குணங்களில் விபரீதப்படச் சிருஷ்டி ப்பதற் குண்டாய காரணம் யாது?

குரு: அச் சிதாபாசர் அசுத்த மாயா பிரதி  பிம்பர்களாதலால்,அம் மாயைக்குரிய சுபாவகுண மூன்றும் அவர் கூடப் பிறந்தன, அதுவே காரணமாம்.
                                                             
                                                                  (20)

சிஷி: விட்சேப சக்தியினிடமாய் ஆகாய முதற் பஞ்ச பூதியங்கள் முறையே தோன்றின தென்பதாய் இவ் வியாசத்திற் றாங்கணவின்றதற்கு முழு விரோதமாய், "பிரம்மாவானவர் முற்காலத்தில் ஜலத்தைச் சிருஷ்டித்து அதில் வீரமாகிய விந்துவை விட்டார். அஃது முட்டையாய் மிதந்தது கண்டு அதை யுடைத்த போழ்து, மூன்று குணங்க டோன்றி அக்குணங்களிற் கெடாத பஞ்ச பூதங்களு முண்டாயின " என்று விருத்தாசல புராணம் கிரிச் சருக்கம் 12-வது கவியிற் கூறிய தென்னை?

குரு: ஞானமாகிய அக்கினியைப் பிரகாசிக்க விடாமல் மக்னஞ் செய்து கொண்டிருக்கிற ஜல ரூபமாகிய அக்ஞானத்தி னிடமாய்ப் பிரணவமாகிய விந்தை பிரம்மன் மகிமைப் படுத்திய வுடனே அங்ஙனம் விட்சேப சக்தி யுதயமாக ஓர் கருவாய்த் திரண்டது. அக்கரு பூரண மெய்தியது தெரிந்து இரகசியத்தை விட்டு பகிர்முகப் படுத்தியபோது அது சாத்விக ராஜத தாமத மென்னு முக்குணங்களுந் தோன்றக் கெடாத சூட்சும பஞ்ச பூதங்களு முறையே அச்சக்தியினிடமிருந் துண்டாயின, என்று குறிப் பருத்தத்தாற் றெளிந்து கொள்வாயாக.
                                                               
                                                                     (21)
சிஷி: இன்னொன்று மானவதர்ம சாஸ்திர மென்பதின் 1-ம் அத்தியாயம் 8-9-12-23-ல்    "கடவுள் தியானஞ் செய்து பலவித பிரஜைகளைச் சிருஷ்டிக்க வேண்டுமென் றாசை  கொண்டு முதலில் ஜலங்களைச் சிருஷ்டித்தான்: பின் அந்த ஜலங்களுக்குள்ளே ஒரு வித்தை வைத்தான் " என்றும் " அந்த வித்தானது பொன் ரூபமாயுஞ் சூரியப் பிரகாசமாயுமிருக்கிற ஒரு முட்டையாயிற்று; அம்முட்டையில் அக்கடவுள் பிரம்மாவாகிப் பிறந்தார் " என்றும்      " அந்தப் பகவான் அம்முட்டையில் ஒரு வருஷம் வாசம் பண்ணி பின்பு தன்னுடைய தியான த்தினால் அம்முட்டையை இரண்டு துண்டாகப்  பிளந்தார் " என்றும், " அவ்விரண்டு துண்டு களினால் வானத்தையும் பூமியையு மேம்படுத்தினார்,நடுவில் ஆகாயத்தையும் எட்டுத் திக்கு களையும் ஜலங்களினிடத்தையும் ஸ்தாபித்தார் " என்றுஞ் சொல்கிற வரலா றென்னை?

குரு: அது காரண தேயுவிற் பிரதிபிம்பித்த தேவன் காரண அப்புவினிடமாய்த் தோன்று மாறையும், அங்ஙனந் தோற்றியதினின்றும் காரண பிருதிவியினிடமாய்த் தோன்றி ஈஸ்வரா னுக்ரகத்தாற் கீழ்மேல் என்கிற மாயா பிரபஞ்சத்தை ஜாக்ரத்தில் வெளிப்படுத்து மாறையும் குறிப்பால் வெளிப்படுத்தியதாகும். 
                                                               
                                                                   (22)

சிஷி: தோற்றிய கடவஸ்துக்க ளெல்லாம் நிலை யின்மையாகவே காண்பனவா யிருத்தலால், ஈஸ்வர சரீரமும் நிலையின்மையாமல்லவா? ஆயின், அது ஈஸ்வரற்குக் கேவலமலவோ?

குரு: ஸ்தூல சரீர சமஷ்டியும், சூக்கும சரீர சமஷ்டியும் ஒன்றுக்கு ளொன்றாய்த் தோன்றியபடி யொடுங்கும் போழ்து ஈஸ்வரனுக்கு ஸ்தூல சூக்கும சரீரங்களின்றி காரண சரீரமாத்திரமா யியங்கும். அது மஹாகாரணத்தி னிலைத்து நித்ய வஸ்து தத்துவமாய் நின்று பரிசுத்த ஞானத் தாற் பழையபடி பஞ்ச கிருத்தியங்கட்குரிய தன்னுடைய மூன்று சரீரங்களாகிய தோற்றங் களையு முறையே வெளிப்படுத்துவதாகும். இவ்வடை வாற்றான் மூன்று சரீரங்களையும் ஈஸ்வரனுக்குச்  சகள  மென்றும்  நிஷ்கள சகள மென்றும்  அவைகட்  கக்கிரகித்து  மஹா      காரணமாய் விளங்கும் போது நிஷ்கள மென்றும் அதுவே கேவல மென்றும் உரைக்க ஹேது வாயிற்று. மேற் சொன்ன மஹா காரணமானது விந்து தத்துவ மென்கிற மூலப் பிரகி ருதியின் சுபாவ நிலயமெனக் கணிப்பாய்.
                                                                      (23)

சிஷி: ஓ! சுவாமீ! இப்படிக்கு அண்டபிண்ட சராசரமாய், அதற்கப்பாலு ம்பபாலாய் விளங்கிய சர்வேச்சுரனை ஒருவன் றரிசிக்க வென்னில் எப்படிக்கியலும்?

குரு: ஐங் கிருத்தியத்தி னிமித்தம் பஞ்ச பூதங்க ளென்னும் ஐந்துருவும் ஓருருவாய் ஈஸ்வர னானவர் சித் சொரூபமாய்ப் பிரதிபிம்பித் திருக்கின்றனர். அப் பிரதி பிம்ப தரிசனத்திற் குரிமைப்பட்ட சத் புருஷர்கட்கு அத்தரிசனங் கிடைக்கும். அதில் எவரெவர் என்னென்ன பாவனையாய்ச் சிந்தித்தார்களோ அன்னன்ன பாவனையாயும் அந்தப் பிரதிபிம்பன் பிரகா சிப்பன். அதற்குப் பிரமாணம் ஏதென்னில், மனிதனுடைய சரீரத்தில் ஸ்தூல தத்துவமாயி ருக்கிற ஆறினுக்குள் சூக்கும தத்துவம் 20-ம் ஓர் சொரூபமாகவும், அதனுள் காரண சரீர  தத்துமான அவித்தை மாயை 2-ம் ஓர் சொரூபமாகவும், இதின் முறையே பிரதி பிம்பித்த ஜீவன் ஈஸ்வரம் என்னும் 2-தத்துவமும் ஓர் பொருளாகவும் இவற்றிற் கெல்லாம் அதிஷ்டா னமாக விரா நின்ற அறிவாகார ஆன்மா ஓர் பொருளாகவுங் காணப்படுதல் போல ஈஸ்வர சொரூபத்திலேயுங் காணத்தகும். அப்படிக்கான பிரமாண்ட சொரூபத்தி ற்குரிய தத்துவங்களில் அபஞ்சீகிருத பஞ்ச பூதங்களுமொன்றாய் நின்ற ஆன்ம தத்து வத்தையே  மேற்கண்டபடி  ஈஸ்வரனானவர்  பிரதி  பிம்பித்   திருக்கின்றனரென விசைத் தேம் யாம் அவ்வான்ம தத்துவமாகிய சைதன்யம் ஸ்வயம்புவா எவ்வித சொரூப த்தையு முண்டுசெய்து கொள்ளவும் அதை ஆவரணிக்கவும் சக்தியுள தென்றறி.
                                                              
                                                                   (24)

சிஷி: இந்தப் பிரகாரம் அகண்டாகார சொரூபத்தில் ஆன்ம தத்துவமா யிராநின்ற ஈஸ்வர சைதன்யம் ஏனைய தத்துவங்களிலும் கூடுங்கால் அஃதெத்தனை விதமாகும்?

குரு: அஃது இன்னு மைந்து விதமாகும். எவ்வாறென்னில்; அவ்வித்தையோடு கூடின சைதன்யத்தை ஜீவசைதன்யமென்றும், அந்தர்க்கரணங்களோடு கூடின சைதன்யத்தைப் பிரமாத்துரு சைதன்யமென்றும், அந்தர்க் கரணங்களின் விருத்தியோடு கூடின சைதன்யத்தைப் பிரமாண சைதன்யமென்றும், இந்திரியங்களோடு கூடின சைதன்யத்தைப் பிரமேயசைதன்யமென்றும், இந்திரிய விஷயங்களோடு கூடின சைதன்யத்தைப் பல சைதன்யமென்றும் பகரலாகும். இந்தச் சைதன்யமாகிய ஆத்மாவையே மாயா சக்திக் காதாரமான அத்வைதாநந்த சொரூப மென்றும், அதற் கைந்தி லக்ஷண முளவென்றுஞ் சொல்லப்படும். எப்படி யென்னில், காலத்திரயத்திலும் ஆதியாத்மீக ஆதி பௌதீக ஆதி தெய்வீக மென்னுந் தாபத்திரயத்திலும் ஒன்றாயிருக்கையால் அது சத்து லக்ஷணம். இருட்டறைக்குள் நன்றாய் மூடி முக்காடிட்டுக்கொண்டு வெளிச்ச முதலிய பிரகாசமின்றி யிருந்து தான் முன்னம் பார்வையிட்டிருப்பதுகளை எண்ணுகில் அவைகள் பிரத்தியட்ச மாய்த் தோற்றுவதனால் அது சித்துலக்ஷணம். சர்வ ஜீவர்கள் சம்மதமாகச் சுழுத்தியவத் தையி லிருக்கிறபடியால் அது ஆநந்த லக்ஷணம். ஒரு காலத்திலும் அழியாதபடியினால்       அது நித்ய லக்ஷணம். எங்கணும் வியாபகமாய் நிராமயமா யிருக்கிறபடியால் அது பரிபூரண   லக்ஷணம் என ஐந்தாம்.

                                                                      (25)

சிஷி: இப்படி ஆத்ம தத்துவமா யிராநின்ற ஈஸ்வரனுக்குச் சித் சொரூபம் எத்தன்மை யெனவும், அவருடைய வினோத சொரூபமாகிய அண்ட புவனங்களில் அவருக்கு நிலயமான வாசஸ்தல மெங்கெனவும் விரித்துரைக்க வேண்டும்?

குரு: ஓ! நுண்ணறிவுடையாய்! இந்த நியாயத்திற் கந்த நியாய மெடுத்துரைக்க வேண்டியது தக்கதுதான். ஞாபகமாய்ச் செவி கொடுப்பாயாக. இதோ வரைந்திருக்கிற காரிய சரீர பாவனைப் படத்திற் கண்ட சூக்கும தத்துவம் - 20, ஸ்தூல தத்துவ மென்கிற ஷட்பாகத்துவம் - 6, ஜீவன் -1, ஆக 27 தத்துவங்களா லேற்பட்ட சிதாபாச மென்னும் வியவகார ஜீவ தேகத்தில் ஆத்ம சொரூபமாகிய உள்ளம் உச்சியி லிருப்பதொப்ப அண்ட பகிரண்டங்கட்குந் தலையாய் விளங்கும் பிரமாண்டத்தினுச்சியே சர்வேஸ்வரனுக்குப் பிரதான நிலயமாகும். சிதாபாசதேகத்தில் நினைப்பாகிய மனம் விருத்தி கெட லலாடத்திலிருப்ப தொப்ப அவ் வண்டவுச்சிக்கும் கீழண்டமே ஈஸ்வரனுக்கு இரண்டாவது நிலயமாகும். சிதாபாச சரீரத்தின் கண்ட ஸ்தானத்தில் நினைப்பாகிய மனமிருப்ப தொப்ப கிருத்தியங்க ணிமித்தம் மண்ணும் விண்ணும் பொருத நின்ற மத்யஸ்தானமே ஈஸவரனுக்கு மூன்றாவது நிலயமாகும். சிதாபாச சரீரத்தி னெஞ்சு ஸ்தானத்தில் விசாரிப்பாகிய புத்தி யிருப்பதொப்ப மேலே சொன்ன மண்ணும்  விண்ணும் பொருத நின்ற மத்ய ஸ்தானத்திற்குங் கீழுள்ள புவனமே ஈஸ்வரனுக்கு நான்காவது நிலயமாகும். சிதாபாச சரீரத்தின் நாபி ஸ்தானத்தில் யாதொரு காரியத்தை நடாத்த ஆயத்தப்படுகிற சித்த மிருப்ப தொப்ப மேலே கண்ட புவனத்திற்குங் கீழுள்ள புவனமே ஈஸ்வரனுக்கு ஐந்தாவது நிலயமாகும்.  சிதாபாச சரீரத்தின் பௌத்ர ஸ்தானந் தொடங்கி தேக ஆத்யந்தமுங் கலந்து நானென்றபிமானிக்கிற அகங்கார மிருப்ப தொப்ப மேற் சொன்ன புவனத்திற்குங் கீழுள்ள புவனமே ஈஸ்வரனுக்கு ஆறாவது நிலயமாகும். இந்த ஆறு நிலையங்களினும் விளங்கா நின்ற சர்வேசுரனுக்கு இன்னும் பிரீதியான ஓர் நிலய முண்டு. அதுதான் மகான்களிருதயம். இப்படி வாசஞ் செய்யா நிற்கும் ஈஸ்வரனுடைய சித் சொரூபம். விஸ்வனென்னுஞ் சிதாபாச வடிவ பாவனையாய் லலாடஸ்தான ஞானநேத்ர தேஜோ மயமாய்    ஆநந்தமூர்த்தமா யிருப்பதென்றறியக் கடவது. இந்நியாயத்தைக் கொண்டே, ஈஸ்வரன்! " தன்னைப்போல ஜீவனையும் படைத்தார் " என்று சாற்றற்கும் ஓர் நியாயம் வந்தது காண்க. 
                
                                             
                                                                       (26)

சிஷி: சர்வேசுரனாகிய தேவனானவர் இன்னணஞ் சொரூபியா யிருந்து கொண்டிருக்க சிலர்கள் "தேவன் அரூபி" என்றதிர்ப்ப தெதனால்?

குரு: நல்வினையுந் தீவினையுமின்றி ஆத்மாநந்தா தீதமாயுள்ள பரப்பிரம்மம் தனக்கன்னியமல்ல தானும் வேறல்ல; சர்வமும் பிரம்மமயம்; அதுவே தான்  என்கிற நிர்விகற்பத்தினிலைத்து இன்ப துன்பமின்றி நிர்ச்சலனமாய் நிர்ச்சங்க மாய் நிர்விகாரமாய் நிர்க்குணமாய் நிர்மலமாய் நிராமயமாய் இராநின்ற சுத்த மெய்ஞ்ஞானி யானவர்கள் ஈஸ்வரற் குள்ளமாயிலங்கும் பரமபதத்தைப் பெறத் தக்கவர்க ளாதலால் அவர்கண் மட்டில் தேவனை அரூபியென நுவல நியாய முண்டு. மற்றையோர்க் கவ்வித நுவல எட்டுணையேனு நியாயமில்லை. இவ்விரு தன்மையு முணராமல் தேவனை அரூபியென வெண்ணிக்கொண்டு ஒருவன் தேவாராதனை முதலிய சத்கர்மங்களைச் செய்யில் அக்கர்மங்களை அரூபியாகிய தேவன் எப்படித்தானறிவார். அதற்கெவ்வித பதவியைக் கொடுப்பார், அவர் தரிசன மெப்படித்தான் கிடைக்குமென்றும்; ஆராதனை செய்பவன் ஸ்தோத்திர ங்களை அரூபியாகிய தேவன் எந்தக் காதாற் கேட்பார் பின்னரெந்தவாயா லுத்தரஞ் சொல்வார். அவன் பணிவிடைகளை எந்தக் கண்ணாற்பார்ப்பார் என்று  மெண்ணுவதோடு தேகமில்லாவிடில் ஹிருதயமில்லை ஹிருதயமில்லாவிடில் தேகமில்லை எனவறிந்தபடி ஹிருதயமில்லாத அரூபத்தை யிருதயமுள்ள கடவு ளெனச் சாற்றுவதுந் தப்பெனச் சிந்திக்க வேண்டும். ஆண், பெண், அலி எனுமடையாள மேதுமின்றி அரூபமாகிய வஸ்துவை ஆண்டன்மையாய்த் தேவனென்றும், ஆண்டவனென்றும் ஒருவன் பேசுவதற் கெப்படித்தானிடம் வந்தது? தேவனை அரூபி யென்று சொன்னால் அவர் கிருத்தியங்களாகிய இவ்வுலகையும் அவர் ஸ்வயம்புவாய் நடத்த ஹிருதய மற்றவரென்றே யாகும். 
         ஹிருதயமுள்ள கடவுள் தான் தேவன் என்னில், அந்த ஹிருதயமிக்க ஓரிடமும் வேண்டும். அப்படிக்கிடமுள்ள ஹிருதயத்தின் கோருதற்படி ஒன்றைப் பார்க்க விழியும், கேட்கச் செவியும், வாசனை யறிய நாசியும், ஒரு வாயும் இந்திரியங்களாயிருக்க வேண்டியதுடன் அந்த ஹிருதயம் வசிக்குமிடமாகிய வீட்டின் கண்ணே ஏதேனுங் கிராண முண்டாகில் அதையறிய உடம்பும் அவசிய மிருக்க வேண்டும். இப்படிக்கில்லாமல், அந்த ஹிருதயமானது தனியே யிருக்க யாதொரு முகாந்தரமுங் காணப்படவில்லை. 
        தேவன் சொரூபியா யில்லாமல் அரூபியா யிருக்கில் அவருக்கு நிலயமாகிய நித்ய வாசஸ்தலமும் ஓரிடத்துமில்லாமல் ஏகமேயாகும். அப்படிக்கேகமேயா னால் அவருடைய சொந்த வீடென்கிற சுவர்க்கம் - இவ்வுலகுக்குமேலென்ன வாவது அதினனு போகஞ்சிலாக்ய மென்னவாவது அதைப் பரலோக மென்ன வாவது  எவ்வளவுங் கூடாதாய் முடியும்.
         பராபரனை அரூபியென்று சொல்பவன் - பராபரன் பேசினா ரென்றாவது நோக்கினாரென்றாவது செவி கொடுத்தா ரென்றாவது வாசனையறிந்தா ரென்றாவது யாதொன்றைக் கொடுத்தா ரென்றாவது சொல்லப்படு வதிலொன்றை ஒத்துக்கொள்வானேல், அது பராபரனுக்கு ரூபமுண்டெனவே காட்டும்.
இத்யாதி காரணவகளால் பிரபஞ்ச சகிதத்தில் ஈஸ்வரனுக்குச் சொரூப முண்டெ னவே ரூபகமாகும்.
 இத்தை நன்காயத் திடமில்லாமல் கறுத்ததெல்லாந் தண்ணீர், வெளுத்த தெல்லாம் பால் என்னு மந்த மதியோர்கடான் அரூபமெனப் பேசுவார்கள். அது பற்றியுனக்கு எவ்வளவேனுஞ் சந்தேகம் வேண்டியதின்று.
                                                                
                                                                (27)

சிஷி: அற்றேல், சில புராணங்களில் "கடவுள் அசரீரியா யுத்தரஞ் செப்பினார்" எனச் சொல்லப் படுகின்றதே அஃதெவ்விதம்?

குரு: கடவுள் தமது சித் சொரூபத்தை ஆவரணித்து சங்கதி தெரிவிப்பதற்காக மட்டும் சப்தமிட்டுத்தரங் கொடுப்பதே அது.
                                                               
                                                                 (28)

சிஷி: அற்றேல், "கைகால்களில்லாம னடக்கிறவனும், கிரகிக்கிறவனும், கண் ணில்லாதவனாய்க் காண்கிறவனும்,  செவியில்லாதவனாய்க் கேட்கிற வனும், ஒருவனாலும் அறியப்படாதவனா யிருக்கிறவனு மெவனோ அவனைத் தேவெனச் சொல்லுகிறார்கள்" என்பதாய் நூல்கணுவல்வ தென்னை?

குரு: ஈஸ்வரனுடைய உள்ளமாம் போதப் பிரமத்தினின்றும் நினைப்பாய்க் கணிக்கப்படும் ஞான தத்துவத்திற்கு அத்தன்மைகளுளவால், அவ்வாறு நூவலலாயிற்று. அந்த தத்துவம் கர்த்தாவுடைய ரூபாரூப நிஷ்கள சகள ஸ்வரூ பத்திலேயே உள்ள தென்று திட்டமாய்த் தெளிக.
                                                             
                                                                   (29)

சிஷி: சத்கர்ம நெறிநின்று கர்த்தாவை அரூபி யெனக் கருதித் தொழுபவர்கட்கு ஏதேனுஞ் சுகம் லபிக்குமோ? லபிக்காவோ?

குரு: அப்படிப்பட்டவர்கள் அறம்பட வியற்றும் ஜீவகாருண்ய தர்மங்களானவை மட்டுந் தங்களைச் சாரப் பெறுவார்கள். இலதேல், அவையும் பொருந்தா. தேவா ராதனை வணக்க முதலியவைகள் அவரைச் சேரா தொழியும். ஏனெனில், ஒரு தனவானிடம்  அனுதினம்  யாசித்து  ஜீவனஞ்  செய்து  வந்த  ஓர்  வறுமையாள னானவன் தன்  பேரவாவால்  அந்நிதியின்  பெருந்திரவியமெல்லாம் தனக்குச் சொந்தப்படக்  கனவு  கண்டு  தன்னுடையதென   வெண்ணி  அக்கனகனிடம் யாசிப்பதையும் விட்டுத் தானோர் தனவானெனத் தீர்மானித்துத் திரியுங்கால் அவனை முன் னறிந்த வொருவன் கண்டு, ஓ! யாசகீ!  உன்           கலாக்ஷேபஞ் செவ்வையாய் நடந்து வருகின்றதோ வென்ற நிமிஷம் மிகச் சினந்து என்ன சொன்னாய் உன்னைப் போலவா நாமும், இவ்வூர்ப் பொன்னன் பொருளெ ல்லாம் எம்முடைய தென்றறியாயோ என்று விரைந்து பறைந்து அப் பொருளி லோர் சிறு காசேனுந் தனக்குபயோகப்படாமலும் யதார்த்தப்படி யாசித்துயிர் வாழாமலுந் தொலையலானது போல, தனக்குக் கிரமமாய்க் கடவுள் வத்சலத் தாற் கிடைக்கப்பட்ட அறிவைக் கொண்டே ஜீவகாருண்யம் ஈஸ்வரபக்தி பாசவைராக்கியம் பிரம்மக்ஞானம் என்னு நான்கு முறைமையு முணர்ந்து தன்னாலியன்ற மட்டும் அறத்தின் வழி நின்று அத்தன் பதந் தொழுதேத்தி யருள் பெற்றுய்யாமல் பிரம்மக் ஞானப் பிரயோஜன மென்னும் பெருங்கதிக்கு மட்டும் ஆசை வைத்து அதற்குரிய சாந்த சாஸ்வத நியாய நிரூபணங்களையும் நூல் களையு நன்குணராது நெருப்பென் றெழுதிய ஏட்டை அடுப்பில் வைத்துக் கொண்டயராம லூதியதனைய அத்வைத மார்க்கம் போற் கடவுளை அரூபமாய்ப் பேசித்  துவைத   மார்க்கம்  போல்  அனுஷ்டிப்புகளைச்  சொல்லா  நிற்கும் புஸ்தகங்களைச் சதா வாசித்து அவ்வழி நடந்து அனன்ய பாவகுண ஐக்யரசப் பிரதான  ஜன்மரகித  பரம  மோக்ஷந்   தனக்குச்  சுதந்தரந்  தானெனச்  சிந்தித்து நியாயமாயேற்பட்ட  நூல்களையும்   நூலாய்ந்தோர்களையுஞ்  சந்தித்தாற் சீறி விழுந்து  தன்  வழியே  பெரிதாய் மெய்ஞ்ஞானிகள் போற் பிதற்றி அம்மெய் ஞ்ஞானத்தில் லேசமுங் சொந்தப் படாமல் இல்லறந்துறவற மென்னும் இரண்டுங் கெட்ட தன்மையாய் "ஆய்ந்தோர்ந்து பாராதான் தான்சாகக் கடவன் " என முடிவதாலென்க. பிறவும் கேள். 
        சூரிய அஸ்தமான காலத்தின் மூடுண்ட அந்தகார இருண் முழுதுஞ் சூரிய தரிசனத்தாலன்றி  நாசமாகா  தென்றறியா  அவிவேகிகள்  அனந்தம்பேர் கூடி அனந்த ஆயுதங்களால் அவ்விருளை  யகற்ற  வென்று  அடித்தும்  வெட்டியும் குத்தியுமான முயற்சியிலிருப்பதுபோல மனோலயமாகாமல் மனந்தடித்து மனம் உருவமாகவுள்ள இச்சாவசத்தோர் அக்ஞானத்தைக் கெடுத்துப் பிரக்யா மாத்ர மான அரூப மெய்ஞ்ஞானத்தைப் பெற வேணு மென்று விடா முயற்சி செய்வ தையு நினைக்க நியாய முண்டா யிருப்பதுமன்றி, ஆத்மார்த்த மறியாமல் வேதாந் திக ளெனவும் சூன்ய மார்க்க மறியாமல் சந்யாசிக ளெனவும் தன்னைத் தானறி யாமல் பந்த மோக்ஷ   மெனவும்    சொல்லிக்   கொள்ளுஞ்   சுமடர்களை மான அவர்களை யெண்ணவும்,     மகிஷம்    ரிஷபத்தையும், கர்த்தபம் துரகத்தையும், நேசிக்க எண்ணியதுபோலும் தரைவாழும் ஜெந்து நீர் வாழும் ஜெந்துவையும்    நீர் வாழும்   ஜெந்து   தரை    வாழும்   ஜெந்துவையும் பிரிவற்று நேசித்திருக்க முயன்றது போலும் அவர்கணின்ற நிலையை ஊகிக்கவும் ஹேது வுண்டா யிருக் கிறது. இன்னமும்;
        இப்படிக் கொவ்வாவழி நிற்பவர் காரிய மெப்படிப்பட்டதேல், அதிமோக த்தால் அழகிய மானைப் புணரவென்றெண்ணிய வொருவன் அம்மானைப்போ லுருப்பட்டுத்  தானுந்  தொடரச்   சாத்தியமின்று,     தன்  மனித   உடம்பொடு தொடர்ந்து கானகந்  திரிந்து பரதவித்துக் கடைசியிற் றன் கருத்து நிறைவேறா தவலப்பட்ட தொக்கும். 
       இவ்வித பிரமாணங்களால் சம்சாரதுக்க நிராகரண நிரபேட்சா பிரகாச அரூப ஞானத்தை விரும்பினவர்,  தானும்    அத்தன்மையையே  பொருந்திற்பயன்படு மென்றும்  இலதேற்  பயன்   படாதென்றும்   தீர்க்கமாய்க்   காணலாமன்றோ. இதனால், சம்சாரதுக்க பீடித மான பெந்த தொந்தங்கட் குள்ளான வியவகார ஜீவர்கள் அஜட அத்வைத நிலையைக் கருதுவ தொழிந்து துவைத நிலையைக் கருதுவதே சிலாக்யம்.
                                                                    
                                                                        (30)

சிஷி: நன்று  யாதொரு  தத்வாதத்வ  நிண்ணயமும்  ஆய்ந்தறியச் சக்தியில்லா வொருவன் மூடபக்தி யாகக் கடவுளைத் தொழுவானேல், அவனுக்கேதேனும் பயனுண்டோ? இன்றோ?

குரு: அவனுக்கு ஈஸ்வரனானவர் மூட நீங்கும்படி அறிவைக் கொடுப்பதே பயன்.
                                                                        (31)

சிஷி: வித்தையிற் சிறந்து சித்தந்தெளி தேசிகனாகிய என் சற்குருநாதா! இவ்வியாசத்திற் காட்டிய பிரம்ம நியமப் படத்தில் கிஞ்சில் சந்தேகங்களெற்குள. விவரம் - சத்ரூப சத்தி சித்ரூப சத்தி ஆநந்த ரூபசத்தி எனக் கண்ட முச்சத்திகளும் அச்சத்திகளோடு கூடிய பரன் பரிபூரணன் பரமாநந்தன் என்பவர்களும் ஈஸ்வர னுக்கு அன்னியம் போற் காணுமாறையும், சத்தி யென்பதும் மாயை யென்பதும் எந்நிலைமையுடைத் தென்பதையும், மூலப் பிரகிருதியின் ரஜோகுண அவித்தையி லுதித்த சிதாபாசர் ஈஸ்வரனுக்குப் பிரத்தியேகமா யுதித்ததுபோ லிருக்குமாறை யும், சூக்கும பஞ்ச பூதங்களின் ரஜோம்சத்தில் ஒவ்வோர் மாத்திரை யொன்றாகச் சேர்ந்து சமானனாதி வாயுக்கள் 5 - மட்டு முண்டானதாகச் சொல்கிறபடிக் கில்லாமல் 10 -வாயுக்களுளதென நூல்க ணொடிக்கு மாறையும், அப்புவின் கூறாய் உதிரமும் மஜ்ஜையும், பிருதிவியின் கூறாய் நரம்பு சர்மம் மாம்சம் என்பும் உற்பனமெனக் கூறியதினின்றும் சின்னூற்க ளதிகமுரைக்கு மாறையும் விளக்கி யருள வேண்டும்! 

குரு: இந்த வியாசத்தின் 24 - வது வினாவுத்தரத்தைக் கவனியாமல் இங்கு சில கடாக்களைக் கடாவினாய். ஆனாலும் வியத்தமாயருள்வேம். சத்தில்லாமற் சத்தி யொன்று மில்லை. அந்தச் சத்துக் காலத்திரயத்தும் நாசமில்லாததாய் நிகழும். அதுவே வஸ்து. அந்த வஸ்தாகிய சத்தின் ஞானமே சித்து. அதின் சுகமே ஆநந்தம். இம் மூன்றஐயுமே 'சச்சிதாநந்த' மெனச் சாற்றுவது. இச்சச்சிதாநந்த லக்ஷண மானது ஒன்றை விட்டு ஒன்று விளங்கா. அதனால் மூன்றும் ஒன்றேயாகும். இஃது சர்வாத்மாக்களின் தன்மையினும் பொருந்தியதே. எவ்வாறேல், பாவத்தை யாற்று வதும் புண்ணியத்தை யாற்றுவதும் தனக் காநந்த முண்டாக வென்றே.இன்னணம் பொருந்தி நிற்பதில் ஒவ்வொன்று விசேஷித்த பண்பு பற்றி சத்ரூபசத்தி சித்ரூப சத்தி ஆநந்தரூப சத்தி யென்றும் பகுதிகூற லாயிற்று. அன்னணமே பரன் முதலிய மூவர்களும் அச்சத்திகட்க்கு நாயகனாய்க் காணப்பட்டார்கள். அவர்கள் சச்சிதா நந்தப் பிரம்மமே அறிவாகாரமாய் விளங்கிய ஈஸ்வரனேயன்றி வேறின்று. அருளாகிய விகிர்தமற்ற சுத்த சத்தியினின்றும் வேறு கலையாய் வந்த ஜகத் உபாதான குண ரூப பிரகிருதியே மாயை. அதுவே சத்துவத்தில் சுத்த மாயை, ரஜசில் அசுத்த மாயை, தமசில்  ஆணவமாகிய அஞ்ஞான மென்றாம். சுத்த மாயை யைக் காரணவுடம் பாகவுள்ள ஈஸ்வரனைப் பதி யெனவும், அசுத்த மாயையைக் காரண வுடம்பாகவுள்ள சிதாபாசரைப் பசுவெனவும், அஞ்ஞான மாயையைப் பாச மெனவும், இம் மூன்றும் அனாதிநித்ய மெனவும் சிவாகமங்கள் செப்பும். ஈஸ்வர பிம்பமாகிய சிதாபாசர்களைப் பிரம்ம அம்சங்களாகவே யெண்ண வேண்டும். அதினால் அழிவற்று அனாதித் தன்மைகுரித் தாயிற்று. அவைகள் மூலப் பிரகிருதியினிடமாய் அணுக்களா யடங்கி யிருக்கும். பிரகிருதியின் ரஜோ குணஞ் சொரூபங் படுங்கால் பகிர்முகப்படும். அணுக்களா யடங்கி யிருப்ப தெவ்விதமேல், வித்தின் அங்குரத்துள் அனேக வித்துக்கள் அடங்கியிருப்பது போன்றாம். அங்குர மென்பது முளை. இவ்வணமான ஜீவாத்மாக்கட்குச் சரீரங் களைக் கற்பித்ததும் ஈஸ்வர சங்கற்பமே. சமானனாதி வாயுக்களைந்தில் பிராண வாயுவொன்றே நாகன் கூர்மன் கிரிகரன் தேவதத்தன் தனஞ்சயன் என்ற வாயுக்க ளாகவும் பிரித்து காட்டுவதாற் பத்து வாயுக்களெனவும், பிருதிவியின் கூறாகிய ரோமத்தைச் சருமத்தினின்றும் பிரத்தியேகமெனவும், அப்புவின் கூறாகிய வேர்வை சுக்கிலம் நீர் இவைகளை உதிரம் மஜ்ஜை இவைகளினின்றும் புறம்பெ னவும் சின்னூற்கள் செப்புகின்றன. அவைகளுமொவ்வும்.
                                                                  
                                                                        (32)

சிஷி: ஈஸ்வரனானவர் சித்சொரூபியா யியங்குவதில் அவருக்கு எக்காலெனும் ஊணுறக்கமுண்டா?

குரு: காரிய சரீர பாவனைப் படத்தில் விவரிக்கப்பட்டபடி உதிரம் மஜ்ஜை மாம்சம் சருமம் நரம்பு என்பு என்ற ஆறு தத்துவமாம் ஸ்தூல சரீரம் அன்னமய கோசத்திற் குட்பட்டது. இதோ வரைந்திருக்கின்ற படத்திற் கண்டபடி 20 - தத்து வமுள்ள சூக்கும சரீரமானது : பிராண வாயுவுங் கருமேந்திரியமுங் கூடிய பிராண மய கோசம், மனதுங் கருமேந்தி ரியமுங் கூடிய மனோமய கோசம், புத்தியும் ஞானேந்திரியமுங் கூடிய விஞ்ஞானமய கோசம், காரண சரீரமாகிய ஆனந்தமய கோசம் எனு நான்கு கோசங்கட்கும் உட்பட்டதாகும். இன்னணம் 5 - கோசங்கட்கு முள்ளான மூன்று சரீரங்களும் சிதாபாசர்கட்கே யுரியதாகும். ஈதெல்லா மல்லாத ஆன்ம மயமாகிய சித்சொரூபம்; உருவமும் அருவமு மில்லாமல் ரூபா ரூபமாய் விளங்கும். இதுதான் அந்தரங்காதிரேகம். உதாகரண மென்னையேல், ஜீவான்மா க்கள் ஸ்தூலத்தை மறந்து சூட்சம சொற்பனங் காணுங்கால் தன்னோடு ஸ்தூல பிரபஞ்சமும் அனுபவமும் மெய்யாய்ப் பார்ப்பது போலன்றோ சித்சொரூப வுண்மை. அன்றி கடவுளடியார்களாகிய ஜீவன் முக்தர்களே ஊணுறக்க மின்றுய் வாராயின் கடவுள் அதற் கெவ்வாறுள்ளாவார்? சொல்!


                                                                
                                                                         (33)

சிஷி: இன்னண சொரூபக் கடவுளை என் போலிய ஸ்தூல சரீர தரிசிப்ப தென்னில் எப்படிக்கியலும்?

குரு: தசேந்திரிய சமுதாயமின்றி அந்தர்க் கரண சுத்த நிர்ச்சலன யோகத்தி னிலைத்துத் தரிசிக் கலாமே யன்றி, ஜாக்ரத்தில் அச்சித் சொரூப தேவைத் தரிசிக்கக் கூடா. ஆனால், ஒருவன் ஈஸ்வர பக்தியிற் சிறந்து சத்தினி பாதம் அதாவது  மந்தம்  மந்ததரம், தீவரம், தீவரதரம் என்னு நான்கு பருவங்களில் எதிலேனும் பொருந்துவனேல், அம்முறை கண்டு சரியை யனுஷ்டிப்பாகிய சமய தீக்ஷையை யேனும் கிரியா யோக அனுஷ்டிப்பாகிய விசேஷ தீக்ஷையை யேனும் ஞானமாகிய நிருவாண தீக்ஷையை யேனும் அனுக்கிரகிப்பதற்காக குருமூர்த்த மாய் மானைக் காட்டி, மானைப் பிடிப்பதுபோல கர்த்தா வானவர் லலாடஸ்தான நேத்திர மொழித்து மானிடச் சட்டை சாத்தி ஊரும் பேரு முருவு மொழிக்க ஊரும் பேரும் உருவுங் கொண்டு எழுந்தருளுவாரேல் ஸ்தூல திருஷ்டியாற் றரிசிப்பதுள.
                                                                 (34)

சிஷி: கடவுளுக்குத் தேவனென்றும் தெய்வமென்றும் ஆக்குவயம் வந்ததென்ன?

குரு: அவ்வாக்கு வயத்தின் பகுதி: திவ் அல்லது தியா. அர்த்தம்; - பிரகாச மென்பதே . திவ் என்ப திலிருந்து தேவ் தேவனென்றும் தியா என்பதிலிருந்து தெய்வமென்றுஞ் சொல்ல வந்தன. இதனால் சொற்ற சமஸ்கிருத அர்த்தப்படி கடவுள் ஜோதியானவர், பிரகாசமானவர் எனச் சொல்வதன்றி, கற்பிதமான பெயராய்க் கணிக் கொணா.
                                                                
                                                                   (35)

சிஷி: மெய்யே. சர்வமகத்துவந் தங்கிய சர்வேஸ்வரனுக்கு அடியிற் கிளத்து மபி தானங்கள் நூலா தாரங்களில் வழங்கப்படு கின்றதற்குறு    மருத்தங்களையு மடி யேற்கருள வேண்டும்!       அவைகளாவன:   நிர்மலன், நிரஞ்சனன், நிர்விகாரன், நிர்விசாரன்,நிர்ச்சங்கன்,நிராமயன்,நிர்விகற்பன்,நிஷ் பிரபஞ்சன், நிர்ச்சிந்தனன், நிரவயவன், நிராகாரன், நிராசூசன், நிராலம்பன், நிர்விஷயன், நிரபேஷன், நிராசனன், நிர்ச்சலனன், நிமலன், நிர்க்குணன், நிருத்தன், நிதானன், நிஷ்களன், நிர்நாமன், நிரபிதானன், நிர்ஜனனன், நிருபாதானன், நிரந்தரன், நிரஸ்தியயன், நிரம்பரன், நித்தன், நிகரிலான், நிஷ்கன்மன், நிராவரணன், நிர்விசனன், நிரதி சயாநந்தன், நிஷ்களங்கன், நிராங்கரன், நிலைவரன், நிர்வசனன், நிராகுலன், நிர்நாசன், நிர்வாணன், நிர்விக்கினன், நிராகன், நிரபராதி, நிரபாயன், அப்பிர மேயன், அனாதரன், அபரிச்சின்னன், அகளங்கன், அனங்கன், அனந்தன், அசங்கன், அவிகிர்தன், அம்பரன், அவிசனன், அமலன், அனன்னியன், அதிகு ணன், அதீதன், அபேதன், அகண்டன், அகண்டாகாரன், அபரோஷன், அவி க்ஷேபன், அக்ஞானரகிதன், அபகிதன், அபிதானரகிதன், அசத்தியரகிதன், அனுகுணரகிதன், அனுசிதரகிதன், அசுத்தரகிதன், ஆநந்தன், ஆண்டவன், சர்வக்ஞன், சர்வ கற்பிதன், சர்வசக்தன், சர்வகத் திருத்துவன், சர்வாதாரன், சர்வசமன், சர்வாத்மகன், சர்வபூரணன், சர்வகாரணன், சர்வநியந்துரு, சர்வதா சாக்ஷி, சர்வேந்திரியாமி, சர்வாந்திரியாமி, சர்வோபாதி சூன்யன், சச்சிதாநந்தன், சம்யுக்தன், சதாநந்தன், சமயாதீதன், சாந்தன், சாஸ்வதன், ஷாட்குண்யன், சாதா ரணன், சாயுஜ்யன், சைதன்யன், தானவன், தற்பரன், தத்துவன், பரமன், பரமாத்து மன், பராபரன், பகவான், பராதீனன், பவாதீதன், பக்தவத்சலன், விரக்திப் பிரகாசியன், விரக்தி ஞானப் பிரகாசியன், ஆத்ம பிரகாசியன், ஆத்ம ஞானப் பிரகாசியன், ஆத்ம சொரூப ஞானப் பிரகாசியன் என்பவைகளே.  

குரு: இந்த நாமங்கட் கருத்தம் முறையே, மாசில்லாதவன், இருளில்லாதவன், விகார மில்லாதவன், கவலை யில்லாதவன், தனிமையானவன், நோயில்லா தவன், ஒருமை யுணர்ச்சியன், உலகங்கட்கன்னியத்தான சாந்த முள்ளவன், நினைப்பற்றவன், உடலற்றவன், எங்குமுள்ளவன், சூதகமற்றவன், யாதொரு சார்புமற்றவன், தொழிலற்றவன், ஆசையற்றவன், இருப்பிடமற்றவன், அசை வற்றவன், சுத்தமானவன், குணமில்லாதவன், கட்டுப்பாடில்லாதவன், நிச்சய மான  ஆதிகாரணன், கலப்பில்லாதவன், நாமமில்லாதவன், பெயரில்லாதவன், பிறப்பில்லாதவன், துணைக் காரண மில்லாதவன், எப்பொழுது முள்ளவன், குற்ற மில்லாதவன், ஆகாயத்தைப் போல நிருவாணமானவன், அழிவில்லாத வன், ஒப்பற்றவன், கிருத்திய மில்லாதவன், பகிரங்கமானவன், கவலையற்ற வன், அற்புதங்குறித் தளவிடப்படாத ஆநந்த முள்ளவன், மாசற்றவன், இறுமாப் பற்றவன், உறுதியானவன், மௌனமானவன், சந்தோஷமுள்ளவன், என்றுமுள் ளவன், மோக்ஷமுள்ளவன், இடையூறில்லாதவன், உருவிலாதவன், பிழையிலா தவன், நாசமிலாதவன், அளவிடப்படாதவன், ஆதரவிலாதவன், குறிப்புக்கான அடையாள மொன்று மிலாதவன், அழுக்கிலாதவன், அரூபி, முடிவிலி, கூட்டமிலி, வேறுபாடிலி, பரவெளியுடையவன், மகிழ்ச்சியுடையவன், பரிசுத்த முடையவன், எல்லாமுடையவன், நற்குண முடையவன், மேலானவன், பேத மிலாதவன், எல்லை யிலாதவன், எல்லை யில்லா வடிவானவன், தான் தானே திரிசியமானவன், அஞ்ஞான காரியமா யிரா நின்ற சஞ்சலத்துவ மில்லாதவன், ஞான முடையவன், கீழ்மை யில்லாதவன், ஆக்குவய மில்லாதவன், பொய்யில் லாதவன், குணத்தொடர்  பில்லாதவன், அசுத்த மில்லாதவன், தூய்மையுள்ள வன், பேரின்ப முள்ளவன், யாவு மாள்கையா யுள்ளவன், எல்லா மறிகிறவன், எல்லா நிருமிப்பவன், எல்லா வல்லமையு முள்ளவன், எல்லா அதிகாரமு முடை யவன், எல்லாவற்றிற்கு மாதாரமானவன், எல்லாத்திலுஞ் சமமானவன், எல்லா ஆத்மாக்களுமானவன், எல்லா நிறைவுமானவன், எல்லாத்துள்ளும் பிரதானமா னவன், எல்லாந் தன்னேவலிலுள்ளவன், எல்லாவற்றிற்குந் திருஷ்டாந்தமான வன், எல்லாவிந்திரியங்களிலும்  பிரவேசித்திருப்பவன், எல்லா விருதயங்களிலு மந்தரங்கமா யிருப்பவன், எல்லா வுபாதியுமற்றவன், சத்து சித்தாநந்தமா வுள்ள வன், யாதொருவர் போதகமின்றித் தானே  பொதுவாய் நடத்தும் யோசனையை யுடையவன், என்று மின்பமுடையவன், உட்சமயம் புறச் சமயங்கட்கு மெட்டாதி ருப்பவன், பொறுமையை யுடையவன், நித்யமானவன், சர்வஞ் ஞத்துவ - சர்வேச்சுரத்துவ - சர்வ நியந்திருத்வ - சர்வாந்த்திரியாமித்வ - சர்வ கற்பிதத்துவ - சர்வ சத்தித்துவ மென்னும் ஆறு குணங்களையு முடையவன், அனைத்துக்கும் பொதுவானவன், ஆத்மாக்களுக்குக் குணஐக்ய முத்தியை அளிப்பவன், பூத பௌதிகங்களல்லாத சுத்த ஆத்மாவானவன், தானே தானானவன், தானே ஆதி யானவன், உண்மையானவன், முன்னும் பின்னு மானவன், அவாவற்றவன், ஞான மானவன், பிரதானமானவன், பரமாத்ம சொரூப மானவன், ஜீவர்கட்குக் கொடுக்கும் இறப்புதிப்பிலா மோக்ஷத்தை யாதீனமாக வுடையவன், பாவங் கட்குப் புறம்பானவன், தாசர்கள் பேரிற் றயவுடையவன், ஆத்மாக்க ணிமித்தம் துறவுமார்க்கத்தில்  விளங்குபவன், துறவுமார்க்க ஞானத்தில் விளங்குபவன், ஆத்மாக்களில் ஒளி செய்பவன், ஆத்மாக்களில் ஞான ரூபமாய்ச் சின்மாத்திரமா யொளி செய்பவன், ஞானத்தைச் சொரூபமாயுள்ள ஆத்மாவிலொளி செய்ப வன் என்பனவாம். இன்னமும் எம்பிரானாகிய ஈஸ்வரனுக்கு காரணப் பெயர் களுண்டு. அவைகட்கு மிவைகட்கு மனந்த விதமாய்த் தனித்தனி யருத்தம் பயக்கவும் இடமுண்டெனவும் அவைகளை யெல்லாம் சொல்லத்  துணிவ தென்றால் மகாவாக்கிய வியாக்யானமாய் முடியு மெனவும் இங்ஙனங் குறிப்பா யெடுத்துனக்கியம்பலுற்றேம். மேற்கண்ட நாமார்த்தங்க ளெல்லாம் ஈஸ்வர னுக்குச் சகளமும் நிஷ்கள சகளமும் நிஷ்களமுமாம்.
                                                                    
                                                                          (36)

சிஷி: ஓ! சுவாமி! கடவுட் டன்மையை யுணர்த்தக்கூடிய பல் பெயர்களை யான் தெரிவித்து அருத்தந் தெரிந்து கொண்டதில், கலியாண சந்தடியிற் றாலிகட்ட மறந்துவிட்ட தென்ன, கடவுளுக்கு ஈஸ்வரன் என்ற பெயரெதனால் வந்ததென் பதை வினவாது விட்டுவிட்டேன். அதையு மறிவிக்க வேண்டும்!

குரு: இறையவனா யிருந்து சிதாபாச ஜீவகுழாங்கட் குரிய சகல வனுபவமுங் கொடுக்குந் தன்மையால் ஈஸ்வர னென்றும், அவ்வனுபவ நிமித்தந் தானுண்டா க்கும் பிரபஞ்சத்தை ஒருத்தராலுந் திருப்பப்படாது கொண்டு சர்வேஸ்வர னென்றும் கடவுளுக்குத் தகைமையான இரண்டாக்குவயம் வந்தனவாம்.
                                                            
                                                                           (37)

சிஷி: ஈஸ்வரனுடைய சகளமும் நிஷ்களமுமுண்டென்பதை யுணர்த்துந் திருஷ்டாந்தங்களெவை?

குரு: இச்சையற்ற பகவானுக்கு இவ்வுலகங்களைச் சிருஷ்டிக்க இச்சை வந்ததும், கற்பித்த வுலகங்களை ஐங்கிருத்தியங்களால் பிரேரிக்க அபேட்சை வந்ததும், தன்னை நாடி வழிபடுவார் ஸ்தோத்திரங்கட் கிரங்கி யுளமகிழ்ந்து கருணை செய்ய நயப்பு வந்ததுமே சகளத்தை யுணர்த்தப் போந்த திருஷ்டாந்த மாம். இந்தச் சகளம் அநித்ய மென்பது சத்யமாதலால், இச்சையற்ற நித்யமாகிய ஈஸ்வரனுக்கு நிஷ்களமொன்றன் யத்தா யுண்டென வுணர்த்த இதுவும் போந்த திருஷ்டாந்தமாம்.
                                                              
                                                                          (38)

சிஷி: சர்வேசுவரனுடைய விர்த்தாந்தங்க ளெல்லாம் அநேகமா யறிந்தேன். நால் வகை யோனி எழுவகைத் தோற்றம் எண்பத்து நான்கு நூறாயிரம் ஜீவ பேதங்க ளென்று இவ்வியாசத்தின் 12 -வது உத்தரத்தின் கடாசியில் தாங்க ணவின்றதற் கும் வகை விபரம் வழங்க வேண்டும்!

குரு: பை, முட்டை, நிலம், வியர்வை என்பது நால்வகை யோனி. * தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர் வாழ்வன, ஸ்தாவர மென்பது எழு வகைத் தோற்றம், அவற்றுள் தேவர் பதினான்கு நூறாயிரம், மக்களொன்பது நூறாயிரம், விலங்கு பத்து நூறாயிரம், புள் பத்து நூறாயிரம், ஊர்வன பதினொரு நூறாயிரம், நீர்வாழ்வன பத்து நூறாயிரம், ஸ்தாபரம் இருபது நூறாயிரம் ஆக எண்பத்து நான்கு நூறாயிரம் ஜீவபேதங்களாம். இந்தப் பேதங்க ளொவ்வொன்றிலும் அளவிறந்த ஜீவன்கடோன்றிக் கொண்டிருக்கின்றன.
( * தேவர், மக்கள், பைசாசு, நாகர், விலங்கு, புள், ஜெந்து என்பவைகள் எழு      வகைத் தோற்ற மென்றுஞ் சின்னூற் செப்பும். )
                                                                   
                                                                         (39)

சிஷி: இஃது சரியே. விஷ்ணு வைனதேயனுக்குச் சொன்னதா யிருக்கின்ற புராணத்தின் 2 -வது அத்தியாயத்தில் அண்டஜமாகிய பறவை முதலியன 21 - லக்ஷம், உத்பிஜமாகிய தாவர முதலியன 21 - லக்ஷம், ஜராயுஜமாகிய மக்கள் முதலியன 21 - லக்ஷம், சுவேதஜமாகிய கொசுகு முதலியன 21 - லக்ஷம் ஆக யோனி நாலுக்கும் என்பத்து நான்கு நூறாயிரமென்று ஒரே தொகுதியாய்ச் சொல்லி யிருப்ப தென்னை?

குரு: அஃதாவது : அண்டஜமாகிய முட்டையிலிருந்து பறவைகள் 10 - லக்ஷம், ஊர்வன 6 - லக்ஷம், நீர்வாழ்வன 5 - லக்ஷம் ஆக அண்டஜம்  21 - லக்ஷமென்றும்; உத் பிஜமாகிய நிலத்திலிருந்து  தாவரம் 20 - லக்ஷம்,  நீர் வாழ்வன 1 - லக்ஷம் ஆக உத் பிஜம் 21 - லக்ஷ மென்றும்; ஜராயுஜமாகிய பையிலிருந்து தேவர் 1 -லக்ஷம், மக்கள் 9 -லக்ஷம், விலங்கு 10 - லக்ஷம், நீர் வாழ்வன 1 - லக்ஷம் ஆக ஜராயுஜம் 21 - லக்ஷமென்றும்; சுவேதஜமாகிய வியர்வையிலிருந்து தேவர் 13 - லக்ஷம், நீர் வாழ்வன 3 - லக்ஷம், ஊர்வன 5 - லக்ஷம் ஆக சுவேதஜம் 21 லக்ஷமென்றும் சொன்னதா யறியலாம். ஈதும் யாஞ் சொற்ற கணக்கின்படியேயாம்.
                                                                   
                                                                        (40)

சிஷி: அந்த எழுவகைத் தோற்றங்களில் அசுரர் முதலியோர் தொகை ஏன் வரவில்லை?

குரு: அது தேவர்கட் கேற்பட்ட தொகையிற் சேர்ந்திருக்கிறது.
                                                                    
                                                                        (41) 

சிஷி: சொல்லிய தோற்றம் ஏழில் மக்கள் முதல் ஆறும் யான் பார்த்திருக்கிறேன். தேவர் என்பதையான் பார்த்ததில்லை. ஆதலால் அவர் யாவர்?

குரு: அவர்கடான் தேவர்கள் பதியில் வாழுந்தேவர்கள்.
                                                                  
                                                                       (42)

சிஷி: ஈ தென்னை? ஆச்சரியத்திலாச்சரியமாயிருக்கின்றது ஓ! எமதையனே! அந்த விர்த்தாந்தங்களை யெல்லாந் தங்களிடத்தில் வினாவ இன்று நேரம் போதாமையா யிருக்கின்றது. நாளை யுதயத்தில் படிக்கத் தயவு செய்வீர்களாக. ஈஸ்வரன் இல்லை யென்றிருந்த வெற்கு ஈஸ்வரனுண்டென் றொப்புவித்த இப்பெரிய திருவடிகட்கு உரிய தண்டன் சமர்ப்பித்தனன்றோ.

குரு: நன்று நன்று சற்குருநாதன் கடாக்ஷிக்க!
                                     
                                     கடவுளைக் குறித்த வியாசம் முற்றிற்று.
                                                              ஆக வினா 42.







                                     ஓம்:
                                            ஸ்ரீ சரவணோத்பவ பரப்பிரம்மனே நம:
                                            
                               2 -ஆவது
                                   
                                        தேவர்களைக் குறித்த வியாசம்

மறுநாட் காலையில் விஷயப்பிரியனாகிய சிஷியன் விவேக பூரணனாகிய குருவைத் தரிசித்து வணங்கி இதைப் பேசலுற்றனன்.       
                               
                                                                                (1)

சிஷியன்:  சென்றதினம் தேவர்கள் பதியில் வாழுந் தேவர்களென்று தாங்க ணுவன்றதற்கு விவர மென்னை?

குரு: அமரர் கற்பத்திற்கு ஆண்டகையாகிய ஆகண்டலன் முதலிய முப்பத்து முக்கோடி தேவர்களும், சத்தியலோகத்திற்குத் தலைவனாகிய தமனியனா தியரும், வைகுந்த பதவிக் கரையனாகிய மாதவனாதியரும், உருத்திரபதிக்கு நாயகனாகிய உருத்திரன் முதலியோரும், மகேஸ்வரபதிக்கு அதிபனாகிய மகேஸ்வரன் முதலியோரும், சதாசிவபதிக்கு இறையாகிய சதாசிவன் முதலி யோரும், மற்றுந் தெய்வீகத்தன்மை பொருந்தினோரும் தேவர்களாவார்கள்.
                                                                   
 (2)

சிஷி: அந்தத் தேவர்கள் அப்பதிகளில் எதற்காக வேற்பட்டிருக்கின்றனர்?

குரு: சர்வேஸ்வரனுடைய பஞ்ச கிருத்தியங்களாகிய (1) சிருஷ்டி, (2) திதி,     (3) சங்காரம், (4) திரோபவம், (5) அனுக்கிரகம் என்னுமைந்து தொழில்களால் சகல லோகங்களையும் பேதாபேதமின்றி நீதியாய் நடாத்த வேற்பட்டிருக்கின் றனர்.
                                                                    
(3)

சிஷி: அவ்வைந்து கிருத்தியங்கட்குஞ் சர்வ வல்லமையுடைய சர்வேஸ்வர னொருவன் நித்தியமாயிருந்து கொண்டிருக்க வேறு தேவர்களிருந்து நடாத்த வேண்டிய தவசியமின்றே. ஆதலால், அவ்வித முண்டென்று தாங்கள் தீர்மானி க்கிற அத்தேவர்களிருக்கிறார்களென்பதை நம்பற்கு நியாயமென்ன?

குரு: நீ, எதைத்தான் இலேசாய் நம்புகிறாய்! இதை நம்பற்கு ஆயினும், நின் சந்தேக விபரீதத்தைப் பரிகரிக்க வேண்டியது நங்கடமைதான். கேள்; ஓர்நகரத்திற் கதியனாயிருந்து அந்நகரைத் தன்னைக்யமாயாளு மரசன் தன்னிடத் துளா  ரெவரையு *நிஷேதஞ் செய்து ஏகனாயிருந் தெத்தொழில் புரிவன் எத்தன்மை யாவன் என்பதை யுற்றுணர்வாயேல், யாஞ்சொற்றது மித்தன்மைத் துளவென் றருத்தமாமன்றோ?       ( * நிஷேதம் - விலங்கு )
                                                                     
                                                                                 (4)



சிஷி: யானைக்கும் பானைக்குஞ் சரியென்று தீர்த்தாற் போற்றீர்க்கின்றீர்கள். அவ்வரசனைப் போலவா தேவன்? அவர் சர்வ வல்லமை யுடையவராயிற்றே; அவருக்கு வேறொருவர் துணை யாதுக்கு?



குரு: சர்வவல்லமை யுடையவரேனும் பஞ்ச கிருத்தியங்களை அவர் நேரே வைத்துக் கொள வேண்டிய தவசியமின் றென்பதாய்த் தேவர்களுடைய தீர்மானத்திற்குள் வைத்திருக்கிறா ரென்பதற்குப் போந்த பிரமாணங்க ளுண்டு. அவற்றுளொன்றைப் பகர்கின்றோம். நம்முடைய சரீரத்தில் ஹிருதயமானது பிரதானமா யிருந்தும், அஃதொரு கருமஞ் செய்க வெனின் இந்திரியங்களை யேவல்கொண்டு முடிக்கின்றது. இஃது கிரம்முறையா யிருப்பதுபோலச் சர்வேஸ்வரன் தன்னாலாகு மனைத்திற்குந் தலையாயிருந்து கொண்டு தன்னீதி வழி பிரேரித்தல் தக்கது.

                                                                    
(5)

சிஷி: அத்தேவர்களைக்கொண்டு அவ்வைந்து தொழிலும் பிரேரிக்கப்படு வதேல், அவ்வைவர்களாகத் தானேயிருக்க வேண்டும்? அபாரியா யோதக் காரணம் யாது?

குரு: ஒவ்வொரு காரியம்  புரிதற் கொவ்வொரு வித எண்ணம் வேண்டுதல் போல, அவரவர்களாளுகைக்குரிய பரிக்கிரக வினோத விளையாட்டுக்குத் தகுமாறு அப்படிப் பல தேவர்களு மேற்பட்டனர்.
                                                                    
(6)

சிஷி: அப்பஞ்ச கர்த்தாக்கள், எத்திறங் கொடு அத்தொழிலியற்று கின்றனர்?

குரு: அஃது, எம்பிரானாகிய ஈஸ்வரன் றிறங்கொடு.
                                                                    
(7)

சிஷி: அப்படியாயின், அவர்களைத் தேவர்களென்  றுயர்த்துவானேன்?

குரு: சித்ரூபமாய் விளங்கிய ஈஸ்வர பிரதிபிம்பர்களாகிய பஞ்சகர்த்தாக்கள் ஜாக்ர, சொப்பன, சுழுத்தி, துரிய, துரியா தீதம்வரையில் ஒன்றிக் கொன்று விசேஷித்து காலத்திரய வர்த்தமானத்தோடு பிரபஞ்ச சகிதமாயும், பிரபஞ்ச ரகிதமாயும் விளங்கா நிற்பதால் அவ்வாறுயர்த்தலாயிற்று.
                                                                   
(8)

சிஷி: சகல ஜீவான்மாக்களையும் இப்போழ்து நாம் பார்த்தமட்டில் மனிதருக்கு விசேஈமாய் ஒன்றுங் காணப்படவில்லை. அப்படிக்கான மனிதருக்கே காலத்தி ரயம் பிடிபடாமலும் மேற்கூறிய விசித்திர சங்கதிக ளின்னதென் றுணரத் தகாம லுமிருந்தக்கால் தாங்கள் பகர்ந்த துண்மையென் றெவ்வாறு நிச்சயிக்கலாம்?

குரு: 'எல்லா மிருட்டென் றெண்ணிக் கொண்டானாம், பொல்லா வினைசேர் பிறவிக்குருடன் ' , என்றது போல, நினக்கப்படி பட்டவைகள் தென்படாதிரு க்கின் ஏனையோர்கட்கு ம்பபடியிருக்குமென் றெண்ணுவது தகுதியன்று. மனிதர்கள் செய்யக்கூடியதை மட்டும் மனிதர்கள் செய்து முடிக்கலாமே தவிர, அத்தேவர்களைப்போற் சாதாரணமாய் விசித்திரவிலாசம் புரியத்தரமில்லை. ஆனால், மனிதர்களில் ஜோதிர்ஷ நூன்மூலமாய்க் காலத் திரயத்தையும், யோகபூரணத்தால் அஷ்டமாசித்தி முதலானவைகளையும் தெரிந்தனுபவிக்கத் தக்கவர்களாவார்கள். மற்றையோர்கட்கவைதெரிய வெளிதன்று.
                                                                
(9)

சிஷி: ஜோதிர்ஷம் அஷ்டமாசித்தி முதலானவைகளை, மனிதர்கள் தெரிந்தனுப விப்ப திருக்கட்டும். தேவர்களிருந்த துண்மையா யிருந்தாலும், இவ்வுலகஞ் சிருஷ்டிக்கப்பட் டெவ்வளவோ அளவிறந்த காலங்களா யிருக்க வேண்டும்; ஆயின், அவர்களிது காறு மிறப்பின்றி யிருக்கிறார்களெனுங் கூற்றை யேற்றுக் கொள்ளலாமோ?

குரு: அக்கோ! அக்கோ! ஈதென்னவநியாயம்; தேவர்கள், சத்தியமான பகவானு டைய ஐங்கிருத்தி யங்களை அண்ட பிண்ட முள்ளளவும் அவரவர்கட் கேற்பட்ட தேவவயது நூற்றுக்குக் குறைவின்றி நிலை பரமாயிருந்து நடாத்தும்படி நியமிக் கப்பட்டவர்களாயும், தன்னையுந் தலைவனையு மறிவதென்னுந் தத்பத்தைச் சார்ந்தவர்களாயு மிருக்கிறார்கள். அவர்களையும் நரர்களை மான நுவலில், அறிவீனமன்றோ?
                                                                  
(10)

சிஷி: அவர்க ளிருக்கிறார்களெனற்குப் பிரத்தியக்கப் பிரமாண மென்னை?

குரு: பஞ்சபூத பௌதிகப் பிரவிருத்திகளும் அவைகள் தத்தம் ஆணை கடவா தியங்குகின்றதுமே பிரத்தியக்கப் பிரமாணம்.
                                                                   
(11)

சிஷி: இவைகளெல்லாம் 1 - ஆவது வியாசத்துழி கடவுளருளா யியம்பியதாங்கள், ஈண்டு தேவர்களருளா யியம்புவ தென்னை?

குரு: இவ்வியாசத்தின் 6 - வது வினாவுத்தரம் இதற்குப் பொருளா யிருப்பதால், இவ்வினா வீணேயாகும்.
                                                                   
(12)

சிஷி:  இந்த வியாசத்தின் 1 ஆவது வினாவிடையிற்சொன்ன பலதேவர்களில் சிருஷ்டி யாதி பஞ்ச கிருத்தியங்களையும், முறையே பிரேரிக்குந் தேவர்கள் பெயரையும், அவற்களுற் பனமான விவரத்தையும் லக்ஷணத்தோடு விளங்கி யருண்மின்!

குரு: ஆன்மாக்கள் பொருட்டு ஜட சிருஷ்டி செய்பவருக்குப் பிரமா வென்றும், அவைகளைக் காத்தலாகிய திதி புரிபவருக்கு விஷ்ணு வென்றும், அவைகட்குள வினை தீர்த் தழித்தலாகிய சங்காரம் நடாத்துபவருக்கு உருத்திர னென்றும், அவ்வினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில்  ஆன்மாக்களை யமிழ்த் துதலாகிய திரோபவம் வழங்குபவருக்கு மகேஸ்வரனென்றும், அவைகட்குப் பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதலாகிய அனுக்கிரக மருள்பவருக்குச் சதாசிவ னென்றும் பெயர். இவ்வைவரையுமே பஞ்ச கர்த்தாக்களென்றும், பஞ்சமூர்த்திகளென்றும், பஞ்ச தெய்வங்களென்றும் பகரப்படும்.
        இவர்க ளுற்பன மெப்படியெனில், 1 - ஆவது ஆகிய பிரம்ம நியமப் படத்தில் விவரித்தப்படி விட்சேபசலனமே சுபாவமான மாயாந்தகாரத்தில் சப்த தன்மாத்திரையான  அரூப  ஆகாய  முண்டாயிற்று.    அதிற்   பிரதி   பிம்பித்த ஈஸ்வரனே சதாசிவன். அரூப ஆகாயத்தில் சப்தத்துடன் பரிச தன்மாத்திரையா யான வாயுவுண்டாயிற்று. அதிற் பிரதிபிம்பித்த ஈஸ்வரனே மகேஸ்வரன். ரூபா ரூபமான அவ்வாயுவில் சப்த பரிசத்துடன் ரூபதன் மாத்திரையான தேயு வுண்டா யிற்று. அதிற் பிரதிபிம்பித்த ஈஸ்வரனே உருத்திரன். ரூப முள்ள தேயுவில் சப்த பரிச ரூபத்துடன் ரச தன்மாத்திரையான அப்புவுண்டாயிற்று. அதிற் பிரதிபிம்பி த்த ஈஸ்வரனே விஷ்ணு. ரூப முள்ள ஜலமாகிய அவ்வப்புவில் சப்த பரிச ரூப  ரசத்துடன் கந்ததன் மாத்திரையான பிருதிவி யுண்டாயிற்று. அதிற் பிரதிபிம்பி த்த ஈஸ்வரனே  பிரமா. இங்குரைத்த பூதிய மைந்தும் காரணபூத மாகுமென்பர் கற்றுவல்லோர். 
இப்படிப் பஞ்சபூதாத்மகமாக வுண்டான பஞ்ச கர்த்தாக்கட்கு முறையே ஜாக்ரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்ற ஐந்தவஸ்தைகளு முள.
இந்தப் பஞ்சமூர்த்தங்களும் ஈஸ்வரனுக்குப் பிரதான ஸவரூபங்களாகும். அவற்றுள் ஈஸ்வர ஸ்தூல சரீர முழுதும் ஜாக்ரமாயிருத்தலால், அதைப் பொருந்திய ஈஸ்வரனை வைஸ்வாநர னென்றும், அதிஷ்டான சைதன்யம் பிரமாவென்றுஞ் சொல்லலாம்.
ஈஸ்வர சூக்கும சரீரமுழுதும் சொப்பனமாயிருத்தலால், அதைப் பொருந்திய ஈஸ்வரனைச் சூத்திராத்மா வென்றும், அதிஷ்டான சைதன்யம் விஷ்ணு வென்றுஞ் சொல்லலாம். 
ஈஸ்வர காரணசரீர முழுதும் சுழுத்தியாயிருத்தலால், அதைப் பொருந்திய ஈஸ்வரனை அந்தரியாமி யென்றும், அதிஷ்டான சைதன்யம்  உருத்திரனென் றுஞ் சொல்லலாம்.
இந்தப் பிரகாரம் மூன்று சரீரத்திற்கும் மூன்று கர்த்தாக்கள் அதிஷ்டான சைதன் யமா யிருக்கிறதில், முற்கூறிய மகேஸ்வரன் சதாசிவன் என்ற இரண்டு கர்த்தாக் களும் ஈஸ்வர காரணசரீரமாகிய சுத்த மாயையில் அந்தரங்கமாய் வாயுவைப் போலும் ஆகாயத்தைப்போலும் கலந்து நிற்பவர்களா யிருக்கிறார்கள்.
                                                             
(13)

சிஷி: நன்று - அவயவசொரூப மல்லாத ஜலம், அக்கினி, ஊதை, சூரியன் முதலிய கிரகங்கள் என்பவைகளைத் தேவர்களென்றும், மண்ணாகிய பூமியைப் பூமாதேவி யென்றும், தண்ணீராகிய கங்கையைக் கங்கா தேவி யென்றும், வெளி யாகிய ஆகாயத்தை ஆகாய வாணி யென்றும் அவயவ சொரூபப்படுத்திச் சொல்லுவ தென்னை?

குரு: அத்தோற்றப் பொரு ளொவ்வொன்றுக்கு முரிய அதி தேவதைகட்கு அந்தந்தத் தானங்களும் அந்தந்தப் பொருள்களுஞ் சுவதந்தரமா யிருத்தலால், அந்தந்தப் பெயர்கொடு அந்தந்தத் தேவதைகட்கே சொல்லப்படுகின்றன.
                                                            
(14)

சிஷி: ஆயின், பிருதிவியாகிய மண்; பிரம தத்துவமென்றும், அப்புவாகிய ஜலம்; விஷ்ணு தத்துவமென்றும், தேயுவாகிய அக்கினி; உருத்திர தத்துவமென்றும், வாயுவாகிய ஊதை; மகேஸ்வர தத்துவமென்றும், ஆகாயமாகிய வான்; சதாசிவ தத்துவமென்றும் தாங்கள் பயிற்றியதற்கு விரோத மாய்:              இஞ்ஞான்று மண்ணைப் பூமிதேவியென்றும், ஜலத்தை வருணனென்றும், கங்கையென்றும், அக்கினியை  அனற்கடவுளென்றும்,  ஊதையை  வாயு  தேவ  னென்றும், விண்ணை   * ஆகாயவாணியென்றும் பொருள்பட விகற்பமாய்ச் சொல்லுவ தென்ன?      ( * ஆகாய வாணியென்பது அசரீரி வார்த்தை: வாணி = வார்த்தை )

குரு: அந்த ஐந்து பூதாத்மகமான பஞ்சகர்த்தாக்களின் காரண தோற்றமாகிய வஸ்துக்களில் அவர்களே காரணமாயும் பிற தேவதைகள் இரகசியமான சூட்சும மாயும் வியக்தமான ஸ்தூலமாயுமிருப்பதால், அவ்விருவகையாயும் விளம்பப் பட்டன. இதினால், அவ்வதி தேவதைகளும் பிரதிதேவதைகளாய் விளங்கிற்றெ னற்குப் - பூமாதேவி பிரவிருத்திசத்தியாதலால் அஃது பிரம தத்துவமென்றும், கங்காதேவி வருணனுடைய சக்தியென்பது தொட்டு அவ்விரு வகையு மொரு வகை யாகுமென்றும், அஃது இரக்ஷகசத்தியாதலால் விஷ்ணு தத்துவமென்றும், அக்கினி சங்காரதேவதை யாகையால் அஃது உருத்திர தத்துவமென்றும், வாயு துரியாவஸ்தையாகிய மயக்கு தேவதையாகையால் அஃது மகேஸ்வர தத்துவ மென்றும், ஆகாயம் சப்த தன்மாத்திரையாகையால் அதற்கு அதற்கு ஆகாய வாணி அசரீரிவாக்குத் தெய்வமென்னும் அபிதானங்கள் வந்தனவென்றும், அஃது நிர்மல ஆகாயத்தைப்போல தெளிவைக் கொடுக்குந் தெய்வமாதலால் சதாசிவ தத்துவமென்று முணரக் கடவாய்!
                                                               
(15)

சிஷி: சரி, ஈஸ்வர பிரதிபிம்பர்களான தேவதைகளின் தன்மையை யுணர்ந்தேன். அமரர் கற்பத்திற்கு ஆண்டகையாகிய ஆகண்டலன் முதலிய முப்பது முக்கோடி தேவர்களுமென்று இவ்வியாசத்தின் றுவக்கத்தில் தாங்களோதிய விவரமென்ன?

குரு: ஜீவர்களியற்றும் நல்வினைப் பயனுக்குத் தீவினைப் பயனுக்குந் தக்க பலனை யளிக்கவெனவும், படைக்கப்பட்ட தேவர் முனிவர் முதலியோரைப் பாதுகாத் திரக்ஷிக்கவெனவும், அரசனாகப் பிரமதேவனா லுண்டாக்கப்பட்ட இந்திரனென்னும் ஆக்குவயத்தையுடைய தேவனையே - ஆகண்டலனென்றும், அவரோடு அவராளுகைக்குட்பட்ட தேவர்களையே 33 கோடி தேவர்களுமென் றுஞ் சொற்றதாகும்.
                                                          
 (16)

சிஷி: சிருஷ்டி கர்த்தாவாற் படைக்கப்பட்ட தேவர் முனிவர் முதலியோரை யிரக்ஷிக்க இரக்ஷக கர்த்தாவாகிய விஷ்ணுவும், பாவ புண்ணியங்கட்குரிய பலனையீய மேன்மூன்று கர்த்தாக்களும் நிலையாயிருக்க, இந்திரனைப் பொறுத்துச் சொல்லுவதென்னை? 

குரு: இரக்ஷா பெருமானாகிய ஸ்ரீ - விஷ்ணுவே அவ்விந்திரனாய்ப் பிரதிபிம்பி த்திருக்கின்றார். பஞ்ச கர்த்தாக்கள் அவரவர்கட்குரிய நன்மையைப் புண்ணிய ஜீவர்கட் குதவுவதேயல்லால், பாவ ஜீவர்கட்குரிய பாவப்பலனைச் சாதாரணத் துதவுவதில்லை. அப்படிக்கான பாவப்பலனை ஜீவர்கட்குத் தண்டனையாய் தகுதியுடைத் தேவர்களையும் நமனையும் வைத்து நடாத்துந் தேவ நியாயாதி பதியெனும் பெரிய வரசனாயிருப்பவர், - அவ்விந்திரனேயாம்.
                                                          
(17)

சிஷி: நன்று - தேவர்களுண்டெனற்கு நூலாதார முண்டா?                 

குரு: ஆம். அவைகள் வேத முதலிய கலைகளே.

                                                           
(18)

சிஷி: அவற்றுள்; ஹரன், ஹரி, அயன் என்னும் முத்தேவர்களை மட்டும் பெரும் பாலுங் கூறக் காரணமென்னை?

குரு: ஆக்கல், காத்தல், அழித்தலென்னும் முத்தொழில் கட்குள்ளேயே சர்வ கிரியைகளு மடக்க மாயிருப்பதால், அவைகளையும் அவைகட்குரிய தேவர் களையும் பெரும்பாலுங் கூறப்பட்டுள. எஞ்சிய துவிதகர்த்தாக்கள் கிரியை குறைந்த துரிய, துரியாதீத தேவதைகளாயிருத்த றொட்டு கிரியைகட் கெடுத்துக் கூறப்படாதது முறைமையே. ஆனால், சுத்த யோகாதி நூற்களில் விசேஷித்துக் கூறப்படுவதுண்டு. தவிர, இங்குணர்த்திய நிச்சயம் பகர்ந்த 12 -ஆவது வினா விடையிற் கணிக்கும் விவரிப்பைக் கவனிக்கச் செவ்வேதோன்றும்.
                                                         
(19)

சிஷி: தொழில் குயிற்றுமிடத்து அவ்வைந்து கர்த்தாக்கட்கும் தனித்தனி யொவ்வொரு தொழிலை யன்றி அதிகம் வாராவோ?

குரு: ஈசனருளால், தனித்தனி யாவும்வரும். ஆயினும் அவரவர்கட் கேற்பட்டிருக்கிற தொழிலே லௌகீகத்திற் பிரதானமாயிருந்து கொண்டிருக்கும். 
                                                                   
                                                                               (20)

சிஷி: அவ்வைவர்கட்குஞ் சுவதந்தர சத்திக ளுண்டென்றும், அவர்கள் சத்தியோடுகூடி  யுய்வார்க ளென்றும் நூல்கண் முறையிடுகின்றனவே? அதனாலவர் பரதந்திரரோ?

குரு: பிரபஞ்சம் மாயாமயமாதலால், அஃதை யுண்மைபோற் பிரேரிக்கும் ஈஸ்வரனுடைய மாயா சத்திகளைத் தானே தன் வயத்தாளு முறைமையிற் சுவதந்தரத்தொடும் பிரபஞ்சாதீத வுண்மையில் பரதந்திரத்தொடும் விளங்கு கின்றார்கள். இந்நியாயம் விளங் கற்பாலதாய் 1 - ஆவது வியாசம் 15 - ஆவது வினாவுத் தரத்தினும் இந்த வியாசம் 7 ஆவத் வினாவுத்திரத் தினுமுரைத்தோம்.
                                                        
(21)

சிஷி: அவ் விரண்டிலக்கணமும் ஒருவர்பாற் பொருந்துவ தெவ்விதம்?

குரு: இந்த்ரஜாலவித்தை செய்கிறவன் அத்தைப் பிறருக்கு மெய்யெனக்காட்டி தன்னுட்டானே பொய்யென நினைந்திருப்ப தேய்ப்ப அவ்விருவகையும்.
                                                       
(22)

சிஷி: கிருத்தியங்க ளைந்தினுள்ளும் தலையா யருக்கின்ற சிருஷ்டிக்குரிய திசைமுகன், அவ்வைவர்களினுந் தலைக்கர்த்தாவா யிருந்துகொண்டிருக்கக் கடைக்கர்த்தாவாய்க் கூறக் காரணம் யாது?

குரு:  பூதமைந்துள்  ஆகாயமுதல்  அப்புவரை  நான்கின்வழித்தாய்  நான்குகர்த் தாக்க டோன்றியதற்பின் ஐந்தாவதாகிய பிருதிவியி னிடமாய்ப் பிரமன் தோன்றி கடபடாதி தோற்றங்கள் கற்பிக்கப்பட்டன வால், ஜென்மத்தில் நால்வர்கட்குங் கடைசியாயும்    தொழிலில்  முதன்மையாயும்    சிருஷ்டிகர்த்தனைச்    சொல்ல லாகும். உரியதிருஷ்டாந்தம்: (1) முதலிலொரு வித்தாகவிருந்து,     (2) பின்னர் அதனுளி முளை தோன்றி,       (3) தழைதோன்றி,         (4) பற்பல கிளைதோன்றி,         (5) தகுந்த விருக்கமாய்ப் பிரவிருத்திப்பட்டதின்மேல், அவ்விருக்கமே யனேக வித்துக்களைத் தரற்கு ஒரு காரணமா யிருத்தல் போன்றாம்.
                                                     
(23)

சிஷி: சிலர்; பஞ்சகர்த்தாக்க ளைவருள்ளும் விநாயகரென்பவர் தலையாவாரெ ன்றும், எக்கிருத்தியங்கட்கும் முதன்மையாவ ரென்றும் தீர்மானித்து அவ்வாறு நடப்பதென்னை?

குரு:  ஆகமத்திற்  சொல்லப்படுகின்ற சரியை கிரியை யோகமெனு மூன்றினு ள்ளும் விநாயக மூர்த்தி முதல்வனா யிருக்கிறரென்றும், அந்த யோகத்திற்கான ஆதாரபீடங்க ளாறினுள்ளும் பிரதமமாகிய மூலாதாரத்தில் அவர் பதியாயிருக்கி றாரென்றும்,    முக்கிருத்தியங்களும்    பிரணவத்தா   னடத்தப்படுத   றொட்டு அதற்கும் பிரணவ சொரூபியா யிருக்கிறாரென்றும் சாஸ்திரங்கள் வெளிப்படு த்துகின்றமையால் அவ்வாறு நடப்பதாயிற்று.
                                                     
(24)

சிஷி: அம்மூர்த்திக்குரிய ஸ்வய கிருத்திய மெது வென்பதையும் அவருக்குச் சிந்தூர முகம் வாய்த்த தெவ்வாறென்பதையும், வாசஸ்தானம் இவ்வண்டத்தி லெங்ஙனென்பதையும் விவரிக்க வேண்டும்?                      



குரு: மொழிந்த தொழில்களில், விநாயகருக்கு மூலகாரணமா யிருத்தலைத்தவிர வேறில்லையென்றும், அப்படிக்கான நிஷ்களமூலம் தேவர்கள் வேண்டுதற்படி கஜமுகாசுர சம்மார நிமித்தம் *ஓரவதரம் அக்கஜ முகாசுர தோற்றத்திற் கெதிர் வடிவமாய்ச் சமைந்த தென்றும், நிலை அண்டத்தின் மூலஸ்தானமென்றும் அறி! அவ்வடிவஞ் சமைந்த வர்த்தமானத்தையும் இவ்வுளி சுலப முரைக்கக் கேட்டி!

மாகத னென்னு முனிவனுக்கும் விபுதையென்னும் இராக்கத ஸ்திரீக்கும்யானைமுகத்துடன் புத்திரனாயுற்பவித்து தேவர் பூதம் மனிதர்மிருகம் ஆயுதம் முதலியனவால் இறவா வரம் சிவபிரானிடம் பெற்றனன்.பின்பு அக்கஜமுகா சுரன்,  உம்பர்களை ஹிம்சித்துவருந் துன்பொழிக்கற்கென்று சிவபிரானார் கிருபை கூர்ந்து * வேதண்டச் சாரலில் ஓர்சோலை மத்தியிலுள்ள விசித்திர மண்ட பத்திற் கெழுந்தருளி வந்து அவண் வரைந்துள ஓவியங்களிற் சித்தித் திருந்த சிவசத்திபிரணவங்களை ஆண்யானை வடிவும் பெண்யானை வடிவுமாய்ச் சேரும்படிசெய்து அக்கருவினிடந் தாமே யமசஞ் செய்தவுடன் யானைமுகத் துடன் பல வுருக்கலந்த திவ்ய திருமேனியுடன் வெளி வந்தார்; அவரே விநாயகர் அவர் தமது நான்கு கொம்புகளில்  வலக்கொம்பை முறித்து அமர் முனையிற் கஜமுகா சுரன் பேரி லெறிந்து கொன்ற நிமித்தம் துன்பு தீர்ந்த வமரர்கள் தாங்க ளவ்வசுரனு க்குச் செய்து வந்த மரியாதையான தலையிற் குட்டிக் கொள்ளுதலை யும் தோப்புக் கண்டம் போடுதலையும் அவ்விநாயக மூர்த்திக்குச் சமர்ப்பித்து வருவதானார்கள். அம்முறையே நம்மவர்களு மியற்றி வருகின்றனர்.                                    (*ஓரவதரம் = ஓர்தருணம் ,  * வேதண்டம் = வெள்ளியங்கிரி )

 (25)

சிஷி: அவ்விநாயகரைப் பிரமசாரியென்றும், வல்லபை நாயகனென்றும், சித்தி, புத்தி நாயக னென்றுஞ் சிலர் பன்னுவதென்னை?

குரு: மூல ஸ்வபாவீகத்தில் அவர் பிரமசாரியென்றும், அசுரசம்மார காலத்தெதிர் த்த வல்லபை யாகிய மாயாசக்தியைத் தன் வயப்படுத்திக் கொண்டதுதொட்டு வல்லபை நாயகனென்றும் சித்தி புத்தி யென்கிறசக்திகளோடுகூடி நிற்றலினால் சித்தி புத்தி நாயகனென்றும் சொற்றதாகும். இவ்வரலாறு கணேசபுராணத்தில் விசேஷமாய்க் காணலாம். மேல்வழுத்திய தாற்பரியங்கள் ஞானார்த்தமுமாகும்.

                                                          
 (26)

சிஷி: அவருக்குப் பிள்ளையாரென்ற ஓர் நாமம் கற்பிதமாகவும், வயிறு விசால மாகவும், ஊர்தி உந்துருவாகவும் ஏற்பட்டதெது நிமித்தம்?



குரு: ஈசனுடைய பிள்ளையென்பதுபற்றிப் பிள்ளையாரென்ற வபிதானமும், பால்யதிசை மாறாத நித்திய பருவத்தையும் சமஸ்த கற்போதயத்திற்கு இட மாகிய வுதரத்திற்குந் தானேபிரணவ மென்பதையும் ஆரோபிக்கத் தொந்தி வயிறும் அதனாலவருக்கு "லம்போதரன் "  என்கிற பெயரும் கஜமுகனொடு பொருதும் * ஆயோதனத்தில் அவ்வசுரன் மாயமாய் உருவெடுத்து வந்த  **கந்துளத்தை மிஞ்சவொட்டாமற்பிடித்து மேல் ஆரோகணித்ததுமுதல்    அஃதூர்தியாகவு மேற்பட்டன.                                                                                                (* ஆயோதனம் = போர், ** கந்துளம் = பெருச்சாளி )

                                                           
(27)

சிஷி: அற்றேல், கற்போதயத்திற்கு மாத்திமோ பிள்ளையார் பிரணவமா யிருப்பது? 

குரு: தொழில்களைந்துள் சிருஷ்டி துவக்கமாயிருந்து கொண்டிருத்தலினால், கிரியா நாயாயம்பற்றி அன்னண மாயது. அதுவே முன்னும் பின்னும் வினைக் கீடாகிய சர்வ புவன காரியமாய் விளங்கும்.

                                                           
(28)

சிஷி: அவ்விநாயகரை அயன் கற்பித்ததாகத் தானே யிருக்கவேண்டும்? அவரை முன்னோனென்று மொழிவோதெற்றோ?

குரு: இலௌகீகத்தில் இருவினைக்குட்பட்ட ஜீவர்களை வேதன் படைப்ப தென்றும், அதன்மேல் விசேஷார்த்தமாய் தமதருட்சத்திகொடு ஈஸ்வரனே படைப்பதென்று முள்ளபடிக்கு அவ்வானை முகத் தேவை ஈஸ்வரனே படைத்தாரென்றும், சகல கர்மங்கட்கும் அவரை முன்னிட்டு நடாத்துதலால் அவைகட்கு முன்னோனெனப் பெயரேற்பட்டதென்றும் அறி!

                                                           
 (29)

சிஷி: பிரமன், பிரபஞ்ச சிருஷ்டி கர்த்தாவாயிருந்து கொண்டிருக்கச் சித்தஜ னென்பானொருவன் சிருஷ்டிக்குக் காரணமாயிருந்துகொண்டிருக்கிறானெ ன்றும் நூல்களு ரைப்பதென்ன?

குரு: ஜீவாத்மாக்களுடைய ஜடவுற்பத்திக்குக் காமங் காரணமா யிருத்தலாலும் அக்கமத்திற்குக் கந்தர்ப்பனாகிய சித்தஜன் கர்த்தாவா யிருத்தலாலும் அவன் விட்சேப தத்துவமாய்ச் சதுர் முகனுக் கநுஜனாய்ச் சிருஷ்டிக் குபபலனாய்  அவதரித்ததனாலும் அப்படி யுரைக்கலாயிற்று. இப்படியே ஒன்றுக்கொன்று பகரணமான காரிய நிமித்தம் கால கரணாதிகட்கும் அனேக தேவதைகளுண் டென்றறி!

                                                           
(30)

சிஷி: கந்தர்ப்பனாகிய இரதிகாதலன் உதயமா முன்னம் அவனதுவினை புரிந்தவர் யாவர்?

குரு: பிரவிருத்தி மாயை.

                                                           
(31)

சிஷி: அம்மாயை காமனேற்பட்ட காலமாகிய இக்காலத்தின்றோ?

குரு:  எக்காலத்தும் பிரவிருத்தி மாயையினாலேயே எழுவகைத் தோற்றங்களும் விருத்தியாகிக்    கொண்டிருக்கின்றன.    அம்மாயையின்     பிரேரகர்களாகவே       * மறைக்கயிற்றோனும் ** அலர்க்கணையோனும் பிரதிஸ்வரூபிகளா யிருந்து கொண்டிருக்கிறார்கள்.                                                                                                                                                                                                                   (* மறைக்கயிற்றோன் = பிரமன், அலர்க்கணையோன் = மன்மதன் )

                                                           
(32)

சிஷி:  இவ்வியாசத்தின் 12 - ஆவது வினாவுத்தரத்தில் பிரமதேவனை ஈஸ்வர பிரதிபிம்பனென்றும்  இங்ஙனம்  மாயையின்  பிரதிஸ்வரூப  னென்றும் இரு பிரிவாய்ச்  சொல்லுவதென்ன?

குரு: அணுவாகிய ஜீவான்மா ஈஸ்வர பிரதிபிம்ப மென்றும் அதின் பிரதிதத்துவ முதலாய சரீரம் மாயா பிரதிபிம்பமென்றும் இருவகையாய்ச் சொல்லப்படும். அதினாலெனவும், இவ்வுவளக வகையும் எவர்க்கும் பொதுவெனவு மறிதி!

                                                            
(33)

சிஷி: மேற்கூறிய காமனுக்குரிய விருதுகள் இயல்புக்கு விரோதமாய் கரும்பு, சுரும்பு, அரும்பு, காற்று, கடல், மடல், மதி, மகரம், குயில், தையல் என்பன வாயேற்பட்டிருக்கிறதுமன்றி அவன் அனங்கனாயு மிருக்கிறதாக வெளியா கிறது. அப்படிக்கானால் அவன் காரிய மெற்று?                      

குரு:  அவையனைத்தும் காமத்திற்குரிய சின்னங்களாகுமென்றும், விஷ்ணு புதல்வனாகிய அம் மன்மதன் சுயசொரூபம் ஓர் காலத்திற் சங்கரனாற் சாம்பராகி விட்டதென்றும், பின்னர் அனங்கனாய்ச் சூட்சும மாயாரூபம் பெற்றுச் சர்வ ஜீவாத்மாக்களின் சித்தத்தி னிடமாய்ப் பிரவேசித்துச் சித்தஜனென்னும் பெயர் பெற்றிருக்கிறானென்றும் புராணங்கள் புகலும். இதினால், எரிந்தெழுந்தவ னிவனென்றாம்.
                              
                                                             
(34) 

சிஷி: சரி விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்னும் நால்வர்களும் விநாயக மூர்த்தியும் வேதத்திற் குரித்தாகாமல், *விதி உரித்தான தென்னை?         (* விதி = பிரமா )

குரு: அவர்களும் ஆதிவேதத்திற்   குரியவர் கடான். அதில், அவ்வேதம் கர்ம நூலாக  வனந்த விதமாய் விரிந்து சகலதர்மமும் நீதியுமாய் விளங்கிய நிமித்தம், ஜீவாத்மாக்கள் செய்யும் இருவினைக்குத் தக்க பாவ புண்ணியங் கண்டு பலனுதவிச் சிருஷ்டி செய்வ தவசியம் பற்றி, ஈஸ்வரன் சிருஷ்டிகர்த்தாவிடம் வேதத்ததை  யொப்புவித்தார். அதனாலவ ருரித்தானார்.

                                                           
 (35)

சிஷி: அம்மறையோனுக்கு நாமக ளென்னுஞ் சாரதாள் நாவிலிருக்கிறாளென்று நூல்க ணுவலு கின்றன. அற்றேல், அவர் சுயமாய் *ஓத்தோதச் சக்தி யிலரோ?      (* ஓத்து = வேதம் )

குரு: ஈசனை  நோக்கித் தவஞ்செய்து கலைமகளாகிய வேதசத்தியைத் தான்  பெறுமுன்னரேயே, அப்பிரமன் வேதத்திற் குடையோரா யெழுந்தருளப் பெற்றார். ஆயினும் ஓத்தோதுங் காரியம் எங்கணும் விசேஷிக்கும் பொருட்டு, அப்பாமகளை நாவில் அந்த ரங்கமா யிருத்திக் கொண்டார். அச்சத்தி வாக்குக் கதி தேவதையாயுள்ளாள்.

                                                          
(36)

சிஷி: இம்மட்டில், தேவர்களின் றன்மையைத் தெளியலானேன். அதில், அயனைச் சிலரும், ஹரியைச் சிலரும், ஹரனைச் சிலரும் விசேஷமாய்ப் பிதற்றித் தர்க்கங்கள் பண்ணிக்கொள்ளுவதற் கிணங்க, வேத முதலிய கலைகளும் ஏற்பட்டிருப்பானேன்?

குரு: மூலப் பிரமாவின் சிருஷ்டித் தொழிலிற்காக அவராலேற்பட்டிருக்கிற வர்களையும், அவருரு வடைந்தவர்களையும்  அவரடியார்களையும் பிரமா வென்றும்; மூல விஷ்ணுவின் இரக்ஷகத் தொழிலிற்காக அவரா லேற்பட் டிருக்கிறவர்களையும், அவருரு வடைந்தவர்களையும், அவரடியார்களையும் விஷ்ணு வென்றும்,  மூல வுருத்திரன் சங்காரத் தொழிலிற்காக அவராலேற் பட் டிருக்கிறவர் களையும், அவருரு வடைந்தவர்களையும், அவரடியார்களையும் உருத்திர ரென்றுஞ் சொல்லப்படும். அவற்றுள், அம்மூல விஷ்ணு பிரமாக்க ளுக்கு அனேக பிரமா விஷ்ணு உருத்திரர்கள் தாழ்ந்தவர்களாயும், மூல விஷ்ணு வுக்கு அனேக விஷ்ணு உருத்திரர் பிரமாக்கள் தாழ்ந்தவர்களாயும், மூல வுருத்திர னுக்கு அனேக உருத்திரர் விஷ்ணு பிரமாக்கள் தாழ்ந்தவர்க ளாயும், கிருத்திய நிமித்தம் பிரமாண்டங்கடோறும் இருத்தலால், அவரவர் புராணகலைகள் அவரவரை யுயர்த்தியும் மற்றவரைத் தாழ்த்தியும் விளம்புகின்றன. இவ்வுண்மை யறியாமல், வாய் மதம்பேசி வெறும்புளித்தின்று நாக்கெரிகின்றார்கள். அதனானமக்குறும் பயனென்னை? கிருத்திய நிமித்தம் பிரமாண்டங்க டோறும் பிரம விஷ்ணு உருத்திரர்க ளுண்டெனற்குப்  பிராமாணியம்: ஸ்காந்தம் வீரமாகேந்திர காண்டம், 6 - ஆவது அத்தியாயம் 8,9,10,11,12,13 - ஆவது சுலோகங்களினருத்தம் " அத்தூத னெங்கு மோடிச்சென்று பார்த்ததில் அந்தப் பிரமா சகல தேவர்களுனும் ஸ்ரீ முருகேசனண்டையி லிருப்பதைக் கண்டு பிறகு திரும்பி வந்து செய்தியை யுள்ளபடி யுரைக்க " " சூரபத்மனும் அத்தூதன் வசனத்தைச் செவியுற்று அப்போது மனசில் பிரமாதி தேவர்களையெல்லாம் கோபித்து கொண்டு " உடனே மற்றோரண்டத்திற் கதிபரான பிரமனையழைப் பித்துத் தூதன் முகமாய் அவரை நோக்கி ஓ! பிரமனே! நமது நகரத்தை முன்னி ருந்த மாதிரி செய்து விடென, உடனே யப்பிரமன் " சீர்திருத்தி விட்டுச் சூரனிடஞ் செல்ல" "பின்பு சூரனும் அவரை வெகுமானத்துடன் தனது தூதர் களொடுகூட அவரது சுய அண்டத்திற்குச் செல்லும்படி யனுப்பினான் உடனே" அத்தூதர்கள் பிரமனை இப் பிரமாண்டத்திற்கு வெளியிற் கொண்டுபோய்விட அவர் சென்றுவிட்டனர் " என்பனவே. 

                                                          
 (37)

சிஷி: அஃதப்படிக் காயினும் திரிகர்த்தர்களில் வேதன் இருவரையும் படைத்த தாகவும், விஷ்ணு பிரமாவைப் படைத்து அவரா லுருத்திரனைப் படைத்ததா கவும், உருத்திரன் விஷ்ணுவைப் படைத்து அவராற் பிரமாவைப் படைத்ததா கவும், பராசத்தி உருத்திரனையும் வி


ஷ்

ணு வையும் படைத்ததாகவும் புராண கலைகள் புகலுவ தென்னை?

குரு: யாம் மேலே சொற்றதனைய அவரவர்கள் தன்மைக்குத் தாழ்ந்த வகையிற் படைத்ததையே அவ்வாறாகவும் ஈஸ்வரனுடைய சத்தியினின்று சதா சிவாதி பஞ்சகர்த்தாக்கள் தோற்றியதனால் அவர்களைப் பராசத்தி படைத்ததாகவுங் கூறலாயிற்று. அதில், எவற்றுக்குங் காரணம் ; இதுகாறும் விளக்கி வந்ததில் வாசாமகோசரமாய்ச் சேட்டித்து நின்ற ஈசனாகிய பரமசிவனேயாம். அப்பரமசிவ பெருமானின் வர்த்தமானங்களை அடுத்த வியாசத்திலருள்வேம்.

                                                       
 (38)

சிஷி: மெய்யே. இதுகாறுந் தேவர்களுண்டோ வில்லையோவென் றிருந்துள சந்தேகங்க ளொழிந்து உண்டென்பது கண்டு சந்தோஷமானேன். என் விஷயத் தில் இவ்வளவு சிரத்தை யெடுத்துக் கொண்ட தேவரீர் திருவடிகளைப் பன்முறை பணியா நின்றேன். மற்றுந் தெளிய வேண்டுவனவற்றை நாளைக் காலை யறிவித்துக் கொள்ளுகின்றேன். அவ்வண மருள் செய்க!

குரு: நன்று நன்று. சற்குருநாதன் தயவு பாலிப் பாராக.

                                  தேவர்களைக்குறித்த வியாசம் முற்றிற்று.
                                    ஆக வினா 80





                                                              ஓம்
                                                               குமாரபரமேஸ்வர பரப்பிரம்மனே நம:
                                                              
                                                           3 -ஆவது
                                         
        பரமசிவமென்பதைக் குறித்தவியாசம்
                                         
                   மறுதினோதயத்தில் விஷயப்பிரியன் வித்யாரண்யனைத்                                                 தரிசித்து வாழ்த்தி இதனை இயம்புகின்றனன்.            
                                                              
(1)



சிஷியன்: பரமசிவ வர்த்தமானங்களை அடுத்த வியாசத்தி லருள்வேமென்று நேற்றையத்தினம் நிகழ்த்தி யிருக்கிறீர்கள். ஆனால், அந்தப் பரமசிவ மென்பதைப் பஞ்சகர்த்தாக்களி லொன்றென் றுள்க லாமோ?

குரு: அவர்கட்கு மதீதப்பட்டிருக்கின்ற ஸ்வயம் பிரகாச வஸ்தென்னும் பரப் பிரம்மமாய்  விளங்கிக் கொண்டிருப்பதொன்றே பரமசிவமென் றறியக் கடவாய்! அதீதப்பட்ட தெப்படியென்னில் ரூபமா யுள்ள பிரம விஷ்ணு உருத்திர மகேஸ்வர வென்னும் நான்கு கர்த்தாக்கட்கும், அதன்மேல் ரூபாரூபமாயுள்ள சதாசிவ மூர்த்திக்கும் மேலதாய், அரூபமாயிராநின்ற பிந்து நாதம் சத்தி சிவம் என்ற நான்காகவும் விளங்கு மென்பதாம். இவ் வொன்பதையுமே சிவபேத மென் றுரைக்கப்படும்.
         பதமூர்த்திகளாகிய அனந்தேசுரர், ஸ்ரீகண்டர், காலச்செந்தீ யுருத்திரர்,  ஏகாதசவுருத்திரர், துவாதசவுருத்திரர்,  புத்தியஷ்டகர், கூர்மாண்டர், ஆடகர், சதவுருத்திரர், அஷ்ட மூர்த்திகள், நீலலோகிதர், கங்காளகபாலர், அஸ்வா ரோகணர், அஷ்டபைரவர், வீரபத்திரர் முதலியவர்களையும் உருத்திர ருரு வடைந்த 11 கோடி யுருத்திரர்களையும், அவருரு வந்தடைந்தோர்களை யும்,நாமமுடையோர்களையும், அவர் நாமமுடையோர்களையும், அக்கினி தேவனையும், பதத் தலைவர்களாகிய கபாலிகன், அசன், புதன், வஜ்ரதேகன், பிநாகி, கிருதசாதிபன், உருத்திரன், பிங்கலன், சாந்தன், க்ஷயாந்தகன், பெலவான், அதிபெலவான், மஹா பெலவான், பாசரத்தன், சுவேதன், ஜெயபத்ரன், தீர்க்கபாகு, ஜெலாந்தகன், மேக வாகனன், சௌமியகேசன், ஜடாதரன், ரத்னந்திரன், ஸ்ரீதரன், பிரசாதன், பிரகாசன், வித்யாதிபன், ஈசன், சர்வக்ஞன்,பெலிப்பிரியன், சம்பு, விபு, கணாத்தியக்ஷன், கிரியக்ஷன், திரிலோசனன் முதலியவர்களையும், சிவனாற் சிருஷ்டிக்கப்பட்டவர்களையும், உருத்திரனாற் சிருஷ்டிக்கப்பட்டவர்களையும், அவர்கணங்களையும் ஆகுபெயராற் சிவனெனு நாமம் சென்றபடி யுரைப்ப துண்டு. ஆதலால், ஈண்டு குறிக்கப்பட்ட சிவனெனப்படுவாரெல்லாம் அவ் வதீதச்  சிவனல்லவாம். ஸ்ரீகண்ட ரென்பவர் - பிரகிருதியின் கீழுள்ளகிருத்திய மைந்தையும் நடத்தும் அனந்தேசுரர் வாயிலாகத் தம்மை யதிஷ்டித்து நின்று நடத்தப்படுகிற சிவபெருமானுடைய முத்தொழில்களையும் பிரமா விஷ்ணு காலவுருத்திர ரென்பவர்களை யதிஷ்டித்து நின்று நடத்துபவராயும், பிரம விஷ்ணு முதலிய தேவர் முனிவர் அறுபத்துமூவர் முதலாயினோர்கட்கு நிக்கிரக அநுக்ரகங்களைச் செய்யுங் கர்த்தாவாயும், சைவம் புகுந்து சமயதீக்ஷை பெற்றவர் வழிபடும் மூர்த்தியாயுமுள்ள வுருத்திரராவார். மேலே ரூபாரூப மென்றது உருவும் அருவுமில்லாததாகும். எப்படியேல், ஸ்தூலமுள்ள வொருவன் அபமிருத்தியுவைத்தள்ளற்கான காயகற்பங்களை யுண்டு ஸ்தூலத் தைப் பொன்மயமாக்கி அதன்மேற் பிராணா யாம யோகத்தால் இப்பாலிருந்து பார்க்க அப்பாலுங் தோன்றுங் கண்ணாடி போன்ற பிம்ப பிரகாச தேகியாகி அதன்மேன் மந்திர சித்தியாகிய தவத்தால் தேவ அருளால் மேனவின்ற பிரகாச வடிவமும் இலகுவாய்க் கரைந்து மனிதர் கட்புலனுக் கெட்டாச் சூக்கும வடிவ த்தை  அதாவது தெய்வீக வுடம்பைப் பெற்று ஜனனமரணமும் ஊணுறக்க சஞ்சலமுமின்றி யிருக்குந் தன்மை போலாம். ஆனால், அவ்வுடம்பு கைப்பிடிக் சுகப்படத் தக்கதுதான். சதாசிவ சொரூபம் அப்படியகப்படா.
                                                                
                              (2)                    



சிஷி: ஆயின் சிவமெனும் நாமத்திற்குத்தா னருத்தமென்னை?

குரு:  சிவமென்பது: மோக்கம். அம்மோக்க மாகிய கேடற்ற முத்தியை நல்கும் பகவா னெவனோ அவனே சிவனென்றாம்.
                                                               
       
(3)



சிஷி: அம்முத்தியை நல்குவது அதீதச் சிவனன்றி வேறின்றோ?

குரு: அவனருளின்றி அஃதெஞ்ஞான்று மின்று.
                                                                
(4)



சிஷி: அற்றேல், ஏனையோர்கட்குஞ் சிவனெனும் பெயர் எதால் வந்தது?

குரு: சிவ மெனும் மோக்ஷமானது சர்வோபாதியு நசித்த சூனியமாதலால், பிரவிருத்திக்கு நிவர்த்தியா யேற்பட்ட சம்ஹார கர்த்தாக்களாகிய உருத்திராதி தேவதைகட்கும் அவர் கணங்களாதியோர்க்கும் தொழிலால் அப்பெயர் வரலாயிற்று. நிற்க, ருத்தரமென்பது: அக்கினியென வடமொழியிற் பொருள் படுகின்றமையால், அக்கினி ஸ்படிவமாகிய உருத்திரருக்கும் அவர் கணங் கட்கும் உருத்திரரென ஆகுபெயராலழைக்கப்படும். இன்னமும், தேவர்கள் பொருட்டும் அடியார்கள் பொருட்டும் பல வேடங்கொண்டு திருவிளையாடல் கள் புரிந்தது குறித்து குறிப்புப்பொருள் செம்பொருள் படும்படிக்கான நாமங் கள் அனந்தமாய் வந்திருக்கிறதென்றும், இத்தியாதி காரணங்களனைத்தும் சிவனுக்குச் சகள லீலையென்றும், அந்த லீலைக் கதீதப்பட்டு ஸ்வயம்புவாய் ஆதியந்தமற்ற அனாதியாய் நிற்பதையே சிவனுக்கு நிஷ்கள மென்று முணர் வாயாக!
                                                            

(5)



சிஷி:  உணர்ந்தேன். பிரவிருத்திக்கு நிவிர்த்தியா யேற்பட்ட சம்ஹார கிருத்திய மானது  - இயற்றுவார்க்குச் சிவனெனும் பெயரை நல்குவதாயின், அந்தச் சிவனெனப்படுவார் சர்வநாச சகிதர் தானோ?


குரு:  என்ன போதித்துங் குதர்க்கம் விட்டிலை. இதனால் நீ குதர்க்கியே. ஓ! குதர்க்கீ! அதுபற்றி யின்னு மியம்புதுங்கேள்! எல்லா ஆத்மாக்களுக்கும் சகல துக்க அஞ்ஞான சந்தேக பாவமென்பவைகளை நாசஞ்செய்து தெளிவைக் கொடுக்கின்றதே நிஷ்கள சகளச் சிவன் றன்மையாகும். அத்தெளிவினாற் றானாகிய வஸ்துவை யுணர்ந்து சாயுஜ்ய மென்கிற ஐக்யமாய்ச் சிவத்திற் சேர்வதே ஜன்மரகித முத்தியாகும். இதனால், சிவனெனுந் தன்மை சர்வபாவ நாசமென்றும், உருத்திரனெனுந் தன்மை துஷ்ட நிக்கிரகமென்றும், இவை யில்லாவிடில் ஜீவர்கட்கு நன்மை யெவ்வளவேனும் பயக்காதென்றும், சகல நியாயத் தீர்ப்பும் இன்னணமிருந்து முடிவில் சர்வ சம்ஹார பையிரவமாகவு நடிக்குமென்றும், மாயா தோற்றமாகியவிஷ்ணு பிர்மாக்களை முடிப்பதே சர்வ சம்ஹாரமென்று மெண்ணுக!
                                                                
(6)



சிஷி: இப்போழ் துரைத்த பாவநாசம் துஷ்ட நிக்ரக முதலியவனைத்துக்கும் ஈஸ்வரனாயும் மோக்கத்திற்குப் பரப்பிரம்மமாயு மிருப்பவர் விஷ்ணுவேயல் லாது வேறில்லையென்றும், அதே விதமாய்ப் பிரமாவைத் தவிர வேறில்லை யென்றும்   பலவாறு சின்னூற்கள் பகர்வதென்னை? 

குரு: மனிதர்களில் முமூட்சுத்துவத்தையடைந்த சுத்த ஞானியைத் தேவனாய் யாவருந் தரிசித் துபாசிப்பதாங்கு, மூல விஷ்ணுவுஞ் சர்வஞ்ஞத்துவ சர்வஞான சொரூபியாய்ப் பிரபஞ்சாதீத மாயாகுகையில் ஈஸ்வரனென்றும்  துரியப் பிரம மென்றுமே சொல்லப்படும்.         அதேவிதமாய்ப்     பிரமாதி தேவதைகளையு மெண்ணவேண்டும்.   நிற்க; முன்னொருகால் நீ நிகழ்த்துவண்ணம் " மாயை யால் உலகி லுண்மை யிழந்து தங்களைப் பரத்துவமாகப் பேசிக்கொள்ளப் படுவதைக் கடிந்து உண்மைஞானம் பிரகாசிக்கும்படியருள்க " என்று பிரம விஷ்ணுக்களே பரமசிவனிடம் விண்ணப்பித்துக் கொண்டதை ஸ்ரீகந்த புராணத்தின் பாயிரத்தினு மறியலாம். ஆதலால், உண்மையுளுண்மையாயும் எத்தேவர்களின் அறிவாயும் விளங்குவது பரமசிவமேயாம்.    
                                                              
(7)



சிஷி: அம்மூலவிஷ்ணு க்ஞான முடையவராய் சிவகட்டளையை வதியப்பெற்ற வராயிருக்க, அவரைச் சத்தியாகிய மாயையின் றோற்றமென்றும் மாலென்றும் சொல்லுவதி  யாது?

குரு: பரமாணுவிற் றோன்றிய மாயையின் பிரகிருதி தோற்றங்களாகிய அண்ட கோடிகளெல்லாம் அயனாற் சிருஷ்டிக்கப்பட்டதென்றும், அவ்வயனுக்கு விஷ்ணுவுந்தியாகிய வனசம் பிறப்பிடமாகுமென்றும்,அதினால் விஷ்ணுவுந்தி யிலுலகங்க ளடக்கமென்றும்,அம்மாயை புருஷரூபமாய்ச் சொரூபப்பட்டதில் விஷ்ணு மாயைக்குப் பிரதான வடிவமென்றும், மாயையின் காரியங்களாகிய புவனரக்ஷணையே அவருக்குப் பிரகிருத தொழிலென்றும், இரக்ஷணைக்காதாரம்  அம்புதமாதலால் அந்த ஸ்தானமே அவருக்குப் பள்ளியாகுமென்றும் புராண கலைகள் புகலுவதால் மாயையின் றோற்றமெனப்படுமென்றும், தாருகாவ னத்தவர்  நிமித்தம் சிவன் பிக்ஷாடன வடிவங் கொண்டபோ துண்டான மிக்க வழகினை மோஹினியுருவான விஷ்ணு கண்டு மோஹித்ததால் மால் என்ற நாமம் வந்ததென்றும், இன்னும் பல காரணங்கள்பற்றி அவருக்கு அனந்த நாமங்க ளேற்பட்டன வென்றும், இவைகளெல்லாந் திருலீலைக்குள்ளான விஷ்ணுலீலையாகு மென்றுந் தெளிய வெளியாம்.
                                                                 
(8)



சிஷி: இத்தகைய மாட்சிமை தங்கிய மஹா விஷ்ணுவைக் குறித்து " விஷ்ணு வைத் தரிசிக்கிறதினாலேயே சிவத்துரோக முண்டாகிறது, சிவனுக்குத் துரோகஞ் செய்வதனாலேயே பயங்கரமான நரகத்தையடைகிறார்கள் சந்தேக மில்லை, அதனா லொருபோதும் விஷ்ணுவின் பெயரையேனுஞ் சொல்லத் தகாது. "என்று கிரந்த நூல்களிற் கூறப்படுவானேன்?

குரு: 



சகள நிஷ்களத்திற் சர்வமும் சிவமயமாயிருத்தலினால் கிருத்திய நிமித்தந் தோன்றிய விஷ்ணுவுஞ் சிவத்திற் கன்னியமாகார். அப்படி அன்னியபாவனை கொள்வது சிவத்துரோக மாகுமென்றும், அத்துரோகம் எத்தேவரையும் பற்றக் கூடியாதா யிருத்தலினால் அது நரகத்துக் காளாக்குமென்றும், அதனால் ஒரு போதும் உண்மைப் பொருளாகிய சிவத்தைப் பேதித்து அரிய வி

ஷ்ணுவின் பெயரையேனுஞ் சொல்லத்தகாது, அது குற்றமா மென்றுங் கூரியதாகும்.  இதில், உண்மையி லுண்மையாக வைத்து எத்தேவரை யேத்தினும் போற்றினும் பிழைபடா வென்றும், அவ்வுண்மையை யிகழ்ந்து நிற்றல் அங்ஙனம் பிழைபடு மென்றும்  அறியலாமன்றோ. இன்னமும் அவ்வுண்மை யெப்படியேல், சிவமே வானமும் விஷ்ணுவே புவனுமுமாம். இதினாலேயே விஷ்ணுவுக்குப் " பிருதிவி பதி " என்ற நாமம் ஏற்பட்டிருக்கிறதாக வேதத்திலும் விளம்பலுற்றது. காண்க!    
                                                                

 (9)



சிஷி: நன்று, மூவருக்கும் மற்றியாவருக்கும் முதல்வனெனுஞ் சிவனானவர் தன்னைப்போற் பாரதி கொழுநற்கும் ஐந்து சிரமிருக்கப் பார்த்துப் பொறாமை கொண்டு ஓர் சிரசைக் கிள்ளியதெதுபற்றி?

குரு: சிருஷ்டிகர்த்தா நம்மைத் தவிர வேறொரு வருண்டோவென்று மமதை கொண்ட கமலயோனியினகங் காரத்தை மாற்றி யதார்த்தத்தைத் தெரிவிக்கும் பொருட்டு பையிரவமூர்த்தமாய் நின்று பரமசிவத்தை யவமதித்த நடுசிரசைக் கிள்ளி அச்சிரசையு மோரடையாளமாய்த் தன்வயப்படுத்தியும், அப்பிரமன்         மமதைக்குக் காரணமாயிருந்த அசுத்த ரக்தத்தையும் வெளிப்படுத்திக் கபாலத்திலேந்தினார் ஷாட்குண்யனாகிய சகளச்சிவன். அன்று முதலயனுக் கைந்து முகமின்றி நான்குமுகங்காளாயினவென்று நூனுவலும் இவ்விடயம் புநீதமின்றிப் பொறாமையன்று.
                                                             
 (10)



சிஷி: அன்னணஞ் சிரங்கொய்த தேவனைப் பிரமன் கோபித்ததாகவும் அப்போது பிரமதேவனுடைய பிரமஹத்தி பூமியின் கடையாந்தரம்வரை துரத்தித் தொடர்ந்து பன்னிரண்டாண்டு பீடித் தலைத்த தாகவும், அக்கபாலிக்குத் தான் பிதாவுங் குருவுமாக வுள்ளவனென்று பிரமன் பேசியதாகவும் புராணத்திற் பொறித்திருப்ப தென்ன?

குரு: அந்தப்படி  சிரந் துண்டுபட்டவுடனே அகங்கரிப்பின்றி பிரமாவும் அவர் சிரமுந் துன்புற்றுத் தன்னை நாடி வருந்துந் துயரொழிக்கும் பொருட்டும் பரமசிவ கட்டளையை நிறைவேற்றும் பொருட்டும் அத்தேவன் பரமசிவ தியானம் புரிந்து உலகெங்கு நடமாடியதையே சல ரவ்வாறுரைக்கத் துணிந்தார். புராண தாற்பரியம் மாறுபடுமாயின் நாலு மறை கட்கு முன்னம் பரமனருளிய ஆகமங்க ளுண்மைகூறப் பிரமாணமாயிருக் கின்றன. நிற்க; மேனொடித்த அயன் ஈஸ்வர பிரதிபிம்ப னாகலால் அத்தேவ னாகிய  கபாலியும் யாவற்றிற்கு மாதியான பரமசிவத்தைத் தியானிக்கலானார். அயன் சிருஷ்டிதேவனும் வேதனுமாதலால் அக்கபாலியாகிய பையிரவர்க்கு அவர் பிதாவுங் குருவுமாமெனப் பேசியது பொது நியாயம் பற்றியே. பையிரவர் கொய்த சிரமாகிய பிரமகாபாலம் பையிரவர் கையிலிருப்பதால் அவருக்குக் (கபாலி) காபாலியென்றும் பெயர் வரலாயிற்று.    
                                                                  
(11)



சிஷி: அந்தப் பையிரவர்க்கு யாதா மொருவர் தீண்டினாலும் தோஷ மென்கிற துர்ப்பிஷ்ட மிருகமாகிய நாயானது வாகனமா யேற்படுவானேன்?

குரு: அம் மிருகத்தினுடைய புசிப்பு அனாசார மென்பது பற்றியும், குரூரகுண முடைத்தென்பது பற்றியும், அதைத் தீண்டினுந் தோஷமென்றாம். பையிரவர்க்கு ஊர்தியான கணங்கள் வேதமாகும். பின்றொடருங் குணங் குறித்து அவ்வுருவா யிற்று. 
                                                                
 (12)



சிஷி: நன்று. இவ்வியாசத்தின் 4 -ஆவது வினாவுத்தரத்தி லுரைத்தவாறு நிஷ்கள சகள மிரண்டினுஞ் சிவனுக்குத் தனித்தனி நிலய மெவணென வருண்மின்?

குரு: 1 -ஆவது  வியாசம் 17 -ஆவது வினாவுத் தரத்திற்பகர்ந்தபடி சகளத்தில் மூன்று சரீரங்களும் நிஷ்களத்திற் சமஸ்தமும் நசித்த சூனியமும் சிவனுக்கு நிலயமாகும். அச்சூனியத்திற்கு * இருவகைப் பற்றையும் ஞானாக்கினியினா லெரித்துநின்ற    பரவெளியாகிய    மயான மென்றும்,      சகலசொரூபமும் அவருக்குச் சகளமென்றும், அவையல்லாத அதீதஞான ஸ்வயம் பிரகாசமாய் அணுவுக்கணுவா யெங்கணு நிறைந் திருப்பதே நிஷ்களமயமென்றும் வேதாக மங்கள்  கூறும்.                                                                                                                                                   ( * இருவகைப் பற்றென்பது: தன்னுடைய தல்லாத புவன போகங்களைத் தானென்கிற புறப்பற்றும், தானல்லாத அந்தக்கரணங்களைத் தானென்னும் உட்பற்றுமாம்.)
                                                               
(13)



சிஷி: இவ்வண்ணமாயின், விபூதி யுத்திராக்கந் தரித்த நந்திவாகன மான் மழு சதுர்ப்புஜ காளங்கண்ட திரி நேத்ர தாரியென் றெவரைச் சொல்லுவது?

குரு: 4 - ஆவது வினா வுத்தரத்தில் " சிவனுக்குச் சகளலீலை " யென்று பொதுப் பட வுரைத்ததிலேயே இவை யனைத்தும் பொருந்திய தென்றறியக் கடவாய்! சொற்ற அவ்வேடத்தையே சர்வ உருத்திரர்களுமுடையவர்களா யிருக்கிறார்கள். 
                                                                
(14)



சிஷி: சாற்றுஞ் சகளச்சிவன் நிலவரமோ? அநிலவரமோ?

குரு: ஈஸ்வர சங்கற்பமெனுந் தமது சங்கற்பமுள்ளளவு மிருந்து நிஷ்களத்தி னிலைப்பர்.
                                                                
(15)



சிஷி: அப்படியேல், அவருக்கது பிறப் பிறப்பாகாவோ?

குரு: சதுர் யோனியி லெதிலேனும் ஜெனிப்பதும் மரிப்பதுந்தான் பிறப்பிறப்பு. பிராகிருத்ததில் மற்ற வேடங்களெல்லாம் சித் விலாசங்களாகும். அப்படிக்கான சித்விலாச    சொரூபமா   யிராநின்ற   சகளேஸ்வரனுருவில்     வந்தவர்களும் யாதொரு    சித்விலாச    சொரூபத்தைக்   காட்டில்    அதுவும் பிறப்பிறப்பாகா. ஜீவர்கள் சிவத்தை மறந்த அகங்காரத்தா லெடுக்கும் ஜனனமே பிறப்பும் அது மரிப்பதே யிறப்புமாம். அது சிவனுக்குச் சம்பந்தமிலதென்றறி! சிவனுருவில் வித்துக்குண் மரமடங்கி யிருந்ததொவ்வ அனந்த இரகசிய சொரூபங்களுண்டு. அவற்று ளிதுகாறும் அம்சித்தவைகள்போக இன்னமும் அம்சிக்க வேண்டிய வைக  ளெவ்வள வுண்டென்பதைப் பெரிய மறையாதி கலைகளு 
மறிந்திலது.
                                                              
                                                          
(16)  





சிஷி: அச் சகளேஸ்வரனே கிருத்திய கர்த்தாக்களா யிருக்கின் அக்கர்த்தாக்கட்கு முதற் கர்த்தாவெனப் படுவார்  யாவர் ?  அவரபிதானமும்  பிற்கூறும்  விவரிக்க வேண்டும்? 

குரு: அவரே ஐமுக முள்ள சதாசிவன். அவரையே சகள லீலையின் மஹேஸ்வர னென்றும், அப்பா லுருத்திரனென்று மெண்ணத் தக்கது. இதினால் நிகழ்த்திய மூவரையும் மூன்றொன்றாயுள மூலவுருத்திரனென்றாவது, மூலச்சிவ னென்றா வது சொல்லத்தக்கது, இவரோடு அபரசிவமாகிய நந்திகேஸ்வரரையும்,  சக்தி யையும், விஷ்ணுவையும், பிரமாவையுங் கூட்டப் பஞ்சகர்த்தாக்களென்றாம்.  
                                                               
(17)

சிஷி: ஆயின், ஆதியான சகளேஸ்வரனுக்கு மாடு வாகனமும் துவஜமுமாகவும், கரியதள் வரியதள் உடையாகவும்,  என்பும் பாம்பும் அக்கும் உருத்திராக்கமும் அணியாகவும், வெண்சாம்பர் பூச்சாகவும், மானும் மழுவும் சூலமும் கபாலமும் கைக்குச்சுமையாகவும், குழவிவிதுவும் புனன்மகளிரும் தலைக்குச்சுமையாகவு மிருந்தக்காற் சிவனென்பார் சிறப்புடையரோ?

குரு: கேள்! திரிபுர சம்ஹாரத்தில் சிவனடியைத் தாங்கமாட்டாமல் இரதம் நெற நெறன முறிந்திடும்போழ்து விஷ்ணு விருஷபமா யெழுந்து சிவனடியைத் தாங்கினார். அதுபற்றியும், தரும தேவதையானது சிவனுள்ளளவுந் தானழியா திருக்கவும், சிவனைப் பூஜித்து விசுவாசிக்கவும், அவர் தரிசனமென்றும் இடை விடாதிருக்கவும், அவர் திருவடிகளைச் சுமக்கற்கோர் பணிவிடைப் பொருளா யிருக்கவும், அவர் காரியத்தை அவருத்தாரப்படி தான் பிரேரிக்கவும், அவர் தன்மையை மாயையாற் பேதித்துள்ள சமயபாவனா தேவர்களைப் புகழாமல் அவரையே புகழ்ந்திருக்கவும்,பரலோக அந்தராளச் சாளரத்தை மறைத்துச் சதா     வவர் பார்வையிலேயே படுத்திருக்கவுமாக வெண்ணங்கொண்டு அனேக கால நோன் பிழைத்துங் கைகூடாமல் ஓர்காற் சிவானுக்ரகத்தாற் புனித சொரூபமாகிய வெள் விருஷபமாய்ப் பரமனண்டையிற் சென்று அவர்க் கிதம் பிறக்கும் படியாகத் திருச்சரணை மெதுவாய் நக்கி நக்கிக் கொண்டு நிற்பதற் கிரங்கித் தேவர்களுந் திருப்திபட இஃது சத்திரூபமென அங்கீகரித் தாண்டுகொண்டார். இது பற்றியும் அவ்விடை வாகனமாகவுங் கொடியாகவு மமைந்ததாகும். தேவர் முனிவரைத் தொந்தரித்த கயாசுரனாகிய யானையும் அகங்காரத்தால் தாருகாவனத் திருடிக ளேவிய வேள்விப் புலியும் ஈசனை யெதிர்த்ததனால் அவைகளை வதைத்து அதளையுரித்து ஜீவர்க ளகங்காரங் கொளாமல் அடையாளமாய்த் தரித்துக் கொண்டது தொட்டு அவைகண் முறையே உசிதமுள போர்வையாகவும் உடை யாகவும், பொய்யாகிய மாயையை மெய்யாகிய மயானத்திற் சுட்டெரிப்பது தாமென்று எவரு மறிந்து பிழைக்க என்பையுஞ் சாம்பரையும் அடையாளமாகவும், எவருக்கு முதவாதவைகளுந் தமக்குதவுமென்றும் அரவவடிவான குண்டலி சக்தி தம் வசமென்றுங் காட்டவெனக் கருடனுக்குப் பயந்தொளித்த பாம்புகளுடன் சேர அவ்விருடிகளேவிய பணத்தைப் பணியாகவும், தாம் பெருமையில்லாச் சமநிலை யை யுடையேமென்றுலகுக் கறிவிக்க நவமணிக ளல்லாத அக்குமணியை அணியா கவும், தமது திரிநேத்திரங்களையும் விழித்த காலையிலுதிர்ந்த கண்ணீர் உருத்திரர்க ளணியத்தக்க வுருத்திராக்ஷமானதைத் தாமுமணிந்து காட்டியதாகவும், மேனொடித்த தாருகாவனத் திருடிகளால் வேள்வியினின்று முண்டுசெய் தேவப் பட்ட கலைமானைத் திருச்செவிகண் சிரவணஞ்செய் திருக்கும்படி யிடக்கரத்தி னும் எதிர்த்துவந்த சூலத்தையும் மழுவையும் மற்ற கரங்களினுமாக விருத்தி அச்சூலத்தைத் திரிமூர்த்திகளும் திரித்துவமும் இவ்வணமே என்றுஞ் சாக்ஷிசெய்து வேத நெறியை விட்டவர்க ளெவ்வருக்குந் தமது கரம் அக்கினியை யளிக்கத் தக்கது. அதுவே யுருத்திரர்கள் தன்மையாகுமென் றறிவிக்க வென்று மேற்படி ரிஷிக ளேவிய வேள்வித் தீயைப் பாணியின் மழுவாகவும், அந்தத் தாருகாவனத்து ரிஷிகளைப்போலக் "கர்மமே தெய்வம் " என்று மாறுபட்டவர்களையுந் தெளி விக்கப் பிக்ஷாடனவடிவந் தாங்கியதென்று காட்டக் கையிற் * கங்காள கபாலமாக வும், சர்வ ஜீவர்களை யுந் தாம் இரக்ஷிக்கும் பொருட்டு பாற்கடலிலெழுந் தெங்கும்  பரவக்கூடிய விஷத்தை யுண்டுவிடவென்று விண்டுவாதி தேவர்கள் கேட்டுக் கொண்ட படிக்கும்  உமாதேவியார் சம்பதப்படிக்கும் தம துத்தரப்படி கணத்தலைவரான ஆலாலசுந்தரர் திரட்டிக் கொடுவரக்கண்டு ஒரு திவலையாய் அகங்கையில் வாங்கி யுட்கொண்டு மேலுங்கீழுஞ் செல்லொட்டாது  கண்டத் திருத்தியும், தம்மை சரணென்றடைந்தவர்களைப் பாதுகாப்பதென் றெவரு மறிய இள மதியை வேணியிலடையாளமாகவும், பரமனை உமையவள் கண்புதைத்த காலையில் விரல்களிற்றோன்றி ஆயிரநூறுகோடி முகங்களாய்ப் பரவிய புனலாலும் பகீரத னிமித்தம் அளவுகடந் தெழுந்த கங்கையாலும் உலகுக் கபாய முறாதிருக்கவென்று அவைகளை ஓர் துளியாகத் தங்கிடை யைக்யமாகவுஞ் செய்துகொண்ட பரமனுக்குச் சிறப்பவர் செப்பவல்லார்! சிறுமை யெவர் செப்பவல்லார்! நீயே சொல்லுக!
( * கங்காள கபாலமென்பது முழுவென்பாகிய தலைமண்டை )
                                                                  
(18)     

சிஷி: இன்னமும், சிவனானவர் : பரசு கட்கம்  வஜ்ரம் அங்குசம் என்னு மாயுதங்களையும், * பாசத்தையும் ** கண்டையையும் கரங்களிற் றரித்திருக் கின்ற  தாகத் தெரிகின்றனவே : அவைகள் யாது காரணம் பற்றி?

குரு: கேள், மேற்கோள்.                                                                                                    "  

உருவருள் குணங்க ளோடு முணர்வரு ளுருவிற் றோன்றுங்                     கருமமு மருள ரன்றன் கரசர ணாதி சாங்கந்                                                       தருமரு ளுபாங்க மெல்லாந் தானறு டனக் கொன் றின்றி                             யருளுறு வுயிருக் கென்றே யாக்கினன் சிந்த னன்றே. "                                             
என்றபடி சிவனுடைய உபாங்க சாங்க அங்கங்களெல்லாம் ஜீவர்கட் கருளு ண்டாகி நன்மை பயக்கும் பொருட்டேயுள தெனத்தெளிக! பரசு சத்தியத்தையும், கட்கம் பிரதாபத்தையும், கண்டை சத்தநாத த்தையு முணர்த்துவதுபோல பிறவற் றையு மெண்ணுவதோடு நாகம் - இருத்தியாதி சுத்தமாயையுங் குறிப்பதனைய    *** பதி பசு பாசமென்னு மூன்றனு ளொன்றாகிய பாசமானது : அனாரதம் அளவிறந்த வலிமை யுளதும் செம்பிற் களிம்புபோல ஜீவனைப்பற்றி ஆத்ம சொரூபமாகிய அறிவைப் பந்தித்து ஆவரணிப்பதும், சிவ புண்ணியமாகிய கருமம் பக்தி உபாஸனை யோகம் ஞானம் என்னும் அதிகார வகைகளின் மேலீட்டாற் பக்குவப்படுவதும், எல்லினிருளிலும் அதியிருளா யிருக்கின்ற துமான அஞ்ஞான மாயையாகிய அதோ மாயையையும் உணர்த்துவதன்றி அபயகரம் அனுக்ரகத்தையுமுணர்த்து மென்க. இருளிலும் அதிவலி யென்றது: எல்லிருள் தன்னைக் காட்டிக்கொண்டு பிரபஞ்சத்தை ஆவரணிக்கும். ஆணவ விருளானது - தன்னையும் பதியையும் அபவாரணிக்கும் அதனா லென்க.              ( அபவாரணம் - மறைப்பு )
( *பாசமென்பது - கயிறு **கண்டையென்பது - மணி *** பதி பசுவனிலக்கணங் கள்; 25 - ஆவது வியாசம் 21 -ஆவது வினாவுத் தரத்தில் செவ்வென வெளியாம்.)
                                                                  
 (19)

சிஷி: பரமனார் கையில் தமருகத்தையும் சிரசில் நகுவெண்டலையையும் தரித்திருக்கவும், ஆமையோடு பன்றிக்கொம்பு மீன்கண் இவைகளைத் தலைமாலையோட ணிந்திருக்கவு முண்டாய காரண மென்னை?

குரு: மேற்றுலக்கிய தாருகாவனத் திருடிகள் அதர்வண வேத மந்திரங்கள் யேவினார்கள். அவைகளொருங்கே தமருக ரூபங்கொண்டு வருவதைத் தெரிந்து இது தமது சத்திநாதத்தை யுணர்த்தற் கோரடையாளமாமென்று தமது திருப்பா ணியிலே தரித்துக் கொண்டார். தம்மை மோஹித்துப் பின்றொடர்ந்த தன்மை யால் 48,000 முனிவர்க்களைப் பெற்றப் பெண்களுக்கு நாயகர்களான மேற்படி தாருகாவனத் திருடிகள் " சிவனைத் தின்றுவரக்கடவாய் " என்று ஏவிய நகுவெண்டலையையும் அடையாளமாகச் ஜடாமகுடத்திற் றரித்தார்.
         க்ஷீராப்தியை கடையும்போது மந்திரகிரியாகி மத்துக் கடலிலமிழ்வதைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவைத் தியானித்தார்கள். அவர் ஆமையாகி மத்தை முதுகி னிற்கும்படி தாங்கியபின் சரீர விகற்பத்தான் மமதை மேலிட்டுக் கடலைக் கலக்குகையில் கைலாய பதிக்கு விண்ணப்பித்த தேவாதிகட் கிரங்கி அச்சிவபிரான் விநாயக மூர்த்தியை யனுப்பினார். அவர் தமது துதிக்கையாற் கடனீரனைத்து முள்ளேறச் செய்கையில் அவ் வுன்மத்த ஆமையு முள்ளே சென்றது. பின்னர் வினாயகர் புழையினின்று நீரைச் சிந்தியவுடனே பலங்குன்றி மதிமயங்கி வீழ்ந்த ஆமையின் ஓட்டினைத் தமது கோட்டினாற் பெயர்த்துக் கொடுவந்து கடவுட்குக் காணிக்கையா யளித்ததையும் அடையாளமாய்த் தரிக்கவெனத் தேவாதிகள் வேண்டுதலையும் பரமனா ரோர்ந்து மார்பில் தரித்துக் கொண்டார்.
            பூமியைக் கவர்ந்துகொண்டுபோன ஹிரண்யாக்ஷனைச் சங்கரித்த விஷ்ணு வவதாரமாகிய பன்றி உன்மத்தங் கொண்டு உலகங்களை நிலை பெயரச் செய்ய வாரம்பிக்கையில் தேவர்கள் செய்த மனுவுக்காகத் திருவுள மிரங்கி வேலாயுதக் கடவுளை யனுப்பினார். அவர் தமது வேலாயுதத்தை அவ்வராகத்தின் றலையீற் குத்தி யமுக்கிக் கூரிய கொம்புகளைப் பெயர்த்தெடுத்து வந்து ஈஸ்வரனிடம் வைத்தபோது அதைய்யும் முன்னமனைய வடையாளமாக மார்பிற் றரித்துக் கொண்டார்.
         வேதங்களைத் திருடிச் சென்ற அசுரனைக் கொன்று இரக்தபானஞ் செய்து மஸ்தேறிய விஷ்ணு வவதாரமாகிய மீன் - உலகம் வருந்தும்படி கடலைக்கலக்கி யதைக் தீர்க்கவென்று பிரார்த்தித்த அண்டர்கள் துதி கண்ட சிவபெருமான் அருள்சுரந்து ஓர் பையிரவரை யனுப்பினார். அவர் அம்மீனை வலைவீசிப் பிடித்து அதன் கண்களைப் பெயர்த்துச் சிவ சன்னிதானத்தில் வைத்தகாலை தேவர்கள் வேண்டற்படி அஃதையு மடையாளமாக மார்பிற் றரித்து கொண்டார்.
                                                                
(20)

சிஷி: இந்த வியாசத்தின் 17 - ஆவது வினாவுத்தரத்துட் சொன்ன பிரகாரமாகச் சிவபிரா னுரித்த யானையின் வர்த்தமானத்தையும் அவண் கூறிய மெய்யாகிய மயானச் சுடலைக்கண் தரித்த என்புகளைப் பிரம விஷ்ணுக்களின் என்புக ளென்றும் சிவனணிந்த உபவீதம் கேசமென்றும் புராணங்க ளதிர்ப்பதையுஞ் சற்றே துலக்கி இம்ப ரருளவேண்டும் !

குரு: பூருவத்திலுள்ள கயாசுர னென்னும் ஓரவுணன் பிரமாவை நோக்கித் தவஞ் செய்து " தேவர்களை யெல்லாம் வென்று ஜெயம்பெற " வேணுமெனக் கேட்ட வரத்தையும், " பரமனிடஞ் சென்றா லழிந்துபோம் " எனப் பிரமா கொடுத்த வரத்தையும் ஏற்றுக் கொண்டு தேவர்களை வென்று முனிவர்களைத் தொடர் கையில் அவர்க ளஞ்சி நடுநடுங்கிக் காசிமாநகரஞ் சேர்ந்த போது அங்குமவன் றொடர்ந்து வந்ததைக் கண்டு மணி கர்ணிகை யென்னும் ஆலயத்துட் போய்ச் சிவனைச் சரணாகதியென் றடைந்தார்கள். கயாசுரன் தன் பராக்கிரம வலியை யெண்ணி  ஆண்டெய்தி   முனிவர்களைக்கண்டு   கொல்லவேண்டுமென் றுறுமுகையில் பரமேஸ்வரன் உக்ரமூர்த்தியாய்த் தோன்றி யானையாய் நிற்குங் கயாசுரனுடைய மத்தகத்தின் மிதித்துக் குப்புற வீழ்த்திப் பிடரியைக் கிழித்துத் தோலையுரித்துத் தாருகாவனத்து ரிஷிகள் போடப்பட்ட சாபங்களால் ஒரு தீங்கு மணுகாத் தன்மை வாய்ந்தவரும் விஷ்ணு வவதாரமாகிய சிம்மத்தைக் கொன்றுரித்த சர்மத்தை உத்தரீயமாய்த் தரித்துக் கொண்ட வருமான சிவபெரு மான் திருமேனியிற் போர்த்துக் கொண்டனர்.
         சர்வ சங்கார காலங்கடோறும் மாயா தோற்றங்களாகிய பிர்ம விஷ்ணுக் களின் சரீரங்களை யொழித்து நிற்கக்கூடிய வவதரம் அச்சரீரங்களையுந் தமது ஞானச் சுடலையின் கண்ணே சுட்டெரித்து மீந்த வென்புகளையும் மாலைகளாக வணிந்தருளினார். அவர் சிரங்களைச் சிரமாலையாக வணிந்தார். கேசங்களை உபவீதமாக வணிந்தார். இவைக ளெல்லாம் அடியார்களாகிய அவர்களுடைய சரீரம் வீண்போகக் கூடாதென்றும், நன்மை யுண்டாகவென்றும் அங்கீகரித்த காருண்யமே யொழிய வேறன்று. இந்நிகமங் கொண்டே நம்மவர்களும் மாய்ந்த களேபரங்களைச் சுடலைக்காக்குகின்றன ரன்றோ. இதில் ஸ்தூலார்த்தமும் சூட்சுமார்த்தமும் பொருந்துகின்றனவுங் காண்க !
                                                                     
(21) 


சிஷி: இத்தகைய சகளேஸ்வரன் முப்புர சம்மாரத்திற் கணபதியைப் பூஜித்ததா யிருக்கின்ற தெக்காரணங் கொடு?

குரு:  சர்வ சங்கற்பங்கட்கும் முன்னோனாகிய விநாயகரை முன்னிட்டுக் கொள்வதென்ற சிவனுடைய வரம் ஏற்பட்டபடிக்கு ஆங்கது நியாயமாயிற்று. அதினின்றுந் திரிபுரத்தைச் சிவன் செயலால் நகைத் தெரித்த திஞ்ஞால மறியாத தல்லவே நீ! துரருத்தம் பண்ணற்கு.
                                                                 
 (22)

சிஷி:  சிவனுடைய சகள கோலாகலங்க ளெல்லாந் தாங்கள் சாற்று மருத்தப் படிக் கானதா யிருக்கின் சத்துருக்களை நேராமலே தடுக்கவும், உலகத்திற்குத் தாம் உண்மையானவரென்று அவரவர் ஹிருதயத்திலேயே காட்டவுஞ் சக்தி யற்றவ ரிலரன்றோ?

குரு: உருவப்பட்ட ஜீவர்களுடைய ஆவரணஹிருதயம் உண்மை ஞானத்தைப் பொருந்தும் வரையில் எவ்விதத்தானும் பிரகாசிக்கத் தக்கதல்ல. அப்படிக்கான அக்ஞானத்தா னினைக்குஞ் செயல்கள் பல கோடியா யிருந்துகொண்டிருக்கும். அவைகளை யனுபவிக்க அவர்களே கன்ம வசத்தரா யிருத்தலினாலும் நிரவய வமா யிராநின்ற பிரமம் - ஜீவர்கணிமித்தம் ரூபாரூப ரூபங்களானது தொட்டு காக்ஷியிற் பிரமாணப் படுத்தி அறிவிலார் நினைக்க ஹேது வானதினாலும் அந்தச் சிவன் அவ்வணங் காட்ட வேண்டிய தவசிய மின்றே.
                                                             
(23)

சிஷி: நன்று, சிவன் பஸ்மாசுரனுக்கு  வரங்கொடுத்த காலை, அவ்வரத்தைப் பரீட்சிப்பதாக அவ்வசுரன் தன்கையைச் சிவன் சென்னியில் வைக்க வெத்தனப் படுகையில் அவர் பீதிகொண்டு ஐவேலிக் கொட்டைக்கு ளொளித்த தென்னை?

குரு: அவ்வசுரன் கொடிய தவஞ்செய்து " எவன்றலையி லென்கரம் வைக்கப் படுமோ அவன் றலை சாம்பராகுக " என்ற துஷ்ட வரத்தை அவன் கோருதற்படி வரவள்ளல் இனி நடக்குங் காரியமின்ன தென் றுள்ளிக் கொடுத்தபின், அவன் துணிவு கண்ட நிமிடம் தமது வரத்தைத் தாமே யழித்தல் தகுதியன் றெனவும் நாம் மறைய இவன் றேட விஷ்ணு வருக இவன் தொலைவானெனவுஞ் சிந்தித்து அங்ஙன முள்ள ஐவேலிச் செடிக்குண் மறைவதாய்ப் போக்குக் காட்டிய வவதரம் அவன் றொடர்ந்து  அச்செடியை வகிர்ந்து வகிர்ந்து தேடுவதில் விடா முயற்சியாயிருந்தான். அஞ்ஞான்று ஹரியானவர் மாலெனும் பேர் மகிமைப்பட ஜகன் மோகினியாய்த் தோன்றி அவனைத் தன் பேரின் மோஹிக்கச் செய்து நதியின் மூழ்கித் தவவேடம் நீக்கி வா வென்றிசைத்த வண்ணம் மாயமா யுண்டாக்கிய நதியின் மூழ்கித் தன்றலையைத் தேய்த்துக் கழுவும் போழ்து நவசத்திகளிலொரு தோற்றமாகிய திருமாலைத் திரோப வானுக்ரகத்தாற் கலந்து பிரமனைப் பெற்ற பிதாவாகிய பரமசிவனுடைய வரமே அவனைப் பஸபமாக்கி அவனுக்குப் பஸ்மாசுரனென்னும் பெயரும் வழங்கும்படி செய்தது. இதினால் வரோதயனாகி யெங்கு நிறைந்த விறைவற்கு நீ சிறுமை செப்பத் துணிவ தென்னை?
                                                             
(24)

சிஷி: ஸ்திரிகளின் வனப்பில் திலமத்தனை திலமத்தனை யெடுத்துப் பிரமன் படைக்கத் தோன்றிய திலோத்தமை யென்பவளின் அழகைச் சிவனானவர்; தமது ஒரு முகத்தாற் பார்த்து மாளாது நான்கு புறத்தும் நான்கு முகங்களை யுண்டுசெய்து கொண்டனர் என்பதாய்ப் புராணத்தில் வெளியாகின்றதே; அது கடவுட்கு நன்மார்க்க மாமா?

குரு: துஷ்டராகிய சுந்தோபசுந்தா ளென்னுந் தமையன் றம்பிக ளிருவரையும் நாசஞ் செய்யவென்று பிரமாதி தேவர்கள் திலோத்தமை யென்பவளை மன்மதனைப் போற்றேற்றி " நீ, உருத்திரமூர்த்தியினிடத்தில் வாக்குப் பெற்றுக் கொண்டு செல்", எனத்திட்டஞ் செய்தனுப்பிய பிரகாரம் உருத்திர மூர்த்தியை வணங்கிப் பிரதக்ஷண நமஸ்காரம் புரிகையில் அவள் வணக்கம் மிகவும் அழகா யிருந்தமையால் அவ்வாறு நான்கு வதனங்களையுந் தோன்றச் செய்துகொண்டு கண்ணுற்று " உன்னெண்ணப்படி யாகுக " என்று வாக்களித்தார். அஃது காமக் கருத்தை காட்டுவதன்று.
                                                             
(25)

சிஷி: பிருகு முனி பத்தினி நாகவல்லியென்பவள் அழகின் மிக்கவளாக யிருக்கி றாளெனக் கருதி சிவனானவர் மால் பிரமனுடன் சென்று மாறுவேடங் கொண்டு நிருவாண பிக்ஷை கேட்டகாலையில் அவள் மூவரையுங் குழந்தை களாக்கிப் பாலூட்டிக் கோபித்ததாய் வெளியாகின்றதே, அதனாற் சிவன் எத்தன்மையுளா ரென் றெண்ணலாம்? 

குரு: அவள், கற்பெனு மிலக்கணத்தில் மிக்க வளாயிருக்கிறாளென் றின்புற்று அன்னணம் மூவருஞ் சென்று அவளின் பதிவிரதா தன்மத்தையே வெளிப் படுத்தி னதாகும். அங்ஙன மவள் தங்களை மதியாமற் கோபித்தது குற்றமென்று " நீ யழகின்றி மாறுவடி வாகக் கடவாய் " என்று சபித்தபடி உலகில் ஆதியென்னுந் தாய்க்கும் பகவனென்னுந் தந்தைக்கும் ஊற்றுக்காட்டிற் பிறந்து மாரியம்மையா யிருக்கிறாள் - இவ்விடயத்தில் அணுமான மேனுந் தோடமின்று.
                                                            
(26)

சிஷி: ஈதிப்படிக்காயினும், தெருவிலே மதுரமான பாடல்களைப் பாடித் தாருகாவ னத் திருடிகளின் பத்தினிகளைச் சிவன் கற்பழித்தார் என்னலும் பொய்யாமோ? 

குரு:  அவ்விருடிகள் பிரமனை நோக்கித் தபஞ் செய்து சில வரங்களைப் பெற்ற பின்னர் " கடவுளன்றிக் கர்மங்களே தெய்வம் " என்னும் மீமாம்சா மதம்பற்றி பலமாய் நின்றதை மாற்றி அவர்கட்கு யதார்த்தத்தைத் தெரிவிக்கும் பொருட்டும் அவர்கள் தமதடியார்களாகி சிலாக்கியமாம் பொருட்டுமாக; " அவர்களிடம் மோஹினியாய்ச் சென்று அவர்களைக் காமக் கனலால் அறிவழியும்படி செய் " என்று உலகளந்தோனையனுப்பி தாம் அழகிய பிக்ஷாடனபடிவங் தாங்கி அவர்களது பத்தினிகளிடஞ் சென்றகாலை, அம்மாதர்கள் தங்களைக்கூடி மருவ வென்று பின்றொடர்ந்து கற்புநிலை குலைந்து கைவளைகளையும் உடைகளை யும் நழுவவிட்டு " இவ்வளைகளை யெங்கள் கைகளிலிடுமே" என்றவுடனே       " இப்போழ்துகூடா இனிமேற் கூடும். " என்று அவ் வளைகளைப் பொறுக்கிக் கொண்டு மறைந்தனர். அவர்கணிலை குலைந்தனர். அவ்விருஷி பத்தினிகளி னிச்சையைத் தமது அற்புத விலாச மாயா கோலாகலலீலா வினோதத்தாற் றீர்த்து மருளினார். பின்னர் அதை அவ்விருடி களறிந்து " நீங்கள் வைசிய ஸ்திரீகளாய்ப் பிறக்கக் கடவீர்கள் " என்று சபித்து நன்மார்க்கந் தெரிந்து கடவுளை நிதானித்து ய்ந்தார்கள். இதனால் ஒருபாத்தியாயனானவன் துஷ்டர்களாயிருந்த பள்ளிப் பிள்ளைகளை, நன்றாய்க் கண்டித்து வித்தை வருத்தியது போன்று அவர்களைப் பெருமைப்படுத்த வந்ததே யொழியச் சிறுமைப் படுத்தவாவது காமக் கருத்தோ டேயாவது வந்த தன்று.
                                                             
 (27)

சிஷி: பாலசந்திரனையும்  மந்தாகினியையும் ( மந்தாகினி - கங்கை ) வேறு தானங்களிற் பொருந்தாது, விசேஷமான மூர்த்தினியிற் பொருந்திய சிவன் கருத்து யாதோ?

குரு: அஃதாவது : நோற்ற நோன்பி னிமித்தம் அவர்களென்றும் விளங்கிடும் ஆகாயத்தி னிடமாயிருக்கும்படியாகத் தமது சென்னியாகிய பெரிய விண்ணிடை பொருத்தியதும், அக்கினிக் கண்ணினனலைச்   சமஞ்செய்திருக்க வெனவுமே கட்டளையிட்ட கருத்தாம்.
                                                           
(28)

சிஷி: மார்க்க சீர்ஷ ஆர்த்திரை யென்கிற மார்கழித் திருவாதிரையில் சிவன் பிறந்தார் எனப்பகர்வதால், சிவன் பிறப்பிறப்பற்ற கடவுளென்ப தெவ்விதம்?

குரு: அப்படிப் பிறந்ததெனல், ஓருருத்திர தோற்றமே யொழிய வேறல்ல.
                                                         
 (29)

சிஷி: அற்றேல், சிவன் மூங்கிலினிடத்தும், ஞண்டுக் குழியினிடத்தும் பிறந்தா ரென்ப தென்னை?

குரு: தொண்டைநாட்டிலுள்ள சிவஸ்தலங்கண் முப்பத்தி ரண்டில் திருப்பாசூரெ ன்னுந் தலத்தில் ஓர் மூங்கி லடியினும், மேற்படி நாட்டில் திருமாகற லென்னுந் தலத்தில் ஓர் ஞண்டுவளையினுங் காரணம் பற்றி மூர்த்திகரமாய் முளைத் தெழு ந்ததையே, அவ்வாறு சிவன் பிறந்தாரென் றதிர்ப்பதுள. அஃது பிறப்பன்றே.
                                                              
(30)



சிஷி: அந்தச் சிவன் முதலவனாயின், தமது பிள்ளயாகிய பாலசுப்ரமணியரிடம் கைகட்டி வாய் பொத்தித் தாமொரு சிஷ்யனாகவும், அவரொரு குருவாகவு மிருந்து; அக்குமரகுருவிடம் பிரணவத்துக்குப் பொருள் கேட்பானேன்?


குரு: அவ்விருத்தாந்தம் ஈண்டிசைத்தல் கூடா. 31 - ஆவது வியாசத்திற் றெளிவாய் வெளியிடுவோம். 
  
(31)

சிஷி: சரி. கஜேந்திரனென்னும் ஓர் யானை முதலையாற் பீடிக்கப்பட்டு                   " ஆதிமூலம் " என்று கூப்பிட்ட காலையில், ஹரியானவர் உதவியது போல உதவாதிருந்த சிவனை ஆதிமூலமாகக் கொள்ள நியாயமும் வருமா? 


குரு: அப்படிக் கூப்பிட்ட சமயம் இரக்ஷக கர்த்தாவாக நேமிக்கப்பட்ட திருமா லானவர் காவாதே விடின் அவர் - கர்த்தராகிய சிவபெருமான் தனக்கிட்ட கட்டளையை ஆலசியஞ் செய்தவரே யாவார். அன்றியும் அந்நேரம் அம்மாதவ னுதவா விடிற்றாமே யுதவுவார். நிற்க, முதலில் விஷ்ணு பிரமாக்களைச் சிஷ்டிக்கும் பிதாவும் முடிவில் அவர்களை மாய்த்துத் தமது சூலத்திலேந்தி நுதலம்பகத்தா லெரித்துண்டாகும் பராகத்தைத் திருமேனிக்கண் அணியும் சங்காரகிருத்தியத்தை வகித்த தேவும் அவரால் விளங்கத் தகுவாரேல், ஆதிமூல மவரன்றி வேறு முண்டோ? அறிதி!
                                                              
 (32)

சிஷி: முயலக னென்னும் ஓரரக்கனை அப்பரம சிவனானவர் என்றும் மிதித்துக் கொண்டு நிருத்தம் புரிவதாய்க்காணும் நியாயமென்னை?

குரு: முன்னம் பன்னிய தாருகாவனத் திருடிகள் வேள்வியிலுண்டு பண்ணிப் பரமபிதா பேரிலேவிய முயலகனைப் பிடித்து அவர் காலின்கீழே போட்டு மிதித்துத் தம்மை யெதிர்க்கும் அறிவில ரெவரும் அபஜயப் படுவாரெனச் சாக்ஷிப்படுத்தி நிர்த்தனம் புரிந்தனர். அந்நிர்த்தன மெப்படிப்பட்ட தென்னில், முன்னொரு காலத்தில் " நுமது சன்னிதானம் எனது அருள் " என்ற பராசத்தி க்குத் தமதருள் வலியைக் காண்பிக்க வென்று சத்தியை விட்டுப் பிரிந்தபோது அச்சத்தியுஞ் செயலற்று சர்வ ஜீவகோடிகளும் பிரேதமாய்ப் போனபின் அவள் தியங்கி 'அருள் செய்க ' என்று வேண்டிய காலை முதலிற் றமதருள் வடிவான உருத்திர கோடிகளையும், பின்னனர் ஏனைய ஜீவ கோடிகளையும் எழுப்பிக் கலந்து நடித்த தன்மையாகும். இன்னமும்; உண்ணு முணவாவது ஸ்தூல தேகாதி யந்தமும் பிரவேசித்து இரக்த தாதுவைப்பலப்படுத்தி ஓட நடக்க இருக்க படுக்கப் பண்ணுமாறாய்  சர்வ ஜீவாத்மாக்களின் தேகங்க டோறுங்கலந்து உயிரை யெல்லாம் ஆட்டுவித்து பஞ்சகிருத்தியங்களையும் அவ்வக் கர்த்தாக்களை யதிஷ்டித்து நின்று நடாத்துந் திருக்கூத்தாகிய நட்டுவத்தன்மையுமாம். இதுதான்   " அவனசையாம லணுவசையா" தென்பதும், அணுவென்றால், பரப்பிரம்ம சிவ சாயை யென்றும், உயிரென்றும் ஞானார்த்தமாகும்.
                                                             
(33)

சிஷி: ஏகாதச வுருத்திரர்களுடைய நாமங்கள் எல்லாம் சிவனுக்குச் சம்பவித்த மூல மென்னை?

குரு: அவர்களுடைய நாமங்கள் அவருக்குச் சம்பவித்ததில்லை. அவருடைய திருவருட் டிருநாமங்கயையே பன்னொரு வுருத்திரருந் தரித்தனர்.
                                                           
 (34)

சிஷி: ஆயின், சிவனுக் குண்டான ஆகு நாமங்கள் பலவுள், ஹரன், ஆலமர் கடவுள், ஈசானன், எண்டோளன், ஐமுகன், கரியன், சங்கரன், ஜடைமுடியோன், சம்பு, தாணு, நக்கன், பாண்டரங்கன், பிஞ்சகன், பித்தன், பூதநாதன், பேயோடாடி, யோகி, வாமதேவன், நம்பன், நீலலோகிதன், வீமதேவன் என்ற நாமங்கள் பல விபரீதாரத்தங்களைத் தருகின்றனவாய்த் தெரிகிறது. ஆதலால், அவைகளின் பொருள்களைக் கிருபை கூர்ந் தெளியேற் கியம்பவேண்டும்!

குரு: ஹரன் என்பது : நாசஞ் செய்கிறவர்; அதாவது பாவங்களை நசிக்கிறவர், எப்பொருட்கு மிறைவரென்றாம். ஆலமர்கடவுள் என்பது: பிரம புத்திரர்களான ஜனகர் ஜனந்தனர் ஜனாதனர் ஜனற்குமாரர் என்னு முனிவர்களுக்காக்கக் கல்லா லின் கீழ் தக்ஷணாமூர்த்தமா யெழுத்தருளி மறைகளுக் கெட்டாததாய் எப்பொ ருளுமாய் அப்பொருள் களல்லாதது மாயிருந்த வுண்மையை அது நிர்ச்சலனமா யிருந்த தொப்பத் தாமு மசைவற விருந்து வாக்கினாற் சொல்லாமல்  சின்முத் திரை பிடித்துக் காட்டிக் குறிப்பா லறி வித்தவரென்றாம். ஈசானன் என்பது :  ஸ்படிக நிறத்தோடு மேனோக்கு வீக்ஷண்யத்துடன் உள்ள ஈசானமும், பொன் னிறத்தோடு கிழக்கு நோக்காயுள்ள தத்புருஷமும், நீல நிறத்தோடு தெற்கு நோக்காயுள்ள அகோரமும், பொன்னிறத்தோடு வடக்கு நோக்காயுள்ள வாமமும், வெண்ணிறத்தோடு மேற்கு நோக்காயுள்ள சத்தியோஜாதமு மென்ற ஐந்து வதனங்களும் வெளிப்படையாயுள்ள சிவமூர்த்தத்தில், அனைத்தும் ஆளுகிற ஈசான முகத்தோர் என்றாம். எண்டோளன் என்பது: ஒரு மூர்த்தத்தில் எட்டுப் புஜங்களுளரெனவும், ஐமுகன் என்பது: மேற்றுலக்கிய ஐந்து வக்திரங்க ளுளரெனவும், கரியன் என்பது: அனைத்திற்குஞ் சாக்ஷியா யிருக்கிறவரெனவும் பொருள்படும். சங்கரன் என்பது: சங்காரகர்த்தாவென்றும், குலமிலாரென்றும், முடிந்த விஷ்ணுக்களின் பாஞ்சசன்னியமாகிய சங்குகளைத் தரித்தவ ரென்றும் கூறுவர் கூற்றாயும் வரும். இப்பொருள்களன்றி, சம் - சுகம், கரன் - செய்கிறவர், அதாவது சுகத்தைச் செய்கிறவர் எனச் சமஸ்கிருத தாற்பரியப்படி பொருள் கொள்வதே தக்கது. ஜடைமுடியோன் என்பது: தமது திரோபவமாயையால் ஜீவர்களுடைய தபசுகள் கெடா தியங்கற்கென்று தபக்கோல முடையாரென் றும், சம்பு என்பது: ஆத்மாக்களின் தரந்தெரிந்து உரிய சுகங் கொடுக்கிறவர், உயிர்த்தொகைகட்கெல்லாம் பிதாவென்றுமாம். தாணு என்பது: விண்டு விரிஞ்சனெனும் இருவரும் மாயையின் வசப்பட்டுப் " பரத்துவ நிச்சயம் "  தெரியாமல் நான் நான் என்று அகங்கரித்துப் பொருதுங்கால் இருவருடைய நடுவில் அடி முடி ரகிதமாய்த் தோன்ற வென்றும், அக்காலத் தவ்விருவரும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜிக்கும் புண்ணியத்தால் தங்கள் பதிகளை மீட்டும் பெற்றுக்கொள்ள வென்றும், அவர்கள் தரிசித்த அன்றிரவு மாசித் திங்கள் அமர பக்கத்துச் சதுர்த்தசியாகிய மஹா சிவராத்திரியில் சுயம்பிரகாச சொரூபமாகிய வன்னிமலையி லிங்கமாய் வெளிப்பட்டா ரெனவும், சஞ்சல மின்றி ஸ்திரமாயுள்ளவரெனவும் பொருளாம். நக்கன் என்பது: நிருவாணமாகிய மோக்கமுடையாரெனவும், பையிரவ மூர்த்தமா யானவரெனவும், பாண்டரங்கன் என்பது: பாண்டரங்கமெனுந் திருக்கூத் துடையாரெனவும், பிஞ்சகன் என்பது: பிரம்ம விஷ்ணுக்களுடைய தலைகளை யாபரணமாக வுடையார், சங்காரகர்த்தா வெனவும், பித்தன் என்பது: அக்கினி சொரூபர், ஞானலகிரியுள ஞானாநந்த ரெனவும் பொருள்படும். பூதநாதன் என்பது: தாருகாவனத் திருடிகளேவிய பூதங்களைத் தமக்குப் படைகளாக்கிக் கொண்ட கொடிய கணங்கட்கும் தமது சொந்தப் பூதகணங்களாகிய ஞான தத்துவங்கட்கும் நாதரெனவும், சர்வபூத பௌதிகங்கட்கும் நாதரெனவும் விசேடப் பொருள் பெறப்படும். பேயோடாடி என்பது: ஞானச் சுடலைப் பராகாசத்தின்கண்ணே வசிக்கும் மேற்படி ஞானதத் துவங்களாகிய பேயாங் கணங்களோ டாடிய ஆன்ம நாயகரெனவும், யோகி என்பது: ஆலமர் கடவுள் எனும் நாமார்த்தத்தில் வெளியான ஜனகாதிகணால் வரும் மஹாதேவனிடந் தெளிந்துகொண்ட வேதநிச்சயப்படி ஞானபாதத்தை யெய்த மனமடங்கா துழலுங்கால், உமையவளைப் பருப்பத மன்னனுக்குப் புத்திரியா யனுப்பிவிட்டுத் தனித்திருந்த பரமனார் அசரீரியா யுரைத்தவாறு கயிலைக்குத் தென்பாலுள்ள ஆலின் கீழிட மகன்று வெள்ளியங்கிரி யாலயத்துட் பரமசிவனைத் தரிசித்த நிமிடம் அவர்கட்கு இரண்டா முறையாகச் சரியை கிரியை யோகம் என்ற விவரஞ் சொல்லி அனிர்வசனமான ஞான நிச்சயத்தைக் குறிப்பாற் காட்டவென்று தமது திருக்கரத்தைச் சின்மய முத்திரை பிடித்தவாறு மனமடக்கும் வகையை யோக நிஷ்டை கூடித் தெரிவித்திருந்தார்; அது பரம சிவனுக்கு அற்பகாலமாயிருந்தாலும் பிரம விஷ்ணுவாதிதேவர்கட்கனேக யுகங் களாய்க் காணப்பட்டு சிருஷ்டிகண் மல்காமல் புணர்ப்பின்றி உயிர்களிடத்தே மோனத் தன்மையு முண்டாயிற்று. இதனால், உயிர்க் குயிராய் ரூபாரூபியா யுள்ள பரமபதியை யோகியென்றியம்பத் தகுமெனவும் பொருளாம். ஆயினும், முடிவிற்    * சூனியோபாதானமாய் நிற்கத் தக்கவரென்றே விசேடப் பொருள்படும். வாமதேவன் என்பது: ஈசனது ஐமுகங்களில் அழகிய வாமமென்ப தொன்றை யுள ரெனவும், நம்பன் என்பது: தலைமையிற் சிறந்தோ ரெனவும், நீலலோகிதன் என்பது:  விஷத்தையும் சர்ப்பத்தையும் உடையாரெனவும், வீமதேவன் என்பது: சமஸ்த வுயிர்கட்கும் பயங்கரமாயுள்ளவர், அதாவது எல்லாந் தமக்குக் கீழ்ப் படிந்து நடக்க வுள்ளவரெனவும் அருத்தமாகும்.                                                                                    ( * சூனியோபாதானம் = சூனியசிந்தனை )
                                                              
(35)

சிஷி: இவ்வணம் பரமசிவன் மகத்துவமுள தேவனாயிருக்க, எதை யுத்தேசித்து எந்தத் தேவனை நோக்கிக் காவிகாஷாய தண்டுகமண்டல தாரியாய்ச் சன்னிய சித்துக்  கொண்டார்?

குரு: இதற்கும் மேல்விளக்கிய விடையில் ஜடை முடியோனென்னும் நாமார்த்  தத்தின்  பொருளே யல்லாது வேறில்லை. மேலும், அவ்வேடத்திற்குரிய வானப் பிரஸ்தாச் சிரமத்திற்கு நாயகர் அவராதலால், பரிசுத்த *பஞ்சமுத்திரையென்னும் ஜடை,காஷாயம், உருத்திராக்கம், தண்டம், கமண்டலமும் விளங்க விருந்து யோகம் புரிவார்கட் கவரையன்றிப் போக்கிடம் வேறின் றெனவும் அதிஷ்டித்த முறையது வென்பதாம்.
( * விபூதி, உருத்திராக்கம், காஷாயம், இலிங்கம், பஞ்சாக்ஷரம் எனுமைந்தும் பஞ்ச முத்திரை யென்றுஞ் சின்னூற்செப்பும்.)
                                                                
 (36)

சிஷி: பராபரனாகிய சிவன் பத்திரைகேள்வனை நோக்கி " தக்ஷன் நமக்கு அவிப்பாகங் கொடுப்பதாக வேண்டிக் கொள்வனேல், மகத்தை நீ சட்டியாதே! இலதேல், நாஸ்திசெய்து இவணெய்துக " என்றாக்ஞாபித்ததாய்க் காண்கின் றது.அவ்விதம் அவிப்பாகத்தை யாசிப்பதும் அது கிடைத்தாற் புசித்துத் திருப்தி ப்பட வெண்ணுவதும் கர்த்தத்துவ மாமோ? 

குரு: அதன் பண்பு கேள். மந்திர பூர்வமாகச் செய்யும் மகத்தின் பிரயோஜன மாகிய புண்ணியத்தை அவிப்பாகமாகச் சேர்க்கப்படலாயிற்று. அப்புண்ணிய வஸ்துவை எந்தத் தேவனுக்காகவாவதீந்து அந்தப் பதவியை யடையக் கருது கிறவன் வேண்டற்படி அத்தேவ னங்கிகரித் துதவ வேண்டுமென்று வேத நியாய முள்ளபடிக்குப் பிரத்தியக்ஷம் அல்ல தப்பிரத்தியக்ஷமாக அவியை யேற்றுக் கொள்ளப்படும். அதைப் புசிப்பதென்பது; சூட்சுமம் அல்லது ஸ்தூலமாக விருந்துண்டு எக்ய கர்த்தாவை ஆசீர்வதித் தாவரணிப்பதாகும். இது பொது விதியே. பரமனை நோக்கி 10000 ஆண்டு தவமிழைத்துப் பெரிய செல்வத்தைப் பெற்ற தக்ஷப்பிரஜாபதியும் அவன் றாதையாகிய சதுர்முகனும் தங்க ணோக்கப் படி எளிவந்து ஈசனிணங்கவிலையென அகந்தை கொண்டு ஈசனுக்குப் பிரதியீச னியமிக்க வெனவும் யதார்த்த வீசனை நிஷேதஞ்செய்து விஷ்ணுவாதி தேவர் கட்கு அவிப்பாகங்  கொடுப்பதாகவுந் தீர்மானித்து இறைவனாகிய ஈசனும் அவர் கணங்களும் சிவ கடாக்ஷாதிக்க முனிபுங்கவர்களுந் தவிர மற்றைய தேவர் எண்டிசைப் பாலர் முனிவர் முதலிய யாவரு மொருங்குகூடித் தேவாதி தேவனு க்கு  விரோதமான மாரண ஹோமம் செய்ததை நாசஞ்செய்யவென்று சிவம் திரு வுளம் பற்றுகையில் அவர் சர்வ ஜீவான்மாக்களிடத்துந் தயையுள்ள தயாளு வாகையால் மிகவு மிரங்கி " நமது உருவாகிய நந்திதேவன் பிரமயாகத்தில் முன்னஞ் சென்று கேட்டவாறு விரோதமின்றி அவிப்பாகத்தை யளிப்பனேல், மகத்தை நீ சட்டியாதே " எனவுங் கட்டளையிட்ட காரியமா மென்றும், -- எக்கிய கர்த்தா பிரார்த்தனையான ஆரம்ப கிரியையே தீப மேற்றும் பண்டமென்றும், எக்கிய பிரேரகமே திரியென்றும், எக்கிய அவிப்பாகமே எண்ணெயென்றும், அவிப்பாகத்திற்குக் குறிப்பிட்ட தேவனே தீபத்திற்கு உபாதானச் சுடரென்றும், அவிப்பாக மேற்குஞ் சொரூப தேவனே ஏற்றிய தீபமென்றும், அவிப்பாக புண்ணிய பலனே தீபத்திற் கன்றித் தீபமேற்றியோனுக்குப் பிரயோஜனமான வெளிச்சமென்றும் உதாகரணப் பொருள் கணித்துணர்க! பரமசிவத்தின் அனுக்கிரக கயிங்கரியங்களை நடாத்தி வருகிறவர் நந்திதேவராவார்.
                                                                 
(37)

சிஷி:  அதிர்த்தபடி தக்கனுடைய யாகத்தைக் கெடுத்துத் தேவர்களையும் அதஞ் செய்யும்படி கட்டையிட்ட சுவாமியான வருடைய உத்தரவுக்கு விரோதமாய் வீரபத்திரரை நோக்கி " விஷ்ணுபேரில் கோபிக்கவேண்டாம் கோபிக்கவேண் டாம்" என்று சொன்னதாய்க் கந்தபுராணத்திற் காணுமாறு தடுத்த தெய்வம் யாது?

குரு: சிறுவிதி மக மழிக்கவென்று உமாதேவியின் கோபாக்கினியிற் றோன்றிய பத்திரகாளியுடனும் பரமனுடைய பாலநேத்திரத்துளி தோன்றி ஆயிரம்சிரமும் இரண்டாயிரங் கரமும் பிரகாசிக்க விபூதி முதலிய ருத்ர சாதனங்களும் சூல முதலிய அஸ்திரதேவ சின்னங்களுந் தரித்துள்ள வீரப்பத்திரனாகிய சிவன், தக்ஷயக்ய நாசஞ்செய்யுங்கால் அவரொடு பன்முறை போர்தொடுத்துவந்த ஹரியானவர்; அந்தச் சிவனின் ஓங்காரிப்பால் அசைவின்றி ஸ்தம்பிக்கப்பட்டும் அளவிலா ரௌத்ராகார சீற்றத்தைக் கண்டஞ்சியும் அங்ஙனம் மிக வருந்தி பரம சிவனை நினைக்கையில் பிதாவானவருடைய கிருபாகடா க்ஷத்தாலேயே ஆகாசத்தில் அவ்வித வாக்குண்டாயிற்றென அப்புராணமே புகலும்.
                                                               
 (38)

சிஷி: சிவன் நாணி பிகுந்த சிந்துவாரத்தைத்  தாத்திரியிலூன்றிக்கொண்டு மேனுனியிற் றலைசாய்த்துத் துஞ்சுங்கால் அந்நாணியைச் சிதலரித்துச் சிலை விசுக்கென நிமிர்ந்த நிமிடம் சிவனுடைய சென்னி பசியுண்டதை விண்டு கண்டு ஒட்டி யுயிரளித்தாரெனவும், ஓதிம முயர்த்தோனுக்கு ஒருகோடி சிவன் உயிர் மாண்ட காலம் அரை நிமிடமாகுமெனவும், சிவன்சத்தியின் வயிற்றில் விஷ்ணுவின் வேர்வையில் பிரமாவின் றொடையில் தாமதகுணத்திற் றோன்றினார் எனவும், சிவன் ஜாதியில் வைசியனாம் எனவும், ஓர் காலத்தில் விண்டுவுடன் சிவன் யுத்தஞ்செய்து அபஜய மடைந்து உயிர்வெளியாகக்கூடிய தருணத்தில் அவருக்குப் பிதாவாகிய பிரமா வந்து விண்டுவிடம் மிகமுறை யிட்டுக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதன்மேல் சிவன் உயிர்பெற்றார் எனவும்,  ஓர் சமயம்  மார்க்கண்டேயர் சிவனைப் பூஜிக்கக் கைலை முதலிய பதிகளிற் றேடியுங் காணாதலைந்து பின்பு மதுசூதனன் அனுமதியால் அவருடைய வாய்வழி புகுந்து உதரத்தெய்தி விண்டு விழுங்குண்ட சிவனை ஆண்டு கண்டு பூஜித்தாரெனவும், சிவன் இலிங்கமறுத்திழந்து அதைப் பெற்றுக்கொள்ளத் தபஞ்செய்தார் எனவும், நீ பிரம மல்ல உன்னை யடைந்தவர்கள் மோக்ஷம் பெறார்கள் விஷ்ணுவே பிரமம் என உரைத்துப் பிருகு ரிஷி சிவனைச் சபித்தர் எனவும் நூல்கண் முறையிடுவதை யோசித்தாற் சிவன் தன்மை யென்னவாம்?

குரு: சிலைநுனியிற் சிரம் பறிபோனவன் உருத்திர குழாங்களிலொருவ னென்  றும், மூலப் பிரமாவுக்குக் கோடி யுருத்திர கணங்களி னாயுளொழிந்தால் அரை நிமிஷ மாகுமெனக் கூறுவதுளவென்றும், பக்தர்கணிமித்தம் சிவன் வைசியனாய் வருவதுண்டு, அந்த நியாயமவருக்குச் செல்லுமா றுளவென்றும், சிவகணங்களி லொருவர்   ஹரியுட   னெதிர்த்து   அபஜயப்பட்டார்   அவரைக்   கற்பித்தவர் பிரமாவே யென்றும், சிவ கடாக்ஷத்தாற் சர்வ புவன சராசரங்களையுஞ் சிருஷ் டித்த திசைமுகனானவர் விஷ்ணுவி னுந்தியிலடங்குங் கற்பாந்த காலத்தில் உயிர்த் தொகைகளின் ஸ்தூல பிரவர்த்தியு மொடுங்கிச் சூட்சுமமாய் நின்ற ஆத்ம கோடிக ளனைத்தும் கற்பித்தவனோடு அவ்வுந்தியிற் றங்கிச் செயலற நிற்குந் தருணம் சிவனுடைய சகள ஸ்தூலமுங் காணாது நிஷ்கள சகள சூட்சுமமாய் நின்றதைச் சதாபூஜக மார்க்கண்டேயர் திரிசியத்திற் றரிசிக்க முடியாதலை வதைத் தானேவேலையிற் றுயில்வோ னோர்ந்து இவ்வழிபுக்குக் காணெனப் பணித்தனரென்றும், அரிய சங்கார கிருத்தியமாகிய மாயையி னொடுக்கம் சிவன்செயலாதலாற் சிவனைச் சிந்தித் துந்தியி லடக்கினாரென்றும், அன்னணஞ் சிந்தித்ததையே விஷ்ணு சிவனை விழுங்கினாரென்றும், பிறவுஞ் சிவனெனும் நாமமுள கணங்களையே அவ்வாறு விழுங்கினா ரென்றும், இலிங்கமறுப் புண்டவரும் பிருகுரிஷியாற் சபிக்கப்பட்டவரும் உருத்திர சங்கத்தா ரென்றுங் காண்பதோடு சிவ உருத்திர கணங்களாதியர்க்கும் சிவனெனும் பெயர் வருமாறு முன்னரேயே பன்னலுற்றேம். சிவன் சத்தியின் வயிற்றிற் பிறந்தாரென்பது; சிவதத்துவமாகிய நாதம் பிந்து சாதாக்கியம் மயேஸ்வரம் சுத்தவித்தை எனுமைந்தில் பிந்து தத்துவமாகிய சத்திதத்துவத்தி னின்று சதாசிவாதிகள் தோற்று முறைமையாகும். விஷ்ணுவின் வேர்வையில் பிரமாவின் றொடையில் சிவன் பிறந்தாரென்பது: 11 கோடி யுருத்திரர்களையுஞ் சிருஷ்டித்த 11 உருத்திரர்களும் சிவானுக்கிரகப்படி பிரமதேவரது நெற்றியி லிருந்து தோற்றிய முறைமை போலவும் பிரமன் விழித்துளிகளிற் றோற்றிய பேய்க்கூட்டங்களைப் போலவும் பல உருத்திரர்கள் தோன்றியதாகும். சிவன் தாமசகுணத்தரென்பது: உயிர்த்தொகை கட்கு  விதிப்படி கண்டனை  தண்டனை கொடாநிற்கும் உருத்திர தோற்றமாகிய ( காலாக்கினி ருத்திரன் )கால மூர்த்தி யாகும். தவிர முக்குணங்களுஞ் செயற்கையேயன்றி இயற்கையன்று. ஆதலால் குணரகித ஸ்வபாவனே சிவன் பிராமாணியம் :-
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவாசகம் குயிற்பத்து
"கீதமினியகுயிலே கேட்டியே லெங்கள்பெருமான்
பாதமிரண்டும் வினவிற்பாதாள மேழினுக்கப்பாற்
சோதிமணிமுடி சொல்லிற்சொல் லிறந்துநின்ற தொன்மை
யாதிகுணமொன்று மில்லானந்தமி லான்வரக்கூவாய்"
இந்தப்படியே கந்தபுராணம் ததீசியுத்தரப் படலத்திலும் வெளியாம்.                       ( செயற்கை - மாயையின் கூட்டுறவு )
                                                              
(39)

சிஷி: சிவன் அவ்விதகுண ரல்லவெனில் க்ஷீராப்தியி னமிர்தத்தையும் அதிற் பிறந்த விருத்திகளையும் கேசவன் தேவர்கட்குப் பங்கிட்டுத் தள்ளுண்ட விஷத்தையும் எருதையும் தாமதகுண முள்ள சிவனுக்குக் கொடுத்தார். அஞ்ஞான்று விஷத்தை விஷமென்றறியாமல் வாங்கியுண்டார் என்றும்,               "ராஜத சாத்துவிக குணத்தாற் பிரம்மாவையும் ராஜத தாமதகுணத்தா லென்னையும் விஷ்ணுவே பிறப்பித்தார்" எனச் சிவனே அகஸ்தியருடன் சொன்னாரென்றும் சின்னூற்களில் வெளியாவ தென்னை?

குரு: சிவபிரானுக்குரிய சர்வ வல்லமையில் பிரம விஷ்ணுக்களுக்கரிய துஷ்ட கண்டன மாதியும் ஒரு செயலா யிருக்கிறது.அச்செயல் தாமதகுணம் பற்றி யாமென வுள்கி அவரைத் தாமதகுணத்தா ரெனப் பிதற்றியதாகும். இங்ஙனம் அப்படி யுள்கற்கிடமின்றென மெய்ப்பிக்கின்றோம். நீ கேட்டி! சாதுவாகிய வொரு வன் யாதாமோர் காரணத்தாற் றனக்குண்டான கோபத்தைக் கோபிப் பதும், ஒருவன் ஆத்மலாபத்தை முன்னிட்டு அசன முன்னாது நோன்பிருப்பதும், ஞானியானவன் ஜகத்திச்சையை வெறுத்துப் பரத்திச்சையை விரும்பபுவதும் அணுத்துணையேனும் அகிர்த்தியங்களாகிய கோபத்தையும் வயிற்றுத் துரோகத் தையும் இச்சையையும் முறையே பொருந்தா திருப்பதுபோல பரமபதி நஞ்சு ண்டது துஷ்டகண்டனமே யொழிய தாமதகுண சுபாவமல்ல. விஷமென் றறியா துண்டாரென்பது; தக்கன் யாகசாலைக்கண் டோன்றிய ததீசிமுனிவரானவர் அங்குற்ற சிவதூஷணை கண்டு வெகுண்டு " சிவனை நீவிரிகழ்ந்து அவன் கதிசேராமலுழலக் கடவீர் " என்றவிதமாய் அன்றேயிட்ட சாபத்துக் குள்ளாகி மாறுபட்ட ( வைஷ்ணவப் பிராமணர் ) தக்கன் மரபிலுளார் துணிபேயாம். தள்ளுண்ட எருதென்பது; தருமதேவதையை ஊர்தியாகக் கொள்ளுந் தன்மை அவருக்கேயல்லால் ஏனைய தேவர்க்கில்லையென்பதுந் துணிபுதான். நீ பகர்ந்த பிரகாரம் அகஸ்தியரோ டுரைத்தவர் உருத்திரர்களி லொருவராவார்.
                                                              
 (40)

சிஷி: இன்னொரு ஆசங்கை. பிரசேதனனென்னு மரசன் செய்த தவத்திற்காகச் சிவன் தரிசனமாகிய போது " எவர் பரப்பிரமம், எவராலெமக்கு மோக்ஷமுண்டு, அவரை யனுக்கிரகஞ் செய்யவேண்டும்," என்று அவ்வரசன் கேட்க, அதற்கு சிவன் - " விஷ்ணுவே பரத்துவம், விஷ்ணுவே மோக்ஷங் கொடுக்கிறவர், நாமும் விஷ்ணுவையே ஆராதிக்கிறோம், நீயும் விஷ்ணுவையே ஆராதித்து மோக்ஷம் பெறுவாய் " என வுரைத்தா ரெனவும், " எவர்கள் சிவ விரதத்தைத் தரித்திருக்கி றார்களோ எவர்கள் அவர்களை யனுசரிக்கிறார்களோ அவர்கள் நல்லசாஸ்திரங் களுக்கு விரோதிகளான பாஷண்டி களாகக்கடவர்கள். மோக்ஷத்தை விரும்பு கிறவர் பொறாமையற்றவராய் சாந்தமுள்ள விஷணுவி னம்சங்களை யடை  கிறார் " எனவும் பாகவதத்திற் பகர்ந்த தெற்று?

குரு: பிரசேதனனுக்குத்தரிசனமானவன் விஷ்ணுபாலுதித் தவ்வழிநின்ற கீழ்ப் பட்ட வுருத்திரனாவான். இவ்வித வுருத்திரர் பல ரிருந்தன ரென்பதைத் தக்ஷயக்ஞ ஹதத்தில் ஈசானன் முதலிய பலர் பங்கப்பட்டாரெனுஞ் சரிதங்களால் ஸ்காந்த த்தி னன்குணரலாம். வேத வேதாகம புராணங்களில் பரமசிவனைப் புகழ்வதன்றி பிரமவிஷ்ணுவாதியரையும் புகழ்வது முகமனாகும். பிரகிருதி அபின்ன நிமித்தோ பாதானமாய் விளங்கிய விஷ்ணுவைக் கிரியாபாத த்திற் கைவிட்டு அரிய சிவ வேடத்தைத் தரித்தவர்களானாலும் அனுசரிக்கிறவர்களானாலும் அவர்கள் நற்சாஸ்திரங்களை விரோதித்த பதிதர்க ளாவார்களென்றும், அத்வைத மோக்ஷ த்தை நாடுகிறவர்கள் விகிர்தாகார பூதகணாதிபதிகளை வழிபடாது திரிமூர்த்தி களின் பிரம ருத்திரர்களை வழிபடுவதனை  யத் திருமாலையும் வழிபட்டு அவரம் சங்களைப் பொருந்தி அல்லது அவ்வுபாசனாமூர்த்தி சகாயங்கொடு பரமமுக்தி யையெய்துகிறவர்கள் பொறாமையற்ற மகான்களாவார்களென்றும் பாகவத த்திற் பகர்ந்த தொழிய பௌராணிகங்கடந்து சகுணபாவனை யேதுமின்றி நின்ற ஈஸ்வரனாகிய மஹாகைலைக்கரசை விட்டு விடச்சொல்லியதல்ல. அப்படிச் சொல்லில், அது தக்ஷனிச்சயமாகிய அக்ஞான மதமாமென்க. வேதத்திலுள்ள  சரபோபநிஷத்தில்:-
" யோவாம பாதார்ச்சித விஷ்ணுநேத்ர யதஸ்மை ததௌசக்ர                             மதீவ ஹ்ரஷ்ட ஸ்ததஸ்மை ருத்ராய நமோஸ்து "
என்று சொல்லப்பட்ட சுலோகத்திற் கருத்தம் : விஷ்ணுவின் கண்ணாற் பூஜிக்கப் பட்ட இடதுபாத முள்ளவரும், அதனால் மஹா விஷ்ணுவுக்கு மேன்மையுள்ள சக்கராயுதத்தைப் பிரசாதித்தவருமான ருத்ரனின் பொருட்டு நமஸ்காரம் என்றும் பரிஷ்காரமாய் வெளியாவதால் ; மேற்சொன்ன தாற்பரியம் மிக வுறுதியாம்.
                                                               

(41)

சிஷி: சிவனே கடவுளாயின் சிவனுக்கு நாமங்கள் வேறாகவும், கடவுளுக்கு நாமங்கள் வேறாகவும் நிகண்டாதிநூல்களில் இரண்டு பிரிவாய் நிகழ்த்தி யிருப்பானேன்?

குரு: அஃது சமயநியாயம் பற்றியே. அலாமல், நிகண்டியற்றினவர் புறச்சமய த்துள சமணமுனியன்றோ. நிற்க; சிவபெருமானுக்கு அனந்தன், அதிகன், அறவாழியந்தணன், ஞானமூர்த்தி, அஷ்டமூர்த்திதரன், பசுபதி, தேவதேவன், வேதாந்தன், நாதாந்தன், கருத்தன், ஈசன், மஹேசன், நாசமிலி, அகண்டன், பிரமாண்டநாயகன் எனபனவாதிய நாமங்களு முண்டென நூல்கள் கதறுகின்றமையால் சிவனே கடவுளென்றேன் உணரொணா?                                         ( சமயம் - சமயமெனும்மதம் )
                                                           
(42)

சிஷி: அற்றேல், சிவனுக்குப் பவன் என ஓர் நாம முண்டென்றறிகிறேன். அதுபற்றி யிங்ஙனம் பொருள் காணில், பவம் என்பது பாவம், பிறப்பு, அழிவு என வரும். அதனாற் சிவன் பாவமுடையார், பிறப்புடையார், அல்ல தழிவுடை யார் என்பதற் கையமென்னை?

குரு: இதுதான் * அதிரேகார்த்தம். ஓ! புத்திமானே! பவமென்னு மொழிக்கு நீ பகர்ந்த பொருளன்றி நிலைபரமென்றும்; சுத்தம் சுகமென்றும், மேலான தென்றும் பொருளிருப்பதைச் செவ்வனே நோக்க நின் விழி பார்வையிழந் ததோ? வேணுமென்று விட்டு விட்டதோ? அறியேம். கேள்! கடவுளுக்குங் குருடனுக்கும் "அதரிசனன்" என்று ஓரிய லுள. அதிற் கடவுளைக் குறிக்கும் போது கட்புலனுக் கெட்டாதவனென்றும், குருடனைக் குறிக்கும்போது பார்வை யிழந்தவனென்றும் அர்த்தஞ் செய்து கொள்ளவேண்டியது கல்விமான் களின் கடமையா யிருக்க; நீ பிதற்றியவாறு உவாலம்பனார்த்தம் புரித லொழுங் கன்று. இன்னமும் பவமென்பது சமஸ்கிருத அர்த்தப்படி நீ சொன்ன பிரகாரம் பிறப்பென்றும்; பிரபஞ்ச மென்றும் பொருளாம். அதனால் எல்லாவற்றையும் பிறப்பிக்கிறவர், பிரபஞ்ச கர்த்தாவென்று விசேடப் பொருள்படும்                      ( உவாலம் பனம் - தூஷணை ) ( * அதிரேகமென்பது = ஆச்சரியம் )
                                                                
(43)

சிஷி: ஈ திவ்வணமாயினும், சிவனுக்கு வேத கௌலேயகன் என்று ஓராக்கு வயம் நூல்களில் வெளிப்படுகின்றது அந்த வாக்கியத்திற்கு வேதகுலத்திற் பிறந்தவன் என்றொரே யர்த்தமிருக்கிறது. இதினாற் சிவன் பிறப்புளார் குலமு ளாரென்றும் வெளியாகின்றனவே : அஃதென்னை?

குரு: 
அப்படியன்று. கௌலேயகமென்பது நாய். அதனால் வேதத்தை 
நாயாக வுடையாரென்றாகும். அஃது இவ்வியாசத்தின் 11 -ஆவது வினாவுத்தரத்தில் விளக்கிய பைரவருக் குரியதொன்றாம். பிறவும், அர்ச்சுனன் தவத்திற் கெழுந்த காலை வேதங்களை நாயாகவுடையாரென்றுமாம்.
                                                              
(44)

சிஷி: கடவுள், சிவனெனப்படுவராயின் மற்றைய கருத்தாக்களும் அவர் பூண்ட வேடத்தையே பூணாது விவித வேடதாரிகளாயு மிருத்த லென்னை?

குரு: தொழிலிற்கேற்ற விதமான வேடங்களையும் விடயங்களையும் பிரபஞ்ச சகிதத்தில் அவரவ ருடைத்தாயினர். ஆயினும், சிவனைப் பூஜிக்குங்காலத்து உருத்திர  சாதனங்களோடு நிகழுவார்.
                                                            
(45)

சிஷி: மனுடரானவர்கள் தொழிலிற்குத் தக்க வேடதாரிகளாயிருப்பதில் கர சிரங்க ளியல்புக்கு விரோதமா யேற்பட வீக்ஷணித்ததில்லை. அது மானத் தொழி னிமித்தந் தேவர்களும் பல வேடதாரிகளே யாயினும் பலசிரம் பலகரங்களாயும் உடல் விகிர்த முளதாயும் இருக்கிறதாய் வெளியாகின்றன. அதுவும் சிவன் செயலோ?

குரு: மானிட ஜென்மத்திற்கும் மேலான ஜென்மமாயுய்யுந் தேவவகுப்பில் அவரவர்கட்குத் தக்க தேகத்தைத் தேவன் கொடுத்திருக்கிறார்; மேலும், அவர்க ளற்புதப் பிரவேச சரீரிகளாகவும் தேவன் சமீபத்து வாழ்கிறவர்களாகவு மிருத்த லினால் அவர்களை மனிதர்களேய்ப்ப வொரேவடிவாய் நினைக்கப்படா.
                                                             
(46)

சிஷி: அவர்களை நாம் பார்க்கச் சம்பவித்தால் தேவர்களென்று நிச்சயிக்க ஏதாவ தடையாள முண்டா?

குரு: அனேக முண்டு. அவற்றுட் பொதுவாய்த் தேவர்க ளெவ்வருக்கும் உள்ள திமை கொட்டாமையே யாம்.
                                                           
(47)

சிஷி: அவர்கட் கூணுறக்க முண்டா?

குரு: கேள்! பசிப்பிணியும் விழித்துயிலும் பூச்சியம். ஆனால், யோக நித்திரை யையும் அபேட்சித்ததைப் புசித் தனுபவிக்கும் சக்தியையும் பிரபஞ்ச சகிதத்தி லுடையவர்களா யிருப்பார்கள்.
                                                        
 (48)

சிஷி: அவ்வித பேறு வாய்ந்த வவ்வமரர்கள் இறந்து பிறந்துழலப் பெற்ற மூலமென்னை?

குரு: நான்முகன் வனைந்த க்ஷத்ரயாகத்தில் சிறுவிதியானவன் சிவதூஷணை செய்ததை மறாமற் சம்மதித்திருந்த விஷ்ணுவாதிதேவர்களை ஸ்ரீதிருநந்தி தேவர் நோக்கி " நீவீர் ஒரு பகலில் இறந்து பிறந்துழல்வதுமன்றி சூரனென்னும் அசுரனால் வாதைப்பட்டு அளவற்ற யுகம் இன்னலுக் காளாவீர்கள்" எனவுஞ் சபிக்கலாயிற்று! அதுவே பிரதமமூலம். பிரமாணம்:
ஸ்ரீ கந்தபுராணம் : பிரமயாகப்படலம்.
" ஈரமில் புன்மனத் திழுதை மற்றுனைச்
சார்வுறு கடவுளர் தாமு மோர்பக
லாருயிர் மாண்டெழீஇ யளப்பி லாவுகஞ்
சூரெனு மவுணனாற் றுயரின் மூழ்கவே. "
                                                                  
 (49)

சிஷி: சரி, நிகழ்த்திய பரமசிவனே தொழிற்படு கர்த்தாக்களாகவும், சர்வ சாக்ஷியா கவும் விளங்குகிறாரென் பதற்குப் பூர்வ லிகிகம் உண்டா?

குரு:- ஓம்! 
ஸ்ரீ திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்
திருவெழுகூற்றிருக்கையில்.
"ஓருரு வாயினை மானாங் காரத் 
தீரியல் பாயொரு விண்முதல் பூதல 
மொன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
யிருரோ டொருவ னாகி நின்றனை"
வேத த்திலுள்ள கைவல்யஉபநிஷத்தின்படி தியானஞ் செய்யப்படுவதில்:-
" உமாஸஹாயம் பரமேஸ்வரம் ப்ரபும் த்ரிலோசனம்                                               நீலகண்டம் ப்ரஸாந்தம் தியாத்வா முனீர்கச்சதி                                                          பூதயோனி ஸமஸ்த சாக்ஷிம் தமஸ:ப் பரஸ்தாத்."
என்று காண்பதோடு, வேத வேதாகம புராணாதி கலைகள் மிக்கன விளக்கவுங் காண்கலாம்.
                                                                
(50)

சிஷி: நன்று பாரதத்திற் பகர்ந்தபடி தீக்கடவுள் காண்டவவன மெரிக்கும்போது கிருஷ்ணார்ச்சுனாளோ டெதிர்த்த இந்திரன் முதலிய தேவர்கட்குச் சகாயமாய் வந்த சிவனானவர்: அக்கிருஷ்ணார்ச்சுனாளால் தோல்வியடைந்தது எதனால்?

குரு: அப்படிக்கானவர், திக்குபாலகரி லொருவரான ஈசானனாம். ஈதனைய விவித காரணங்களாற் குறைவாய் வெளியாஞ் சிவனெனப் படுவா ரெல்லாரும் கீழ்ப் பட்ட வுருத்திராதி தேவர்களென் றெண்ணக்கடவாய்!
                                                              
(51)

சிஷி:  ஆயின், சிவனுடைய மூர்த்தந்தான் எப்படிப்பட்ட தாயிருக்கும்?

குரு: இது குறித்து 1 ஆவது வியாசம் 25 - ஆவது வினாவுத் தரத்தினும் விளக்கினோம். இன்னமும் : நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் பருதி மதி ஆன்மா  என அஷ்டமூர்த்தமாயும், அஃது ஸ்தூலமாயும், சூட்சுமமாயும், காரணமாயும், மஹாகாரணமாயும், பிறவும் இவையமைந்த பற்பல வடிவங்களாயும், சிலர் கண்டதாயும், காணவரிதாயு மிருக்கின்றனவாம்.
                                                          
 (52)

சிஷி: மேலேயருளிய நந்திதேவர் என்கிறவர் யாவர்?

குரு:  சிவாதார முனிவருடைய தவத்தினால் அவருக்குப் புத்திரனாய்த் தோன்றி பரமசிவனைக் குறித்துத் திருவையாற்றிற் றவமிழைத்து நெற்றிக் கண் மான் மழு சதுர்ப்புஜம் காளகண்டம் முதலியவை விளங்கச் சிவசாரூபமும் இரஜிதப் பிரம்பும் சுரிகையும் கைலைக்காவலும் கணங்களுக்குத் தலைமையும் பெற்றுக் கொண்டார். அன்னணம் பெற்றுக்கொண்ட இரண்டாஞ் சம்புவாகிய ஸ்ரீ நந்தி யம் பெருமான்; கைலாய அந்தராளத்தின் யாமியவாயின் மண்டபத்திற் றென் முகமாய்க் கொலு வீற்றிருந்து சிவகட்டளைக் கெதிர்பார்த் திருப்பவராம். சிவ தரிசனத்திற்கு முன்னம் அவர் தரிசனமாம். அவர் தரிசனம் சிறந்த யோகீஸ்வர ர்கட்கு முபாதானமாகும். இவரே புராணங்களிலும் ஆகமங்களிலும் வேதங்க ளிலும் "பரமசிவமே பரத்துவம்" என்று முடிபு கூறியிருக்க " விஷ்ணுவே பரத்துவம்" என்று மாயையின் வயப்பட்டு அசத்தியம்பேசி நீட்டிய வியாசருடைய கரங்களைச் சபித்துத் துணித்த அபரமசிவமாவார். பிறவும், வசுமணாவதாரஞ் செய்து உலகத்தில் வீரசைவத்தை நிலை நாட்டிய ஆசானு மிவரெனப்படும். மேனுவன்ற கைலைக் காவற் கொலுமண்டபத்தில் மேற்கே சிரசும் கிழக்கே பாதமும் வைத்து வலத்தோள் கீழாய்ப் படுத்து நெற்றிலோசனச் சுடரானது பத்துயோஜனை வரை பரவி யாவரு முண்ணுழையாது காவலிருக்கும் படிக்கும் உள்ளே புகப்  பலம்பெற்ற சிவபதிகண் மட்டும் தடையிலாது அச்சுடருட் புகுந்து காற்புறமாயுள்ளே செல்லும்படிக்கும் சிவயோக நித்திரைகொள்வாரும், கோமுகம்போல நீண்ட வதனமுள்ளாரும் ஸ்ரீ சைலவடிவமாகிச் சிவனை வதியப் பெற்றாரும் இவரேயாவார். சிவாதார புத்திரரென்பதைச் சிலாதார புத்திரரென்று அக்ஷரப் பிசகா யதிர்க்கப்பட் டிருப்பதுமுள.
                                                         
(53)

சிஷி: இவ்வித தேவ நிச்சயங்களை இந்தப் பரத கண்டமாகிய ஹிமாசலத் திற்குத் தென்பாகஞ் சிறிது தூரமுள்ள பூமிகளின் வசிப்பவர்களிற்றானே சில ரொப்புக்கொண் டிருக்கிறதாய்த் தெரிகிறது. மற்றுந் திசா திசைகளில் வசிப்ப வர்களு மொப்புக் கொண்டிருப்பதுண்டோ?

குரு: அண்டப் பித்திகை வரையி லுலவக்ககூடிய மான்மியதேவர் முனிவர் சித்தர் களும் ஆங்காங்கு அருமறை விதிப்படி தேவ நிச்சயம் புரிந்தே யிருக்கிறார்கள். அதிற்சிலபாகம் சரியை, சிலபாகம் கிரியை, சிலபாகம் யோகம், சிலபாகம் ஞான மாகவும், சிலபாகம் சரியையாதி நான்கும் ஒழுங்காய்ச் சேர்ந்ததாகவும், சிலபா கம் அவற்றுண் மிகுதியுஞ் சிறிதுங் கலந்ததாகவும், சிலபாகம் நினைப்பின் வண்ணமாகவும் அனுசரித்துத் தேவாராதனை முதலியனசெய்து வருவதாகவு மிருப்பதில், மாயையின் விசித்திர காலகரணத்தால் மத்தியின் நூதனமான புறச் சமயங்களேற்பட்டு வெவ்வேறு கொள்கைகளாய்ப் பரவிக்கொண் டிருக்கின் றன, ஆனால், பெரும்பாலும் தேவநிச்சயமட்டும் விட்டுப்போக வில்லையென் பதுள்ளதே. நிற்க; உலகெலாம் ஒளிப்பிரகாசமாய்க் காணுங்கிரணங்களானவை பானு வென்னும் ஒரு கிரகத்திலிருந்தே தோன்றல் போலும், உடம்பெங்கும் பரவுமுதிரமானது ஹிருதயக் காயென்கிற  ஓரிடத்திலிருந்தே வெளிப்படல் போலும், அவ் வுதிரமாய் மல்கும் உயிருக்காதாரமாகிய ஆத்மா அறிவாகவியங் கினும் அது உள்ள மென்கிற ஓரிடத்திலிருந்தே நிகழ்வது போலும் தெய்வ நிச்சயம் உலகெங்கும் பரவியிருக்கினும் அதற்கு முக்கிய ஸ்தானமாகிய குமரித் தீவு என்னும் இந்தப்பூமியே பிரதானமாய் விளங்கும்.         காரணம்:  இதுமுன் அனந்த சிருஷ்டிகள் செல்லாகி இப்போது தோற்றமா யீக்ஷணிக்கத்தக்க    பூத பௌதிகங்களை முதலிற் சிருஷ்டித்தது இந்தப் பூமியிலேயே யாம். சிருஷ்டித்த பூமியின் புடையே வேதவேதாகம கலைகளில் ஜேஷ்டமும் தேவாலயமும் தேவ வாசமும் துணிபா யிருக்கவேண்டுமென்ற நிகமத்தால் அவைகளீண்டு விசேடித் தன, இமயபருவதத்துக்குத் தக்ஷிணத்திலுள்ள செவ்வாயின்பூமியில் தொண்டை மண்டலத்திலுள்ள திருக்கழுக்குன்றில் வேதத்தைக் கடவுளுத்தாரப்படி தேவ காவலில் வைக்கப்பட்டு அங்கெழுந்தருளப்பெற்ற கடவுட்கு வேதகிரீஸ்வரர் என்று திருநாமம் விளங்கிற்று. அதனாலும், தேவாதிகளாற் பரிபூஜனஞ் செய்யப் படும் காசி முதலிய க்ஷேத்திரங்களும் மூர்த்திகளும் கங்கை முதலிய 64 கோடி புண்ணிய தீர்த்தங்களும் மகேந்திரம் பொதியம் முதலிய சப்தகுலாசலங்களும் இங்கே மான்மியமாயேற்பட்டுத் தவங்களதிதமும் பலிக்கத்தக்கதனாலும், இமய கிரிக்கு உத்தரத்திலுள்ள கிம்புருடவருடமாகிய சந்திரனதுபூமியில் 1008 சிவாலய ங்களினு மொன்றாகிக் கர்த்தனெழுந்தருளிய வெள்ளியங்குன்ற முள்ள தனா லும் தேவதலமென உசித மாயிற்று. ஏனையவை தாழ்வாயிற்று. இந்தச் சிருஷ்டி யிலருளிய உண்மைப் பிரமாணங்களுக்கு மாறுபட்ட ஜீவன்கள் அவ்விதங்கர்த்த னிலையறியாது மாறுபட்டுழல்வதையே ஒரு தண்டமா யனுபவிக்கவென்று பரத கண்டத்தில் இந்திரம் செருகம் தாமிரம் கெபத்தி நாகம் சவுமியம் காந்தி ருவம் வருணம் எனும் எட்டுத் தீவுகளாகிய தருமமற்ற அன்னிய பூமிக்கண் தள்ளப்பட்டார்கள். தள்ளவும் படுவார்கள். மீட்டுந் தெளிவுறுஜீவன் நவின்ற தேவபூமியாகிய இக்குமரித் தீவிலேயே தோன்றி வேதாகமப் பிரமாணங்களைக்  கைக்கொண்டு கடைத்தேறும். கழுக்குன்றில் வேதத்தை ஏன் பந்தகமாய் வைக்க ப்பட்டதென்னில், வெளிவந்த வேதப்பிரதிகள் நாளிலே வியாசராதி முனிவராற் பேதப்படுமாயினும் கரத்தனருளிய வுண்மை உண்மையா யிருந்து இக்கலியுகம்     5,000 -ன் மேல் வெளிப்பட் டோங்கவென்றேயாம். அதில், இப்போழ்து வழங்க ப்படுகிறபடி சரியையாதி நான்கு பாதங்களெனல் தப்பு, கிரியையாதி நான்கு பாதங்க ளெனலே சரியென்றும்; ஆன பலவித பூர்வ நியாங்கள் வெளிப்படத் தகும் - அதுபோலவே பரமசிவ நிச்சயங்களெல்லாம் பரிஷ்காரமாய்க் காணத் தகு மென்றும், அவ்வேதம் - புறச்சமயங்களைக் கண்டித்து உட்சமயத்தை நிலை நாட்டுங்கால் எடுக்கப்படு மென்றும், அதற்காக ஸ்ரீ சுப்பிரமணியப்   பெருமா னின் அமிசையில் பிரம கோத்திரத்தில் மனுவாக வுதித்தவொருவர் எழுந்தருளி வருவாரென்றும் திருநந்திதேவர் மார்க்கண்டேயருக் கருளும் உலவாக்கிழி யெனுஞ் சாத்திரம் அருளும் வண்ணம் யாமு முரைத்தது மறிதி! நுவன்றபடி சரியையைக் கிரியையெனல், எத்தொழிலுக்குங் கிரியை துவக்கமாய்க் காணப் படலா லென்றும், கிரியையென்று முதலில் சொல்லவேண்டியதையே சரியை யென்று மாறிச் சொன்னது மொழிப்பிசகேயல்லான் முறைப் பிசகில்லை யென்று முய்த்துணர்க!
                                                                 
(54)

சிஷி: இன்னொன்று சிலர், தேவன் ஒருவனேயுண்டு ஏனை தேவர் இலரென்றும், சிலர், தேவனுமுண்டு தேவதூதர்களு முண்டென்றும் பற்பல விதமாய்ப் பேசுவ தென்னை?

குரு: இரண்டற்ற அத்வைதக் கொள்கையிற் பிரதமமான வஸ்துவைத்தவிர ஏனைதேவர்க ளுண்டென்னவாவது, அவர்களை யுபாசிக்கவாவது கடமைப் படாததால், அவர்கள் - தேவனொருவனே யெனவும்; பின்னுஞ்சிலர் தேவனொ ருவ னுண்டென்று அந்தந்தத் தேச பாஷியத்தில் அவருக்கு வேறு நாமங்களும் அத்தேவ ஏவலுக் கெதிர்பார்த்திருக்கிற தேவர்களையே தூதர்களென்று அவர் கட்கு மதேவிதமாய் வேறு நாமங்களுமுண்டெனவும் பேசுவார்கள். சிலர் - ஒன்று முணராமலே தங்கள் புல்லறிவிற் கெட்டின மௌட்டிய மதிப்பாலும், அத்வைத நூல்களைச் சிறிதுபடித்து அதன் கருத்தோரா வறிவீனத்தாலும், அவ்வாறு வழி வழி சொல்லிக் கொள்வதையே சரிசரியென்று வைத்துக் கொள்ளுந் தடித்தனத்தாலும் அப்படிப் பேசுவார்கள்.
                                                                  
(55)

சிஷி: சரி. பரமசிவ மென்பதை நித்திய நிஜாநந்த சாக்ஷாத்காரமாகிய ஈஸ்வர மெனத் தெளிந்த வண்ணந் தெளிந்துளேன். மற்றது பிற்றையாகும். ஆற்று மஞ்சலியை அங்கிகரித் தருண்மின்.

குரு: நன்று நன்று. பெரியதிருவுளந் திருவருண் புரிக.


( பரமசிவ மென்பதைக் குறித்த வியாசம் முற்றிற்று )









தற்போது கட்டமைப்பில் ....................
இன்னும் வரும் .........



தற்போது கட்டமைப்பில் ....................